Skip to main content

கமுதியில் 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய நிசம்பசூதனி சிற்பம்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

1,200 year old Nisambasutani sculpture in Kamuthi

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேலராமநதி கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆய்வாளர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கி.பி. 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிசம்பசூதனி சிற்பம் இருந்ததும் அதை கிராமத்தினர் வாழவந்த அம்மன் என்று வணங்கி வந்ததையும் கண்டறிந்தார்.

 

இதுகுறித்து ஆய்வாளர் செல்வம் கூறியதாவது: தற்போதைய மேலராமநதி கிராமம் இராமேஸ்வரம்- தூத்துக்குடி திருச்செந்தூர் ஊர்களுக்கு செல்லும் பெருவழிச் சாலையில் இருந்துள்ளது. நாயக்கர் ஆட்சிகாலத்தில் இந்த சாலை மங்கம்மாள் பெருவழிச்சாலை என அழைக்கப்பட்டது. அப்போது இவ்வழியைப் பயன்படுத்திய வணிகர்கள், யாத்திரிகர்கள் மேலராமநதி கிராமத்தில் தங்கிச் சென்றுள்ளனர். இவ்வழியே வந்த யாத்திரிகர்கள் இங்குள்ள ராமநதி என அழைக்கப்பட்ட நீரோடையில் நீராடி நிசம்பசூதனி அம்மனை வழிபட்டுச் சென்றிருக்கலாம் என்றார்.

 

நிசம்பசூதனி சிற்பம்

 

மதுரை அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன் கூறியாதவது, ''நிசும்பசூதனி தலையில் கேசபாரம் அணிந்தும், மார்பில் நாக கூச்ச பந்தம் அணிந்தும் இரண்டு புறங்களிலும் நான்கு கைகள் என எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறாள். எட்டு கைகளில் திரிசூலம், உடுக்கை, கேடயம், மணி, மற்றும் சில ஆயுதங்கள் தெளிவாகத் தெரியவில்லை. உத்குடிகாசனத்தில் பத்ர பீடத்தின் மீது காட்சியளிக்கிறாள். கழுத்தில் கந்தி, மாலை என அணிகலன்கள் அணிந்தும், இடுப்பில் மேகலையும் பட்டாடையும் அணிந்துள்ளாள். பீடத்தின் கீழ் நிசூம்பன் எனும் அரக்கனை வதம் செய்யும் நிலையில் உள்ளதால் இதனை நிசும்பசூதனி என்று அழைப்பர். 

 

1,200 year old Nisambasutani sculpture in Kamuthi

 

இதே போன்றதொரு நிசும்பசூதினி சிற்பமானது ஐம்பொன்னில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் துறைக்காடு ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ளது. ஆய்வாளர்களில் பலர் இதனை மகிஷாசுரமர்த்தினி என்றும் அழைப்பர். ஆனால் இங்கு மகிஷன் எனும் அரக்கன் எருமைத் தலையுடன் காட்சியளிக்கவில்லை. ஆகையால் இதனை அறுதியிட்டுக் கூறலாம் நிசும்பசூதனி. இதன் காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகும். காளி நிசும்பனை வெற்றி கொண்டதால் வெற்றியின் சின்னமாக இத்தெய்வத்தினை வழிபடும் மரபானது கி.பி.8ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து வந்துள்ளது.

 

விஜயாலயன் முதன் முதலில் சோழநாட்டில் அறிமுகப்படுத்தி தஞ்சாவூரில் ஒரு கோயில் கட்டினார். இக்கலைப்பாணியானது சோழராட்சியின் பிற்காலத்தில் தொடரவில்லை என்பது வியப்பாக உள்ளது. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தன்னுடைய புத்தகத்தில் மிகப்பிரசித்தியாக பேசியுள்ளார். மேனாள் தொல்லியல் துறையின் இயக்குநர் நாகசாமி அவர்கள் 1974 ல் வெளியிட்ட தனது ஆய்வுப் புத்தகத்தில் இக்கலைப்பாணியானது பல்லவர் கலைப்பாணியில் இருந்து சோழா்கால கலைப்பாணி வளர்ச்சி பெற்றது'' என்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்