Skip to main content

திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை..!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

10 years imprisonment for a teenager who refused to get married ..!


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள செம்பளக்குறிச்சியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரின் மகன் விஜயன் (24). இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியகண்டியங்குப்பத்தில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவருடன் பழகிவந்துள்ளார். மேலும், அந்த மாணவியைத் தனியாக அழைத்துச் சென்று இருமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

இந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த மாணவி விஜயனிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் விஜயன் மறுத்ததுடன், அவரும் அவரது பெற்றோரும் மாணவிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

 

இதுகுறித்து அந்த மாணவி, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 27.8.2017 அன்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விஜயனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, மாணவியை வன்கொடுமை செய்த விஜயனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மத்திய, மாநில அரசுகள் ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இந்த நிதியை சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து, 30 நாட்களுக்குள் வழங்க கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளதாக அரசு வழக்கறிஞர் கலைச்செல்வி தெரிவித்தார்.  இதையடுத்து விஜயன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்