Skip to main content

தூக்கியடிக்கப்படும் எல்.முருகனின் ஆதரவாளர்கள்.. தலைமைக்கு பறக்கும் அதிரடி புகார்கள்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

Supporters of L. Murugan  reports going to the BJP

 

தமிழ்நாடு பா.ஜ.க.வில் மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவர், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மாநில அளவிலான தேர்தல் செலவு கமிட்டி நிர்வாகிகளுள் ஒருவர் என இருந்தவர் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்த தணிகைவேல். அதிரடியாக அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியுள்ளது கட்சித் தலைமை.

 

ஏன் என கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, "நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை பயன்படுத்தி கட்சிக்குள் 2020-ல் வந்தார். அடுத்த இரண்டு மாதங்களில் மாநில அளவில் பதவியை வாங்கினார். அப்போது மாநில தலைவராக இருந்த முருகனின் நிழல்போல் வலம் வந்தார். அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தந்தார். இவரைப் பற்றி கட்சிக்கு வந்த புகாரில் பல கோடிகள் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதனையெல்லாம் தேர்தலின் போது நக்கீரன்தான் வெளிப்படுத்தியது. அதுமட்டுமல்ல சி.பி.ஐ.யில் இவர்மீது வங்கி மோசடி வழக்கு உள்ளது. இதுபற்றி டெல்லிக்கு புகார் சென்றபோது, தணிகைவேலுக்கு சாதகமாக ஐ.பி. ரிப்போர்ட் வாங்கி மேலிடத்தை கன்வின்ஸ் செய்து தணிகைவேலுக்கு சீட் தந்தார் முருகன். வேட்பு மனு தயார் செய்தபோது லீகலான பல புகார்கள் வெளியேவர, அதிர்ச்சியாகிவிட்டோம்.

 

சென்னையில் இருந்து இரவோடு இரவாக திருவண்ணாமலை சென்ற மண்டல பொறுப்பாளர் கே.டி. ராகவன், மற்றொரு முக்கிய நிர்வாகி, தணிகைவேலை அவ்வளவு மோசமாக திட்டினர். வேட்பாளரை மாற்ற அப்போதும் முருகன் ஒப்புக்கொள்ளவில்லை. மனுவை தள்ளுபடி செய்யாமல் இருக்க வேண்டுமென அப்போது முதல்வராக இருந்த எடப்பாடியிடம் கேட்க, விவரத்தை தெரிந்து கொண்டவர் அ.தி.மு.க. சார்பாக வழக்கறிஞர் அன்பழகனை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார். மனுக்கள் பரிசீலனையின் போது தி.மு.க. வழக்கறிஞர்கள் தணிகைவேல் மனுவை எதிர்க்கவில்லை, இதனால் மனு ஏற்கப்பட்டது.

 

Supporters of L. Murugan  reports going to the BJP

 

இங்குதான் எங்களுக்கு முதல் சந்தேகம். எல்லோரும் வீக்கான வேட்பாளர் என்பதால் எதிர்க்கவில்லை என்றனர். இதன்பின்னால் வேலுவின் திட்டம் ஏதாவது உள்ளதா என சந்தேக மடைந்தோம். பிரச்சாரத்தில் இருக்கும்போதே வேலுவிடம் லம்பாக டீல் போட்டார் என்கிற தகவல் எங்களுக்கு வந்தது. இதனால் திருவண்ணாமலை தொகுதிக்கு பா.ஜ.க.வின் தேசிய - மாநில முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரத்துக்கு வரும் பிளானை கேன்சல் செய்தோம். பிரச்சார நிதியை கையாள தனியாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. தோல்வி உறுதி என்பதால் ஓட்டுக்கு பணம் தருவதை இந்த தொகுதியில் நிறுத்திவிட்டோம்.

 

மாநில தலைவராக இருந்த முருகன் மாற்றப்பட்டு அண்ணாமலை வந்ததும், முருகனுக்கு எதிரானவர்கள் அடுக்கிய புகார் பட்டியலில் தணிகைவேல் மீதான குற்றச்சாட்டுகள் பிரதானமாக இருந்தது. இந்நிலையில் ஜூலை இறுதியில் கட்சி நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலைக்கு சென்ற அண்ணாமலை, தணிகைவேல் எங்கே என கேட்டார். தேர்தலுக்கு பிறகு தலைமறைவாகிவிட்டார், கட்சியின் எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை, மாவட்ட துணைத்தலைவர் அருணைஆனந்தன், தேர்தல் செலவுக்கு தந்த பணத்தை திருப்பிக்கேட்டதால் அவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கும், பணமோசடி குறித்தும் விவரமாக கூறியுள்ளார்கள் நிர்வாகிகள். சென்னையில் தரப்பட்ட புகாரில் தணிகைவேல் குறித்த தகவலும், தொகுதியில் உள்ள தகவல்களையும் கண்டு அதிர்ச்சியானவர், மேலிடத்துக்கு தகவலை பாஸ் செய்துவிட்டு கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்'' என்றார்கள்.

 

தணிகைவேல் நீக்கம் பற்றிய தகவல் வெளியானதும் பட்டாசு வெடித்து கொண்டாடியது ஒருதரப்பு. பா.ஜ.க.வுக்கு தணிகைவேல் வந்தபோது, தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.வில் இருந்த இவரது ‘விசுவாசிகளும்’பா.ஜ.க.வுக்கு வந்தனர். அவர்களிடமும் பண மோசடி செய்ததால் அவர்களும் கடுப்பில் உள்ளனர்.

 

முருகன் மாநில தலைவராக இருந்தபோது, கட்சிக்கு வந்தவர்கள் யார், யார்? அவர்கள் கட்சியில் என்ன பதவியில் உள்ளார்கள். அதில் பிரச்சனைக்குரியவர்கள் யார், யார்? அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன என ஒன்றிய அமைச்சராகியுள்ள முருகனுக்கு எதிரான டீம் தயார் செய்து பா.ஜ.க.வின் புதிய தலைவர் அண்ணாமலையிடம் தந்துள்ளது. முருகன் ஆட்களை ஓரங்கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது என்கிறார்கள் பாஜகவின் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.