Skip to main content

“தென்னரசு சரியான வேட்பாளரா...” - அண்ணாமலையின் கேள்வியும் பதிலும்

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

"Is South Africa the right candidate?" Annamalai Question and Answer

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஏறத்தாழ 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முடிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இன்று மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகளும் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தலில் மக்கள் கொடுக்கும் முடிவுகளை தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பு கொடுத்துள்ளார்கள். மக்கள் கொடுத்த தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் இருக்கிறது. 2024 தேர்தல் எங்களுக்கான தேர்தல். 

 

இந்த இடைத்தேர்தல் பாஜகவிற்கான தேர்தல் அல்ல. கூட்டணி கட்சியினர் நிற்கின்றனர். கூட்டணி தர்மத்தின் படி எங்கள் தொண்டர்கள் தலைவர்கள் எல்லோரும் வேலை செய்து கொடுத்துள்ளோம். 2024 களம் முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். திமுக அரசின் 21 மாத கால ஆட்சிக்காக மக்கள் வாக்களித்ததாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் மக்கள் ஒரு விஷயத்தை சொல்லியுள்ளனர். பாஜக தொடர்ந்து வலிமையாக நிற்க வேண்டும் என்ற ஒரு கருத்தை சொல்லிக் கொண்டே இருந்தோம். இதில் பிரிந்து நிற்பது, இருவர் நிற்பது என்பதை விடுத்து சின்னத்தில் ஒருவர் நிற்க வேண்டும் என்று சொன்னோம். ஆளும் கட்சியை எதிர்க்கும் போது எந்த அளவிற்கு பலம் தேவைப்படுகிறது என்பதை உணர்த்தியுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர் தென்னரசு சரியான வேட்பாளரா என்றால் அவர் சரியான வேட்பாளர் தான். இரண்டு முறை எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார். அதிமுக சின்னத்தில் தான் நின்றார். பாஜக என்ன நினைத்ததோ அதுதான் நடந்தது.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.