Skip to main content

இத்தீ உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் தீ! - கி.வீரமணி

Published on 08/03/2021 | Edited on 08/03/2021
ddd

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

 

‘பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலைகளை அவமதிப்புச் செய்யும் நடவடிக்கைகளைக் காவிக் காலிகளை விட்டு, தொடர்ந்து மேற்கொண்டு வருவது தொடர் நிகழ்ச்சிகளாகிறது - இன்றைய மத்திய பாஜகவின் அடிமை ஆட்சியான அதிமுக ஆட்சியில்!

 

பெரியார் என்பவர் எப்படி காவிகளைக் கருவறுக்கும் மூலசக்தியாக இருக்கிறார் - சிலையைக் கண்டும், எப்படி இந்த சிறு நரிகள் அச்சப்படுகின்றன என்பதையே கீழ்த்தரமான இச்செயல்கள் காட்டுகின்றன.

 

இதற்கு வட்டியும் முதலுமான பதிலை வருகின்ற தேர்தலிலும், வருங்காலத்திலும் தமிழ்நாடு தருவது உறுதி!

 

கொச்சைப்படுத்துங்கள்... தீ வையுங்கள்....

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கத்தாழைமேடு அருகில் காட்டிநாயனப் பள்ளி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள உள்ள பெரியார் சிலைக்குத் தீ வைத்ததாக இன்று (7.3.2021) ஒரு செய்தி!

மதவெறி ஆணவத்திற்கும்  வைத்துக்கொள்ளும் தீ!


இத்தீ உங்களுக்கும், மதவெறி ஆணவத்திற்கும் நீங்களே வைத்துக்கொள்ளும் தீ! இதற்குரிய விலை விரைவில் இத் தேர்தலில் தெளிவாகும்!

 

நிறைய இம்மாதிரி கீழ்நிலைச் செயல்களில் ஈடுபடுங்கள்.


அப்போதுதான் 1971ஆம் ஆண்டு தேர்தலில் முடிவு எப்படி திமுகவை பெருவாரியாக வெற்றி பெறச் செய்ததோ, அதே 1971, 2021இல் திரும்ப நீங்கள் செய்யும் இந்த ‘உதவி’ பெருகட்டும்; எல்லா விளைவுகளுக்கும் எதிர்விளைவு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்!

 

வழக்கமான ‘மனநிலை சரியில்லாதவர்’ செயல் என்ற ஜோடனைக் கதைகளைத்தான் இதற்கும் தமிழ்நாடு காவல்துறை கூறப் போகிறதா?


குறுகிய காலத்தில் உரத்தநாடு, சீர்காழி, கிருஷ்ணகிரி - காட்டிநாயனப்பள்ளி இப்படி ஒரு 10 நாட்களுக்குள் நடைபெறுவது காவிக்கும்பல் ‘மேலே’ ஏவியபடி,  திட்டமிட்டு நடைபெறும் சில்லுண்டித்தனங்கள் என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களால் கூட உணர முடிகிறது. நுண்ணறிவுப் பிரிவு - குற்றப் பிரிவு எல்லாம் உள்ள திறமைக்குப் பேர் போன தமிழ்க்  காவல்துறையால் இதனைக் கண்டறிய முடியாதா?

 

காரணம் - வெளிப்படை. அவர்களது கைகள் கட்டப்பட்டு, காவிகளின் முன் மண்டியிடச் செய்யப்பட்டுள்ள பரிதாப நிலைக்கு இதுவே எடுத்துக்காட்டு.


ஒரு குழுவே நாடு முழுவதும் காவிகளால் இப்படி அனுப்பப்பட்டு பல ரூபத்தில் - ஒரே மாதிரி செயலில் ஈடுபட்டு வருகிறது.

 

வினையை அறுப்பது நிச்சயம்!

 

செய்யட்டும், வினை விதைப்பவர்கள் வினையை அறுப்பது நிச்சயம்!

 

குற்றவாளிகள் எல்லாம் பெரும் அதிகார மய்யங்களாகிவிட்டார்கள் - இந்த அடிமை ஆட்சியில் என்பதால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை யாருக்குமே ஏற்படவில்லை.

 

தொடரட்டும் இந்தக் கொச்சைத் தனங்கள்.


ஆட்சியிலிருந்து வெளியேற ஆயத்தமாகுங்கள் என்பதற்குப் பெரியார் சிலை அவமதிப்புதான் காரணமாகப் போகிறது என்பதைக் காவிகள் துல்லியமாகக் காட்டுகிறார்கள் போலும்!


பெரியார் என்பது அழியாத தத்துவம் - புரட்சிப் பொறி - அது வெறும் உலோகம் அல்ல. மறந்துவிடாதீர்கள். எஃகு கோட்டையான இலட்சியக் கோட்டை - நினைவிருக்கட்டும்!

 

பதில் தரும் நாளாக ஏப்ரல் 6-ஆம் தேதியைக் கொள்ளுங்கள்.

 

‘திராவிடம் வெல்லும்‘
எங்கும் இதை சொல்லுங்கள்!
உரிய பதில் விரைவில் கிடைக்கும்!!’ இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்