Skip to main content

“மோடி அரசின் தடுப்பூசி போடும் வியூகம் ஆபத்தானது..” - கே.எஸ். அழகிரி 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

"Modi government's vaccination strategy is dangerous ..." - KS Azhagiri

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி இந்திய குடியரசு தலைவருக்கு அளிக்க வேண்டிய கடிதத்தை சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் அவரது அலுவலகத்தில் வழங்கினார்.

 

பின்னர் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “மோடி அரசு கரோனாவை எதிர்த்து போராடும் கடமையை, செய்ய தவறிவிட்டது.  தவறான நிர்வாகத்தால் மோடி அரசு கிரிமினல் குற்றத்தை இழைத்துள்ளது என்பதுதான் உண்மை. கரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு. ஆனால் மோடி அரசின் தடுப்பூசி போடும் வியூகம் ஆபத்தானதாகவும், தவறானதாகவும் இருக்கிறது” என குற்றம் சாட்டினார்.

 

 தடுப்பூசி போடுவதற்கான கடமையை செய்ய மோடி அரசு தவறிவிட்டது. தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதியிருந்து அரசு முற்றிலும் மறந்து விட்டது. மோடி அரசு வேண்டுமென்றே தடுப்பூசி திட்டத்தை மெதுவாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.  ஒரே தடுப்பூசிக்கு பலவிதமான விலைகளை நிர்னைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது என்றார். 

 

மேலும் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான முதல் ஆர்டரை கடந்த ஜனவரி மாதம் தான் மோடி அரசு கொடுத்துள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மோடி அரசு மாநில அரசுகளுக்கும் சேர்ந்து இன்றுவரை 39 கோடி தடுப்பூசிகளை மட்டுமே ஆர்டர் செய்துள்ளது. இதுவரை இந்திய மக்கள் தொகையில் 3.17 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வயதானவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிடும்.  இந்த சூழலில் கரோனாவின் மூன்றாவது அலையின் போது நமது மக்களை எப்படி காப்பாற்ற முடியும் என்ற கேள்விக்கு மோடி அரசிடம் இருந்து பதில் இல்லை.

 

நம் நாட்டில் கரோனா தொற்றில் மக்கள் பாதிக்கப்பட்டபோது மோடி அரசு 6 கோடியே 63 லட்சம் தடுப்பூசி மருந்துகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்த தேசத்துக்கு இழைத்த மிகப் பெரிய அவமதிப்பு. தடுப்பூசிகளுக்கு பல விலைகளை மோடி அரசு நிர்ணயித்தது மக்களின் துயரத்தில் இருந்து லாபம் ஈட்டியதற்கு இதுவே உதாரணம். தடுப்பூசிகளை மத்திய அரசு ரூ 150, மாநில அரசுகளுக்கு 300 தனியார் மருத்துவமனைக்கு 600 என பல்வேறு விதங்களாக விற்பனை செய்து மக்களின் துயரத்தில் இருந்து லாபம் சம்பாதிக்க மோடி அரசு துணை போகிறது. எனவே பாஜக அரசு தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து அதனை மாநில அரசுக்கும், தனியார் மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாக இருக்கிறது. 

 

"Modi government's vaccination strategy is dangerous ..." - KS Azhagiri

 

 தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து கரோனா ஒழிப்பதற்காக பல்வேறு செயல்களில் சிறப்பக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்கள்.

 

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலை நோய்வாய்ப்பட்டு உள்ளது இதனை தமிழக அரசு தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்கிறது. இதற்கு பதில் கூறாத மோடி அரசு மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலாளருக்கு எப்படியெல்லாம் தண்டனை அளிக்க முடியும் என்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

 

150 ஆண்டுகள் தடுப்பூசிகள் தயாரிப்பில் அனுபவமிக்க நமது பொதுத்துறை நிறுவனத்திற்கு அனுமதி வழங்காதது வேதனைக்குரியது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை முற்றிலும் தவறானது.  வீராணம் ஏரியில் தற்போது தண்ணீரின்றி காய்ந்து உள்ளது. எனவே அதிலுள்ள களிமண்ணை அனைத்து மக்களும் இலவசமாக எந்த விதிமுறைகளும் இல்லாமல் எடுத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் வீராணம் ஏரி தானாக தூர்வாரப்படும். இதனால் அதிக தண்ணீரை தேக்கி வைக்கப்படும் என கூறினார்.  இவருடன் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர்  ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன், மத்திய மாவட்ட  தலைவர்  திலகர், மாநில பொது செயலாளர் சேரன், மாநில செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.