Skip to main content

“முதல்வராகப் பதவிப்பிரமாணம் எடுத்தவுடன், முதலில் புகார்ப் பெட்டியைத்தான் திறப்பேன்!” - மு.க.ஸ்டாலின் உறுதி!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

MK Stalin's assurance that  if I am sworn in as the Chief Minister, I will open the complaint box first

 

தி.மு.க. ஆட்சி அமைந்து 100 நாளில் உங்களது பிரச்சனை தீர்க்கப்படும். அப்படி தீர்க்கப்படாவிட்டால் பதிவு அட்டையுடன் கோட்டைக்கே வந்து என்னைச் சந்திக்கலாம் என உத்தமபாளையம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டு மனுக்களை வாங்கிய மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அதன்பின்பு பொதுமக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், “இங்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளீர்கள். பல மணி நேரம் காத்திருந்து உங்களது பிரச்சனைகளைச் சொல்வதற்காக இங்கு வந்துள்ளீர்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் உங்களது பிரச்சனைகளை சொல்லி புகாராகப் பதியும்போது எங்களது தோழர்கள், தொண்டர்கள் உங்களிடம் பதிவு செய்ததற்கான, பதிவு அட்டை ஒன்றை தந்திருப்பார்கள். அதனைப் பத்திரமாக வைத்திருங்கள்.


உங்களது மனுக்கள் அனைத்தும் புகார்ப் பெட்டி ஒன்றில் போடப்பட்டுள்ளது. இது உங்களது முன்னிலையில் சீல் வைக்கப்படும். இந்தப் புகார்ப் பெட்டி உடனடியாக சீல் வைக்கப்பட்டு அண்ணா அறிவாலயம் கொண்டு செல்லப்படும். அண்ணா அறிவாலயத்தில் மிகவும் பாதுகாப்பாக இது வைக்கப்படும்; மூன்று மாதங்களில் தேர்தல் முடிந்து முதல்வராகப் பதவிப் பிரமாணம் எடுத்தவுடன், முதலில் இந்தப் புகார்ப் பெட்டியைத்தான் நான் திறப்பேன். 


மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஒரு தனிக்குழு அமைக்கப்படும். தனி அமைச்சகம் உருவாக்கப்படும். அதிகாரிகளிடம் மக்களின் குறைகளை 100 நாளில் தீர்த்துவைக்க வேண்டும் என உத்தரவிடப்படும். மனுக்கள் மீதான பிரச்சனை தீர்க்கப்படும். அப்படி தீர்க்கப்படாவிட்டால் உங்களிடம் இந்தப் புகார் மனுக்களை தந்தபோது ஒரு பதிவு அட்டை ஒன்று தரப்பட்டுள்ளது, அந்தப் பதிவு அட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு என்னையே நேரடியாகச் சந்திக்கலாம். கோட்டைக்கே நேரடியாக வரலாம். கோட்டைக்கு வரும் போது எந்த தடையும் இருக்காது. அப்பொழுது, என்னிடம் வந்து நீங்கள் இந்தப் பிரச்சனை தீரவில்லை என்று கூறலாம். நான் உடனடியாக அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அப்படி இந்தப் பதிவு அட்டை காணாமல் போனால், இந்தப் பதிவு அட்டைக்கு எனத் தனியாக நம்பர் இருக்கும். அந்த நம்பரை, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பதிவு எண்ணை நீங்கள் சொன்ன உடன் உங்களுக்கு உரிய குறை என்னவென்று பார்க்கப்பட்டு அந்தப் பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்