
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சி பாரதம் கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்ணை மிரட்டிய வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தியை கைது செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (14--06-25) 50க்கும் மேற்பட்ட திருவாலங்காடு போலீசார் வாகனங்களில் வந்து குவிந்தனர்.
இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த ஏராளமான கட்சித் தொண்டர்கள் அங்கு குவிந்து, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்ணை மிரட்டிய விவகாரத்தில் கைது செய்ய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்த நிலையில், ஒரு கட்சித் தலைவரை இப்படி நடத்தலாமா? என்று கட்சித் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, அவர்கள் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரணைக்கு கொண்டு செல்லும் பட்சத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.