Skip to main content

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Judge action order Case against AIADMK ex-ministers

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தமிழக அரசைக் கண்டித்து, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரம் பகுதியில் அதிமுக சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கே.பி. முனுசாமி, தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும், கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர்கள் உள்பட 11 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று (16-02-24) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் கூறியதாவது, ‘ஜனநாயக முறையில் நடந்த கூட்டத்தை சட்ட விரோதமாக கூடிய கூட்டமாக கருத முடியாது. எனவே இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி ஆனந்தன் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்