Skip to main content

“ஜம்மு காஷ்மீருக்கு இனி சிறப்பு அந்தஸ்து கிடையாது” - மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
Jammu and Kashmir will no longer have special status Union Minister Amit Shah

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.  அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25 ஆப் தேதியும், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குக்வாக்குப்பதிவுகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (06.09.2024)வெளியிட்டார். அப்போது ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் கட்சித் தலைவர்களும் உடன் இருந்தனர்.

அதில், ஒவ்வொரு குடும்பத்தின் தலைவிக்கும் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க ‘மா சம்மன் யோஜனா’ திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். பிரகதி சிக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம். ஜம்முவில் சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜம்மு காஷ்மீர் பாஜகவுக்கு முக்கியமானது ஆகும். இந்த நிலத்தை இந்தியாவுடன் அப்படியே வைத்திருக்க நாங்கள் எப்போதும் முயற்சித்தோம். ஜம்மு காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. இது என்றும் அப்படியே இருக்கும் என்று பாஜக நம்புகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு வரை வரை ஜம்மு காஷ்மீர் எப்போதும் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் நிழலில் இருந்தது. முன்பு இந்த மாநிலத்தை நிலையற்றதாக வைத்திருந்தனர். ஜம்மு காஷ்மீரின் வரலாறு எழுதப்படும் போதெல்லாம், 2014க்குப் பிறகு இந்த பத்து ஆண்டுகள் மாநிலத்திற்கு ஒரு பொற்காலமாகக் குறிக்கப்படும். தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் அறிக்கையை நான் பார்த்தேன். காங்கிரஸும் தேசிய மாநாட்டு தேர்தல் அறிக்கையை மௌனமாக ஆதரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், 370வது சட்டப்பிரிவு திரும்ப வராது (சிறப்பு அந்தஸ்து) என்பதை நாட்டுக்குச் சொல்ல விரும்புகிறேன். அதனை நடக்க விட மாட்டோம். 370வது பிரிவு இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களையும் கற்களையும் கொடுத்தது” எனத் தெரிவித்தார்.

மேலும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வுத் திட்டம் தொடர்பான பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதத்தால் மாநிலத்தை விட்டு வெளியேறினர். இங்குப் பயங்கரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ​​அவர்களின் சொத்துக்களை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் நாங்கள் ஏற்கனவே வேலை செய்யத் தொடங்கிவிட்டோம். ஒன்று அவர்களின் சொத்துக்களைத் திருப்பித் தருவது.  அல்லது அவர்களின் சொத்துகளுக்கான தொகையை வழங்குவது. 6000 பேரின் மறுவாழ்வுப் பணியை நிறைவு செய்யும் நோக்கில் இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார். 

சார்ந்த செய்திகள்