Skip to main content

"ரஷ்யாவைப் போல் இந்தியாவும் சிதறும்..!" - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடி

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

tt

 

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 15ந் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். 

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சென்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., கூட்டணி எப்படி முழு வெற்றி பெற்றதோ. அதேபோல், இப்போது நடக்கக் கூடிய உள்ளாட்சித் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணி பெறும் என்பதை உறுதியாக கூறுகிறேன். இன்றைக்கு தமிழகத்தை ஆளுகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்கின்றார். இந்தியாவிலேயே உள்ள முதலமைச்சர்களில் கடுமையாக உழைக்கக்கூடியவர் என்ற பெயரை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி மூலம் பேசுவதை பாஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் கொச்சைப்படுத்துகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் நேரில் சென்று 500 பேரை தான் காணமுடிகிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், காணொளி மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறார் என்பதை இவர்கள் மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு 500 பேருக்கு மேல் கூட்டம்  சேரவில்லை. அதுவும் அவர்களால் அழைத்து வரப்பட்ட கூட்டமாகத்தான் இருக்கிறது.

 

அ.தி.மு.க.,வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி, உளறுவதில், பொய் சொல்வதில் வல்லவராக இருக்கிறார். குறிப்பாக கொட நாட்டில் நடந்த கொலை, கொள்ளையில் பழனிசாமியின் பங்கு பெரும் பங்கு என்பது விசாரணைக்கு பிறகு முழுமையாக வெளிவரும். அந்த வழக்கு தீர்ப்பில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுபவர்களில் இந்த எடப்பாடி பழனிச்சாமிதான் முதன்மையானவராக இருக்க போகிறார். 

 

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போதே அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டினை நான் சொல்லியுள்ளேன். இன்றைக்கு யோக்கிய சிகாமணி போல் அவர் பேசுவது தவறு. அநேகமாக தேர்தலில் பரப்புரையாற்றுகின்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு இது தான் கடைசி பரப்புரையாக இருக்கும் என்று நினைக்கிறேன். பாரதிய ஜனதா கட்சி இன்றைக்கு அ.தி.மு.க., கூட்டணியில் இல்லை என்று சொன்னாலும் கூட அ.தி.மு.க. முழுக்க முழுக்க பாஜ.,வின் அடிமையாக இருப்பதை யாரும் மறுத்து விட முடியாது. சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதியை பற்றியே பேசுகின்ற தார்மீக உரிமையை அ.தி.மு.க., இழந்து விட்டது. 

 

அ.தி.மு.க.,வினர் இன்றைக்கு பெரியாரையும், அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் மறந்து விட்டார்கள். இன்னும் சில நாட்களில் ஜெயலலிதாவையும் மறந்து விடுவார்கள். கடைசியில் தமிழக மக்கள் முழுமையாக அ.தி.மு.க.,வை மறந்து விடுவார்கள்.

 

பாரதிய ஜனதாவை பொறுத்தவரையில் நாட்டின் பிரதமர் மோடி, ஒரே கொடி, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம் என சொல்லி கொண்டிருக்கிறார். இதை பல இடங்களில் அமல்படுத்தவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இதன் எதிரொலி தான் கர்நாடகாவில் இன்றைக்கு நடந்து கொண்டுள்ள சம்பவங்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் படிப்பை வீணாக்குவதோடு மட்டும் அல்லாமல், அவர்களை பலி கொடுப்பதற்கும் தயாராக இருக்கின்றனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

 

ஒரே கொடி ஒரே கலாச்சார கொள்கை தீவிரமாக அமல்படுத்தினால் ரஷ்யா அதாவது சோவியத் யூனியன் எப்படி சிதறுண்டதோ அதைபோல் இந்தியாவும் சிதறுவதற்கு வாய்ப்பு உள்ளதால் நாட்டின் மீது பற்று உள்ளவர்கள் பாஜகவை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

 

நீட் தேர்வை காங்கிரஸ் அரசு தான் கொண்டு வந்தது என்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி நீட் தேர்வை கொண்டு வரும்போது, அந்தந்த மாநிலத்தில் எப்படி சவுகரியமோ அப்படி தேர்வை வைத்துக் கொள்ளலாம் என்ற பகுதியும் கொண்டு வந்தார்கள். ஆனால்,  தற்போது புதிய நீட் தேர்வை பாஜ.,வினர் கொண்டு வந்துள்ளனர். இது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை மிகவும் பாதிக்கும் என்பதால் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியும் எதிர்த்துள்ளார். பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதில் பாஜ.,வினரும், அ.தி.மு.க.,வினரும் கில்லாடிகளாக உள்ளனர்.

 

நேருவின் ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு உடைமை என்று சொல்லப்பட்ட இன்சூரன்ஸ், வங்கி, ரயில்வே, விமானம் உள்ளிட்ட பொதுத்துறைகளில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு அதனை விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக எல்.ஐ.சி.யை தனியாருக்கு விற்க ஏற்பாடு செய்கின்றனர். அதேபோல் ரயில்வேயும் தனியாருக்கு விற்க முயன்று வருகின்றனர்.

 

தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேற்றவில்லை என கூறி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஆவின் பாலுக்கு விலை குறைப்பு செய்தார். இந்தியாவிலேயே பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்தது மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கிற தி.மு.க., அரசு தான். மத்திய அரசு கூட அதற்கு பின்னால் தான் குறைத்தது. கரோனா நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 4 ஆயிரம் கொடுத்துள்ளார். குடும்ப தலைவிக்கு ரூபாய்.1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 9 மாத ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.

 

அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா இருக்கும்போது செல்போன் கொடுப்பதாக கூறினார்கள். 10 ஆண்டு ஆட்சி காலத்தில் கொடுத்தார்களா?, கிடையாது. தி.மு.க.,வை பொறுத்தவரை கொடுக்கிற வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவார்கள். சொல்லாததையும் செய்வோம் என்ற கட்சியாக தி.மு.க., இருக்கிறது. தி.மு.க., தலைவராக கலைஞர் இருந்தபோது, ஏழை எளிய மக்களுக்கு தொலைக்காட்சி தருவதாக அறிவித்தார்கள். அதேபோல் அனைவருக்கும் தொலைக்காட்சி கொடுத்து, வரலாற்றில் இடம் பெற்றுள்ளவர்கள் தி.மு.க.,வினர் தான்.

 

மத்திய அரசின் தவறான கொள்கைகளை முதல்வர் ஸ்டாலின் தான் தைரியமாக எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற உச்சநீதிமன்றத்தில் தி.மு.க.,வின் பங்கும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழகத்தின் நிதிநிலையை பொறுத்தவரை அ.தி.மு.க., பதவியை விட்டு விலகி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சி கட்டிலில் இருந்து இறங்கியபோது தமிழகத்தின் கஜானாவை சுத்தமாக வைத்திருந்தனர். மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளில் கடன் உள்ளது என கூறப்படுகிறது. இந்த கடன்கள் 8 மாதத்தில் உதயமானது கிடையாது. கடந்த 10 வருடங்களாக அ.தி.மு.க.,வின் செயல்பாடுகளால் ஏற்பட்ட கடன்கள். போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு பணப்பலன்கள் கொடுக்கவில்லை என்பது அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் இருந்து தொடர்கிறது. இப்போது அதனை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க. அரசால் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிதிநிலைமை சீரான பிறகு கடன் அடைக்கப்படும்.

 

நகை கடன் கொடுத்ததில் பல கூட்டுறவு சங்கங்களில் ஊழல் நடந்துள்ளது. பதவியில் இருந்த அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு தேவையானவர்களின் பெயரில் தங்க நகை என்ற பெயரில் போலி நகையை அடகு வைத்துள்ள நிலைமை பல இடங்களில் உள்ளது. அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட நபருக்கு பல்வேறு பெயர்களில் கடன் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் மந்திரிகளும், பல அதிகாரிகளும் ஊழல் செய்த காரணத்தினால் முறைகேடு நடந்துள்ளது. அதனை களைய தி.மு.க., அரசு முயற்சி எடுத்துள்ளது" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்