Skip to main content

அரசு நிகழ்ச்சியில் ஆளுநர் - எம்.எல்.ஏ. மோதல் ; இருதரப்பு கண்டனங்கள்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
Kiran Bedi - A.ANBALAGAN



புதுவை அரசின் உள்ளாட்சித்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை 'திறந்தவெளி கழிப்பிடமற்ற பிரதேச'மாக அறிவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்தது. 
 

துணை  நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடந்த அவ்விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். 
 

'புரோட்டாகல்' படி தொகுதி எம்.எல்.ஏவும், அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகனுக்கு பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனாலும் கடைசி நேரத்தில் 10 நிமிடம் ஒதுக்கப்பட்டு வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டார்.   
 

'தூய்மை இந்தியா திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை. அதிகாரிகள் சரியாக வேலை செய்வதில்லை, விளம்பர அரசியல்தான் நடக்கிறது' என  அரசு, அதிகாரிகள், ஆளுநர் அன்பழகன் குற்றச்சாற்றுகளை அடுக்கியவாறே  நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். 
 

நேரம் கடக்க கடக்க கிரண்பெடியின் உத்தரவின்படி இரண்டு முறை துண்டுகள் சீட்டு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அன்பழகன் பேச்சை நிறுத்தவில்லை. கிரண்பேடி அருகில் வந்து அறிவுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை.
 

 கடுப்பான கிரண்பேடி மைக்கை நிறுத்த சொன்னார். மைக் நிறுத்தப்படவே ஆவேசமடைந்த அன்பழகன் மைக்கை எப்படி நிறுத்தலாம் என கிரண்பேடியிடம் தகராறு செய்தார். 
 

கிரண்பேடி அன்பழகனை வெளியேறச்சொல்ல, அன்பழகனோ கிரண்பேடியை வெளியேறுங்கள் என்றார். மேடையிலிருந்த ராதாகிருஷ்ணன் எம்.பியும், அமைச்சர் நமச்சிவாயமும் அன்பழகனை சாமாதானம் செய்தும் சமாதானமாகாமல்  நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.  
 

அதன்பின்னர் அன்பழகன் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து அரசு விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் தெரிவித்தார். அதேபோல் நேரம் கருதி பலமுறை அறிவுறுத்தியும் பேச்சை தொடர்ந்ததால்தான் மைக்கை நிறுத்தவேண்டியதாகி விட்டது என கிரண்பேடி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 
இதனிடையே விழாவில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், 'புதுச்சேரி அரசின் தொடர் முயற்சியினால் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக புதுவை மாநிலம் மாறியுள்ளது. மத்திய அரசின் உதவியோடு இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 

இந்த அரசுக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக அன்பழகன் எம்.எல்.ஏ. சில குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் அவ்வாறு கூறுகிறார். அவரது தொகுதியில் மட்டும் 1080 கழிப்பிடங்கள் கட்ட நிதி வழங்கப்பட்டது. 400 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. 
 

அவர் சிலவற்றை மறைத்து மக்கள் மத்தியில் தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்கிறார். அதிகாரிகளைப்பற்றி அவர் குறைகூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். 
 

பொதுமேடையில் தகாத முறையில் எம்.எல்.ஏ. பேசுவது கண்டிக்கத்தக்கது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்' என்றார். 
 

இதேபோல் 'மாநிலத்தின் முதல் குடிமகனான துணை நிலை ஆளுநரிடம் மக்கள் பிரதிநிதி என்றும், பொது மேடை என்றும் பாராமல் சுயநினைவு இழந்த நிலையில் அநாகரிகமாக  நடந்து கொள்வதும், சமரசம் செய்த அமைச்சர்கள், எம்.பிக்களை அவமானப்படுத்துவது போல நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. 
 

அநாகரிகமான செயல்களை அன்பழகன் தொடர்ந்து செய்து வருகிறார்' என்று வன்னியர் வளர்ச்சி இயக்க தலைவர் விஜயகுமார் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் அன்பழகனை கண்டித்து வருகின்றனர். 
 

அதேசமயம், 'அரசு விழாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது, அவரது மைக்கை ஆப் செய்ய சொல்லியும், அரங்கை விட்டு வெளியேற சொன்னதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை அவமதிக்கும் செயலாகும். சட்டமன்ற உறுப்பினரை அவமதித்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர்  தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், அரசு விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆளும் அரசின் குறைபாடுகளை எதிர்த்து பேசும்போது ஒலிபெருக்கி அனைத்து அவமதித்ததை வன்மையாக கண்டிப்பதாகவும்,  புதுச்சேரி மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இங்கு நடப்பது மக்களாட்சியா மன்னர் ஆட்சியா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாகவும், புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் என்ற ஆளுமை மிகுந்த பதவியின் மாண்பை தனது அவசர செயல்பாடுகளால் அழித்து வருகிறார் கிரண்பேடி எனவும் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சுவாமிநாதன் கண்டித்துள்ளார். 
      
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.