Skip to main content

''வருவாய் அதிகம் கிடைத்தும் கடன் மட்டும் ஏன் குறையல?''-எடப்பாடி பழனிசாமி கேள்வி

Published on 18/03/2022 | Edited on 18/03/2022

 

Edappadi Palanisamy Question!

 

2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

பேரவை துவங்கி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய உடனே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் காரணமாக அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தியபோதிலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன் பேச வாய்ப்பளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

 

வெளிநடப்புக்கு பின்னர் கூட்டாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இந்த பட்ஜெட் வெத்துவேட்டாகும். வருவாய் பற்றாக்குறை மதிப்பீடு 55,781.17 கோடி ரூபாய் ஏற்பட்டிருக்கிறது. 2021-22 ஆண்டுக்கான கடன் 1,08,175 கோடி ரூபாய் வாங்கி செலவு செய்திருக்கிறார்கள். எங்கள் ஆட்சி சமயத்தில் கரோனா சூழல் இருந்ததால் வருவாய் சுத்தமாக இல்லை. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் கரோனா குறைந்து இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது. பத்திரப்பதிவுத்துறை, பெட்ரோல் விற்பனை, டிரான்ஸ்போர்ட் இப்படி நிறைய வருவாய் கிடைத்தது. இப்படி வருவாய் அதிகம் கிடைத்தும் கடன் மட்டும் ஏன் குறையல. இதனால் இவர்கள் முறையாக செயல்படவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கல்விக் கடன் ரத்து என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது ஆனால் நிறைவேற்றப்படவில்லை. மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை கொடுப்போம் என்றார்கள் அதனையும் அறிவிக்கவில்லை. சாக்குப்போக்கு சொல்லி இதையெல்லாம் தள்ளிப் போட்டுள்ளார்கள். சிமெண்ட் விலை அதிகரிச்சுக்கிட்டே போகுது கட்டுப்படுத்த தவறிட்டாங்க.

 

கடந்த ஆண்டு பெட்ரோலுக்கு மட்டும் 3 ருபாய் குறைத்தார்கள். டீசலுக்கு குறைக்கவில்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்கிறார்கள். ஆனால் திமுக அரசு குறைக்கவில்லை. உர விலை ஏறிவிட்டது. அதற்காக மத்திய அரசிடம் சரியாக பேசி நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. சிமெண்ட் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கட்டுப்படுத்த தவறிவிட்டார்கள். கம்பி, ஜல்லி, எம்சாண்ட், மணல், செங்கல் எல்லாமே விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கட்டுமானப் பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படும். விலை ஏறும்போது அதனை கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். செய்யவில்லை. அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் கட்டுமானப் பொருட்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும்.

 

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. படித்த அரசு ஊழியர்களையும் ஏமாற்றிவிட்டார்கள். 6 மாதம் அகவிலைப்படியை பிடித்தம் செய்திருக்கிறார்கள். 2021 ஜூலை முதல் டிசம்பர் வரையும் வழங்கப்படவில்லை.

 

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்கவும், வருவாயை பெருக்கவும் ஆலோசனை குழு அமைக்கப்பட்ட ரகுராம்ராஜன் குழு என்ன திட்டங்களை முன்வைத்தது என்பது பற்றி எந்த குறிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. மொத்தத்தில் இந்த விடியா அரசின் நிதிநிலை அறிக்கை வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்ப்பந்தல். இதனை வாய்வாடகைத்தாரர்கள் வேண்டுமானால் தங்கள் ஆதாயத்துக்காக பாராட்டலாம். மக்கள் நலனில் உண்மையில் அக்கறைக்கொண்ட யாராலும் இந்த மக்களை ஏமாற்றிய நிதிநிலை அறிக்கையை வரவேற்க முடியாது.

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. தில்லுமுல்லு செய்து திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. சென்னையை பொறுத்தவரையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 பேர். ஆனால் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 5 முதல் 6 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதேபோல கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 157 பேர் தான். ஆனால் கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 85 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். அதிமுக வெற்றி பெற்ற இடங்களில் தேர்தலை ஒத்தி வைத்துள்ளனர்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.