Skip to main content

“50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவேண்டும்!” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

DMK Udhayanithi stalin


தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிபட்டியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் பிரச்சாரக் கூட்டத்திற்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். அவர், ஆண்டிபட்டி, பிச்சம்பட்டி, மொட்டனூத்து, மரிக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர், “ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் மகாராஜனை 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தீர்கள். அது போதாது, வருகின்ற பொதுத் தேர்தலில் தலைமை அறிவிக்கும் திமுக வேட்பாளரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும். கடந்த முறை நடந்த எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்றது. 38 இடங்களில் வெற்றிபெற்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவானது. ஆனால், தேனி பாராளுமன்றத் தொகுதி மக்கள்தான் ஏமாற்றிவிட்டீர்கள். 

 

திமுக மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் மோடி கோபத்தில் உள்ளார். ஏனென்றால் இந்தியாவிலேயே மோடி அலை வீசிய எல்லா மாநிலங்களும் அவருக்கு ஆதரவாக இருந்தபோதே, தமிழ்நாட்டு மக்கள் மட்டும் அவருக்கு ஆதரவளிக்கவில்லை. ஜி.எஸ்.டி. வரி மூலம் தமிழ்நாடு மக்களுக்கு ரூ.15,000 கோடி திருப்பித் தர வேண்டியுள்ளது. ஆனால், அதைத் தர மறுக்கிறார். மழை வெள்ள நிவாரணமாக ரூ.10,000 கோடி கேட்டோம். அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால், புதிதாகக் கட்டப்படும் பாராளுமன்ற வளாகத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடியைச் செலவுசெய்கிறார். 

 

கரோனா காலத்தில் தன் சொகுசுக்காக இரண்டு விமானங்கள் வாங்கியதில் ரூ.7 ஆயிரம் கோடியைச் செலவு செய்துள்ளார். இது எல்லாம் உங்களுடைய வரிப்பணம். திமுக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை, 400 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது 700 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 40 ரூபாயாக இருந்தது. தற்போது 90 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் விலை 48 ரூபாயாக இருந்தது. தற்போது 220 ரூபாயாக உயர்ந்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு இரண்டு அடிமைகள் சேர்ந்து நீட் தேர்வை தமிழ்நாட்டில் திணித்துள்ளார்கள். எல்லோரும் வேண்டாம் என்று சொன்னபிறகும், நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்துள்ளார்கள். இதனால், இதுவரையிலும் 14 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

 

பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்ஸும் யார் சிறந்த அடிமை என்பதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். டீக்கடை நடத்திவந்த துணை முதல்வருக்கு இத்தனை கோடி சொத்துகள் எப்படி வந்தது. சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து வெளியேறிய உடன், அவர் நுழைந்துவிடுவார் என்பதற்காக ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தையும், கட்சி அலுவலகத்துக்கும் சீல் வைத்துவிட்டார்கள். 

 

அமைச்சர் ஒருவர் பேசும்போது மறைந்த ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்கூட இந்த அளவுக்குச் சிறந்த நினைவு மண்டபத்தைக் கட்டி இருக்கமாட்டார்கள் என்று கோமாளித்தனமாகப் பேசுகிறார்கள். ராஜேந்திர பாலாஜி, ‘மோடிதான் எங்கள் டாடி’ என்று கூறினார். ஆனால், 'ஜெயலலிதாவோ மோடியா இந்த லேடியா?' என்று கேட்டார். மிகச் சிறந்த தொழில்நுட்பம் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜெயலலிதா, எப்படி இறந்தார் என்று மூன்று வருட காலமாகியும் இதுவரை எதுவும் தெரியவில்லை. 85 நாட்களாக சிசிடிவி கேமரா செயல்படவில்லை என்று கூறுகிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று முதலில் கூறியவரே ஓபிஎஸ் தான். அப்படி இருக்கும்போது விசாரணை கமிஷன் 10 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறைகூட அதற்குச் சென்று ஓபிஎஸ் பதிலளிக்கவில்லை.

 

வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும். அவ்வாறு வெற்றிபெறும் பட்சத்தில், ஆண்டிப்பட்டி பகுதியில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஆண்டிப்பட்டி ஒன்றியப் பகுதிகளுக்கான தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்றுவோம். ஆண்டிபட்டி பகுதிக்குப் புறவழிச் சாலை திட்டத்தைக் கொண்டுவருவோம். ஸ்டாலின் கூறியதுபோல, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்களுக்குள் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் தீர்த்துவைப்போம்” என்று பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.