Skip to main content

கரோனா முழு ஊரடங்கு: அதிமுக அரசில் வழங்கியதை திமுக இதுவரை வழங்கவில்லை - ராமதாஸ்

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

Corona full curfew; DMK has not given what was given by AIADMK government .. Ramadoss

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை  மிகத் தீவிரமாக இருந்துவந்த நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக குறைந்துவருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவந்த நிலையில், தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பாக சென்னையில் சில தினங்களாக அரசு தலைமை மருத்துவமனையில் தொற்று பாதித்தவர்களுக்கு உடனடியாக படுக்கை கிடைக்காமல், காத்திருந்து படுக்கைகளைப் பெற வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால், தற்போது இந்த நிலைமை மாறியுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக முழு ஊரடங்கு பார்க்கப்படுகிறது. ஆனால், அதேவேளையில் கோவையில் தற்போது தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. 

 

இந்நிலையில், முழு ஊரடங்கில் மாற்றுத்திறனாளிகளும், அமைப்பு சாரா தொழிலாளர்களும் வருமானமின்றி தவிப்பதாகவும் அவர்களுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மாற்றுத் திறனாளிகளும், அமைப்பு சாராத் தொழிலாளர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் கடந்த 10ஆம் தேதிமுதல் ஊரடங்கும், 17ஆம் தேதிமுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. ஆனால், அதற்கு முன்பாகவே கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதிமுதல் முடி திருத்தகங்கள் மூடப்பட்டன. அப்போது முதலே பல வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துவிட்டனர். தமிழ்நாட்டில் முழுமையான ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த வாக்குறுதியின்படி வழங்கப்பட வேண்டிய ரூ. 4,000 நிதியுதவியில் முதற்கட்டமாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ. 2,000 ஜூன் மாதத் தொடக்கத்தில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

 

ஆனால், மாற்றுத்திறனாளிகள், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் வழங்கப்படும் நிதியுதவியையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு நிதியுதவியையும் ஒப்பிட முடியாது; ஒப்பிடவும் கூடாது. தமிழக அரசால் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ரூ. 2000 உதவியை வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ளவர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு வேறு ஆதாரங்களில் இருந்து சிறிதளவேனும் வருவாய் இருக்கும் என்பதால், அவர்களின் இன்றியமையாத குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தமிழக அரசால் வழங்கப்படும் ரூ. 2,000 நிதியுதவி ஓரளவு உதவியாக இருக்கும்.

 

ஆனால், முடித்திருத்தும் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், தானி மற்றும் மகிழுந்து ஓட்டுனர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், நடைபாதை வணிகர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்துவிட்டனர். தமிழக அரசு வழங்கிய ரூ. 2000 நிதியுதவி அவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானது அல்ல. அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை இதுவென்றால், மாற்றுத்திறனாளிகளின் நிலை இன்னும் மோசம். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத் தேவைகளும், மருத்துவம் சார்ந்த செலவுகள் உள்ளிட்ட செலவுகளும் அதிகம். குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் நிதியுதவி மாற்றுத்திறனாளிகளில் பெரும்பான்மையினருக்கு கிடைக்காது என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது.

 

முந்தைய அதிமுக ஆட்சியில் அனைத்து வகையான அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு இரு தவணைகளில் தலா ரூ. 1000 வீதம் மொத்தம் ரூ. 2,000 நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல், மாற்றுத் திறனாளிகளுக்கும் தலா ரூ. 1000 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.

 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, வாழ்வாதார இழப்பு, பெருந்தொற்று காலத்தில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு வாரம் ரூ. 1,000 வீதம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.