Skip to main content

மூட்டிவிட்ட டெல்லி; முட்டிக்கொள்ளும் வானதி - அண்ணாமலை; அனல் பறக்கும் கமலாலயம்!

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

bjp Vanathi Srinivasan strategizing against Annamalai

 

அண்ணாமலை Vs பொன்னார்.. அண்ணாமலை Vs நயினார் நாகேந்திரன்... இந்த உரசலில் புதிதாக இணைந்துள்ளவர் வானதி சீனிவாசன். ஆம்.. அண்ணாமலை VS சீனிவாசனுக்கு இடையேயான முட்டல் மோதல் தற்போது பொதுவெளியில் கசியத் தொடங்கியுள்ளதுதான் கமலாலயத்தின் சூடான அப்டேட்.

 

தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலை பற்றிய இமேஜ், டெல்லித் தலைமையிடம் முற்றிலுமாக சரிந்துவிட்டது எனக் கூறப்படுகிறது. காரணம், கட்சியின் சீனியர்கள் அண்ணாமலையின் வார் ரூம் அரசியல் குறித்தும், கிரிமினல்களுடன் அவர் வைத்திருக்கும் நெருக்கம் குறித்தும், வசூல் விவகாரங்கள் குறித்தும், புகார்களை திரட்டி டெல்லியில் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், தமிழக பாஜக தலைமை மீது எரிச்சலான டெல்லி தலைமை, அண்ணாமலைக்கு எதிரான மனநிலையில் இருக்கும் வானதி சீனிவாசனுக்கு, ‘நீங்க தனியா ஆரம்பிக்கலாம்’னு சிக்னல் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

 

இதைத் தொடர்ந்து, மறைமுகமாக அண்ணாமலையை எதிர்த்துவந்த வானதி, இப்போது பகிரங்கமாகவே மோத ஆரம்பித்துவிட்டார். அண்ணாமலை ஏப்ரல் மாதம் பாதயாத்திரை அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு முன்பே வானதி, பழனிக்கு யாத்திரை போக தொடங்கினார். கடந்த 30-ஆம் தேதி, கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து யாத்திரையைத் தொடங்கிய அவர், பொள்ளாச்சி, உடுமலை வழியாக நடந்து வந்து, பழனியை வந்தடைந்த வானதி, தற்போது யாத்திரையை நிறைவும் செய்துவிட்டார்.

 

யாருக்கு எதிராக அரசியல் செய்ய இந்த யாத்திரையை வானதி திட்டமிட்டாரோ, அந்த அண்ணாமலையை வைத்தே இந்த யாத்திரையை தொடங்கியது தான் ஹைலைட் என கமலாலயவாசிகள் காதைக் கடித்தனர். இந்த முட்டல் மோதல் இப்போது தொடங்கவில்லை என்றும் இது கோவை கார் சிலிண்டர் விபத்தின் போதே வெடிக்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் கூறினர். கோவை கார் சிலிண்டர் விபத்தின்போது, கோவை பாஜகவினர் பந்த் போராட்டத்தை அறிவித்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாஜக மாநில தலைமையை கலந்து ஆலோசிக்காமல் கோவை பாஜகவினர் தன்னிச்சையாக பந்த் போராட்டத்தை அறிவித்துவிட்டனர் என நீதிமன்றத்திலேயே அண்ணாமலை கூறியிருந்தார். இது கோவை பாஜகவினரை மிகவும் கடுமையாக எரிச்சலடையச் செய்தது. அப்போதிலிருந்தே, அண்ணாமலையின் மீது அதிருப்தியில் இருக்கும் கோவை பாஜகவின் ஒரு பிரிவினர், தன்னிச்சையாக செயல்பட முயல்வதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தன. இதன் நீட்சியாகத்தான் வானதியின் பாதயாத்திரை பார்க்கப்படுகிறது.

 

ஆனால், தன்னை வைத்தே தனக்கு எதிராக மைலேஜ் தேடுவதாக நினைத்த அண்ணாமலை, வானதிக்கு செக் வைக்கவும் தவறவில்லை என்கின்றனர் பாஜகவினர். ஆம், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான கோவை பாஜக தலைவர் உத்தம ராமசாமி வானதிக்கு போட்டியாக மருதமலைக்கு யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். இது வானதி தரப்புக்கு சறுக்கலாக பார்க்கப்படுகிறது. எங்கே மீடியா வெளிச்சமும் டெல்லியின் பார்வையும் தங்களை தாண்டி உத்தம ராமசாமி மீது பட்டுவிடுமோ என்பதில் வானதி தரப்பினர் கவலையாக இருக்கின்றனர்.

 

தமிழ்நாடு பாஜகவின் அதிகரிக்கும் கோஷ்டிபூசல் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக வெளியாகி வருவது, அக்கட்சியினரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.