Skip to main content

மூன்றாவது திருமணம்? பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் 

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

youth was arrested in POCSO in Puducherry

 

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பாவூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி பிளஸ் டூ படித்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி பாகூர் சிவன் கோவிலில் சிவராத்திரி விழாவிற்காக சிறுமியின் குடும்பத்தினர் சென்றனர். பூஜைக்கு நேரமானதால் சிறுமியை வீட்டிற்கு அனுப்பி விட்டு பெற்றோர் மட்டும் கோவிலில் இருந்தனர். பூஜை முடிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது சிறுமி வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காதால் சிறுமியை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என நேற்று முன்தினம் காணவில்லை என அறியாங்குப்பம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். மாயமான அந்த சிறுமியை அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். 

 

இதற்கிடையே நோணாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் சம்பந்தப்பட்ட சிறுமியை ஒருவர் இறக்கி விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையறிந்து பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கு விரைந்து சென்றனர். பெற்றோரை பார்த்ததும் சிறுமி ஓடிச் சென்று பழைய பாலத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்திருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள்  உடனடியாக ஆற்றில் இறங்கி அந்த சிறுமியை மீட்டனர். ஆழம் குறைவு என்பதால் சிறுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அரசு பொது மருத்துவமனயில் சிறுமியை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

 

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் கூடுதல் உதவி ஆய்வாளர்  அன்பரசன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணையில் நடத்தினர். விசாரணையில் சிறுமியை கடத்தி சென்றது கடலூர் மாவட்டம் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த ஏழைமுத்து மகனான தனியார் பேருந்து நடத்துநர் பாபு(29) என்பது தெரியவந்தது.  தற்போது தனியார் ஸ்போர்ட்ஸ் கடையில் வேலை பார்த்து வந்த பாபுக்கு ஏற்கனவே இருசம்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகி முதல் மனைவி மூலம் 7 வயதில் மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பின்னர் முதல் மனைவியிடம் விவாகரத்தாகி இரண்டாவதாக மதுரம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவரின் தவறான நடவடிக்கையால் 6 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மனைவியும் பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே பாபு மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்து தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்தபோது அதே பேருந்தில் அன்றாடம் பள்ளிக்கு சென்று வரும் 17 வயது சிறுமியை நோட்டமிட்டு பழகியுள்ளார். 

 

இந்நிலையில்  கடந்த சனிக்கிழமை (சிவராத்திரி) இரவு அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி எங்கேயோ அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாபுவிடம் வற்புறுத்தியபோது உனக்கு 18 வயதாகவில்லை வயது பூர்த்தியானதும்  திருமணம் செய்து கொள்கிறேன் என சமாதானம் செய்து பைக்கில் அழைத்து வந்து நோணாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே இறக்கி விட்டுள்ளார். இது குறித்து பாபு மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். பாபுவின் செல்போன் நம்பரை வைத்து இருக்கும் இடத்தை அடையாளம் கண்டனர். அபிஷேகப்பாக்கம் பகுதியில் முகாமிட்டிருந்த போலீசார் ஒரு வேனில் இருந்து பாபு இறங்கி தனது பைக்கை எடுக்க முயன்ற போது அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்