Skip to main content

சபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம் கருத்து!

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
sabarimala


சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கேரளாவின் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வழங்கக்கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர், சந்திராசூட், இந்து மல்கோத்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவில் நிர்வாகம் பெண்கள் கோவிலுக்குள் நுழையத் தடை விதிக்க முடியுமா?, இத்தகைய தடை அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகுமா?, பெண்களின் உடற்கூறு அடிப்படையில் பின்பற்றப்படும் இந்த வழக்கம் பாகுபாடு அரசியல் சாசன அமைப்பின் விதிகளை மீறுகிறதா?, இது அவசியமான மத வழக்கமா? 10 வயது குழந்தையையும் 50 வயது பெண்ணையும் சபரிமலையில் அனுமதிக்கும் போது, இளம் பெண்களை அனுமதிப்பதில் என்ன தவறு?

 

 

ஒரு குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் மீது தீண்டாமை முறை பின்பற்றப்படுவது ஏன்? சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஒரு கோவிலில் ஆண்களுக்கு வழிபட அனுமதி உண்டு என்றால், பெண்களுக்கும் அனுமதி உண்டு.

ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானம். மனிதர்களுக்குள் வேறுபாடு காட்டக்கூடாது. பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் செல்லக் கூடாது என்பதற்கு வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை. எந்த ஒரு கோயிலும் தனியாருக்கு சொந்தமில்லை. எல்லோருக்கும் அவரவர் மதத்தை பின் பற்ற உரிமை உண்டு. இந்த விவகாரத்தில் கேரளா அரசு தனது நிலைப்பாட்டை மாற்றுவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்தலாம் என்பதே தங்களின் நிலைப்பாடு என கேரள அரசு தெரிவித்தது.

சார்ந்த செய்திகள்