Skip to main content

நேருவின் மனைவி என பழங்குடியினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் மரணம்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

A woman shunned by tribals as Nehru's wife lost her life

 

ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூதாயத்தை சேர்ந்தவர் புத்னி மஞ்சியன். கடந்த 1959ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அணைக்கட்டு திட்டம் ஒன்றை தொடங்கி வைப்பதற்காக தன்பத் மாவட்டம் அருகே உள்ள பழங்குடியின பகுதிக்கு சென்றிருந்தார். 

 

அப்போது நேரு, பழங்குடியின சமுதாயத்தை கெளரவிக்கும் விதமாக அங்கு நின்று கொண்டிருந்த புத்னி மஞ்சியனுக்கு மாலை அணிவித்தார். ஆனால், சந்தால் என அழைக்கப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பெண்ணிற்கு ஆண் மாலை அணிவித்தால் அதை திருமணமாக கருதினர். இந்த நிலையில் தான், முன்னாள் பிரதமர் நேரு, அந்த பெண்ணுக்கு மாலை அணிவித்துள்ளார்.

 

மேலும், பழங்குடியின சமுதாயம் அல்லாத நேரு, புத்னி மஞ்சியனுக்கு மாலை அணிவித்ததால் அந்த பெண்ணை அவர்களுடைய சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டனர்.  இதனால், அவர் வேலை பார்த்து வந்த தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனிலும் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன் பின்னர், ஜார்க்கண்டிற்கு குடிபெயர்ந்த புத்னி, சுதிர் தத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

 

இதற்கிடையே, கடந்த 1985ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, மேற்கு வங்க மாநிலம், அசன்சோல் பகுதிக்கு சென்ற போது புத்னி மஞ்சியன் நிலைமையை பற்றி அறிந்தார். அதனால், புத்னிக்கு  அவர் வேலை பார்த்த பள்ளத்தாக்கு கழகத்தில் மீண்டும் வேலை வழங்கப்பட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது 80 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹேமந்த் சோரன் ஏன் கைது செய்யப்பட்டார்?; மல்லிகார்ஜுன கார்கே தகவல்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mallikarjuna Karke information on Why was Hemant Soran arrested?

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக 19.04.2024 தொடங்கிய தேர்தலானது வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மக்களவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த ஆண்டு, காங்கிரஸ் தலைமையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. 

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி சார்பாக, பீகார், பெங்களூர், மும்பை, டெல்லி என ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள், தொகுதி பங்கீட்டில் சில கருத்து மோதல்கள் இருந்தாலும், பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை கருத்தோடு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், சுரங்க முறைகேட்டின் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி, இந்தியா கூட்டணியில் இருக்கும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதே போல், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு, எதிர்கட்சிகள், பா.ஜ.க மீது குற்றச்சாட்டு வைத்தும், கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர வாக்குப்பதிவில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று (21-04-24) இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Mallikarjuna Karke information on Why was Hemant Soran arrested?

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். அதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஹேமந்த் சோரன் இந்திய கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல மறுத்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். ஹேமந்த் சோரன் ஒரு துணிச்சலான நபர், அவர் தலை குனிவதை விட சிறை செல்வதையே விரும்பினார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்காமல், பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியினரை அவமதித்துவிட்டார். பழங்குடியினரை தொடர்ந்து பயமுறுத்தினால் பா.ஜ.க அழிந்துவிடும். பழங்குடியினரை தீண்டத்தகாதவர்களாக பா.ஜ.க கருதுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 150 முதல் 180 இடங்களையே வெற்றி பெறும்” என்று கூறினார்.

Next Story

“மரியாதை இல்லை” - பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் முதல்வரின் அண்ணி சீதா சோரன்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 Sita Soran, sister-in-law of former chief minister who joined BJP

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும் தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக, பா.ஜ.க கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும் ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அதன்படி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி (02.02.2024) பதவியேற்றார்.

 Sita Soran, sister-in-law of former chief minister who joined BJP

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியான சீதா சோரன், அந்த கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை விட்டு விலகி இன்று (19-03-24) அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மேலும், தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீதா சோரன், “கட்சிக்காக நான் 14 ஆண்டுகள் பாடுபட்டிருக்கிறேன். ஆனால் அதற்கான மரியாதை எனக்கு இல்லை. அதன் காரணமாகவே இந்த முடிவுக்கு நான் தள்ளப்பட்டேன். எனது கணவர் துர்கா சோரனின் மரியாதையை காக்கவே, மரியாதை இல்லாத இடத்தில் இருந்து நான் வெளியேறி இருக்கிறேன். மேலும், அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் மீது நம்பிக்கை வைத்து நான் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறேன். ஜார்க்கண்டை காப்பாற்றுவதில் அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.