Skip to main content

68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவின் உரிமையாளரான டாடா நிறுவனம் - மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

air india

 

இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், கடுமையான கடனில் சிக்கித் தவிக்கிறது. தற்போது 60,000 கோடிக்கும் மேலான கடனில் சிக்கித் தவிக்கும் அந்த நிறுவனத்தை, கடந்த 2018ஆம் ஆண்டே விற்க மத்திய அரசு முயற்சி செய்தது. ஆனால், அப்போது ஏர் இந்தியாவை வாங்க யாரும் முன்வரவில்லை.

 

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் டாடா குழுமம் இறங்கியது. கடந்த மாதம் 15ஆம் தேதி டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தொகையை சமர்ப்பித்தது.

 

இந்தசூழலில் சில நாட்களுக்கு முன்னர் டாடா குழுமத்தின் ஏலத்தொகையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை மத்திய அரசு மறுத்தது. இந்தநிலையில் தற்போது ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தை டாடா நிறுவனம் வென்றுவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

18,000 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வங்கியுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, இதற்கான பணப் பரிவர்த்தனை இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. 1932ஆம் ஆண்டு டாடா குழுமம் ஆரம்பித்த டாடா ஏர்லைன்ஸ்தான் 1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றப்பட்டது. இதன்பின்னர் 1953ஆம் ஆண்டு ஏர் இந்தியா அரசுடைமையாக்கப்பட்டது. தற்போது 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா டாடாவின் கைகளுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்