Skip to main content

தடை விதித்த இந்திய அரசு; உள்ளே நுழைந்த அம்பானி - சவுகதா ராய் எம்.பி. 

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

saugata roy MP Criticize modi and ambani

 

மத்திய அரசு ஆகஸ்ட் 3, 2023 அன்று இந்தியாவில், மடிக்கணினி இறக்குமதித் தடையை அமல்படுத்தியது. இதில் மடிக்கணினி, கணினி, டேப்லேட் உள்ளிட்ட ஏழு எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்த விரைவான தடையானது, மடிக்கணினி, டேப்லெட்டுகள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன், இறக்குமதியாளர்கள் உரிமத்தைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களான லேப்டாப், டேப்லேட் போன்ற பொருட்களின் தேவை அதிகமாக இருப்பதால் லேப்டாப் இறக்குமதி தடையை நிறுத்துமாறு பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். 

 

இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக முதற்கட்டமாக இந்த திட்டத்தை அமல்படுத்த இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மடிக்கணினிகளுடன் தொடர்புடைய பிற பொருட்களில் ஏற்படுகின்ற அபாயத்தை குறைப்பதற்கு இந்த திட்டம் உதவும். மேலும், இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி, அதன் மூலம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தது. 

 

இதனிடையில், இந்த அறிவிப்பில் வெளிநாட்டில் இருந்து இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் 31 அக்டோபர் 2023 வரை நீட்டிக்கப்பட்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்வதற்கான தடை உத்தரவு நவம்பர் 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

saugata roy MP Criticize modi and ambani

 

இந்த நிலையில், ஜியோ நிறுவனம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மிகக் குறைந்த விலையில் ஜியோ மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த லேப்டாப் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்தது. குறைந்த விலையான ரூ.16,499  ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்ட  இந்த மடிக்கணினி மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் இந்த ஜியோ மடிக்கணினி கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இந்த நிலையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள்(10.8.2023) பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார்.

 

saugata roy MP Criticize modi and ambani

 

அதன்படி இன்று நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் விவாதத்தில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் மத்திய அரசின் லேப்டாப் இறக்குமதி தடையையும், ஜியோ நிறுவனத்தின் லேப்டாப் அறிமுகம் குறித்தும் பேசினார். நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி, சவுகதா ராய், “டாட்டா, அதானி, அம்பானி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவில் கூடுதலான நன்மைகள் நடக்கின்றன. இதில், அதானிக்கு அதிகப்படியான விமான நிலையங்கள், சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் கிடைக்கின்றன. அம்பானி, தனது லேப்டாப்பை கொண்டு வர, வெளிநாட்டில் இருந்து லேப்டாப் இறக்குமதிகளை நிறுத்துமாறு மத்திய அரசை வற்புறுத்துகிறார். அதானியைப் பற்றி ஹிண்டர்பக் கொடுத்த அறிக்கை தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த தகவலையும் சொல்லவில்லை” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.