Skip to main content

"மத்திய அரசு மாநிலங்களுக்கு தாராள நிதி உதவி செய்ய வேண்டும்" - நாராயணசாமி பேட்டி!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று (20.05.2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  

" வெளியில் இருந்து  புதுச்சேரிக்கு வருவோருக்குதான் கரோனா தொற்று உள்ளது. வெளியில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இல்லாவிட்டாலும் வீட்டில் தனிமைப்படுத்துகிறோம். அறிகுறி தென்பட்டால் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதிக்கிறோம். ஒருவர் மருத்துவமனையில் சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சையில் உள்ளார். அதேபோல் காரைக்காலுக்கு இருவர் திரும்பியுள்ளனர்.

 

 

puducherry narayanasamy interview

 

கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க மருந்து கண்டுபிடிப்பது அவசியம். இந்தியாவும் அந்த முயற்சியில் உள்ளது. மத்திய அரசானது சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அனைத்து மாநிலங்களுக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஒதுக்குவதாக தெரிவித்தனர். ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்க எந்த உத்திராவாதமும் நிதி அமைச்சகம் தரவில்லை. பெரிய அளவில் பாதிக்கப்பட்டோர் இவர்கள்தான். அத்துடன் கட்டுமான தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புச்சாரா தொழிலாளர்களும் பாதிப்பில் உள்ளனர். அவர்களுக்க்கான முழுமையான திட்டமிடலுமில்லை.

நாட்டிலுள்ள 13 கோடி ஏழை மக்களுக்கு வங்கிக்கணக்கில் ரூ. 5 ஆயிரம் செலுத்தினால் வாழ்வு நிலை மாறும் என்ற கருத்தை மத்திய அரசு செயல்படுத்த மறுக்கிறது. மத்திய அரசின்  இத்திட்டத்தில் முழுமையாக மக்களுக்கு கிடைப்பது 1 லட்சத்து 75 ஆயிரம் கோடிதான். மற்றவை பட்ஜெட்டில் அறிவித்ததுதான். மாநிலங்கள் நிதி பற்றாக்குறையால் பாதித்துள்ளன. வருவாய் இல்லாத நிலை உள்ளது. ஊரடங்கு தளர்த்தினாலும் சகஜ வாழ்வு திரும்பவில்லை. மாநிலங்களுக்கு தாராள நிதி உதவி செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் கூறியுள்ளோம். ஏற்கெனவே தரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு, பாதிக்கப்பட்ட இழப்பீடு தரவேண்டும் என கடிதம் எழுதியும் பிரதமரிடமிருந்து பதில் வரவில்லை. கரோனா காலத்தில் ரூ.995 கோடி வேண்டும் என கடிதம் எழுதியும் பதில் வரவில்லை.


புதுச்சேரி மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு  செவிசாய்க்காமல் இருப்பது வருத்தத்துக்கு உரியது. உடனடியாக உதவ வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியாத நிலையில் பல மாநிலங்கள் உள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிப்பு இன்னும் அதிகளவில் உள்ளது. ஏராளமானோர் நடந்து செல்லும் சூழல் உள்ளது. கையில் பணமில்லை. கையில் பணத்தை தர கோரினோம். சிறப்பு ரயில்களை மத்திய அரசு நிறைய இயக்க வேண்டும். இதை மாநில அரசோடு ஒருங்கிணைந்து செய்வது அவசியம்.

மேட்டூர் அணை திறக்கும் சமயத்தில் குறுவை விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க 1 டி.எம்.சி கிடைக்க ஆயத்தப்பணிகளை செய்ய அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். கடைமடை பகுதி வரை தண்ணீர் வர தமிழக அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை (21.05.2020) முதல் புதுச்சேரி-காரைக்கால் பஸ் போக்குவரத்து இயங்க உள்ளது. பக்கத்து மாவட்டங்களில் கரோனா தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு தொற்று அறிகுறி வரும் என்று கூறுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு புதுச்சேரி மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்"  என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.