Skip to main content

முதலமைச்சர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு; உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சுயேட்சை எம்.எல்.ஏ.

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Pondicherry MLA in struggle and complaint on CM Rangasamy

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஏனாம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மல்லாடி கிருஷ்ணராவ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த தேர்தலில் காங்கிரஸிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். ஏனாமில் மல்லாடி கிருஷ்ணராவ் போட்டியிடாமல் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட கொல்லபள்ளி ஸ்ரீனிவாச அசோக் என்பவர் வெற்றி பெற்றார். சுயேட்சையாக வெற்றி பெற்ற இவர் பா.ஜ.க கூட்டணியின் முதலமைச்சரான ரங்கசாமியை ஆதரித்தார். அதேசமயம் ரங்கசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு தான் வென்றதால் தனது தொகுதியை முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து புறக்கணிப்பதாக பல முறை குற்றஞ்சாட்டி வந்தார்.

 

இந்நிலையில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக் தனது தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி நேற்று சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதால் பல முறை கோரிக்கை வைத்தும் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது தொகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராமல், மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து முடக்குவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மீது குற்றஞ்சாட்டினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆலோசனை மற்றும் அவரது தூண்டுதலின் பேரிலேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான தனக்கு எந்தவித அரசு விழாக்களுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்படாமல், தொடர்ந்து தன்னை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார்.

 

அவர் மேலும் கூறுகையில், "வரும் காலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதை ஆளும் அரசு நிறுத்திக்கொண்டு, தனது மக்கள் நலத்திட்டங்களுக்கான கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

அவரிடம் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் இரு வாயில் கதவுகளும் மூடப்பட்டன. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. அசோக்கிடம் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சமரசம் செய்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். ரங்கசாமியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேரவைத் தலைவர் அறைக்கு வந்த அசோக் பழச்சாறு அருந்தி தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். அப்போது அவர், "எனது 14 கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். முதல் கட்டமாக மருத்துவம், கோயில் கமிட்டி, சுகாதார கமிட்டி உள்ளிட்ட 5 கோரிக்கைகள் உடனடியாக ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும். மற்ற கோரிக்கைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்ததை அடுத்து உண்ணாவிரதத்தை ஒத்தி வைத்தேன்" என்று குறிப்பிட்டார்.

 

இதனிடையே பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் பா.ஜ.க ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோர் ஏனாம் எம்.எல்.ஏ. அசோக்கின் 14 கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருமாறு சபாநாயகர் செல்வத்திடம் மனு அளித்தனர். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், "பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். தொகுதி பிரச்சனைகளை சரி செய்து தருவதாகத் தெரிவித்துள்ளோம். தற்போது பா.ஜ.க - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழல் தொடர்பாக பா.ஜ.க. மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று மேலிடம் கூறியுள்ளது. வரும் 15 ஆம் தேதிக்குள் மேலிடத்திலிருந்து அகில இந்திய பா.ஜ.க. அமைப்புப் பொதுச்செயலாளர் சந்தோஷ் புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமியிடம் பேசி முடிவு காண்பார். கண்டிப்பாக சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்" என்றார்.

 

புதுச்சேரியை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வரும் சுயேட்சை எம்.எல்.ஏ.வின் திடீர் உண்ணாவிரதம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், பா.ஜ.க ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் ஆகியோர் இதே போல் சட்டப்பேரவையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆளும் அரசுக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் எதிராக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பா.ஜ.க - என்.ஆர் காங்கிரஸுக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசலைக் காண்பிப்பதாக உள்ளது என்று சொல்கிறார்கள் புதுச்சேரி அரசியல் விமர்சகர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் ரங்கசாமியை பாஜக சிறைபடுத்தி வைத்திருக்கிறார்கள்” - தமிழ்வேந்தன் குற்றச்சாட்டு

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Puducherry AIADMK candidate Tamilvendan accuses BJP

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ் வேந்தனை நக்கீரன் சார்பில் சந்தித்து பேட்டி கண்டோம். அப்போது அவர் புதுச்சேரி அரசியல் நிலை குறித்தும், தங்களது கட்சி குறித்தும் நக்கீரனிடம் பகிர்ந்துகொண்டதை இங்குக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளோம்...

புதுச்சேரியில் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறதாகக் கூறப்படுகிறது, இதற்கெல்லாம் என்ன தீர்வு இருக்கிறது? இது தொடர்பான வாக்குறுதி உங்களிடம் இருக்கிறதா?

வாக்குறுதியே கிடையாது.. நிறைவேற்றிக் காட்டுவோம். சட்ட ஒழுங்கு பிரச்சனை நிறைய இருக்கிறது. காவல்துறையின் கை கட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி ரவுடிகளின் கோட்டையாக உள்ளது. யார் உயிருக்கும் பாதுகாப்பில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட சிறுமி படுகொலை செய்யப்பட்டார். மனதை உருக்கிய சம்பவம் அது. ஒரு சிறுமியை 54 வயது பெரியவர் ஒருவரும் 19 இளைஞர் ஒருவரும் சேர்ந்து வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் தன்னிலை மறந்து கஞ்சாவிற்கு அடிமையானதால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்துதான் புதுச்சேரிக்குள் கஞ்சா வருகிறது. தமிழகத்தில் 10 வருடம் அதிமுக ஆட்சி இருந்தத போது இது போன்று ஏதாவது சம்பவம் நடந்ததா? வடமாநிலத்திலிருந்து தமிழநாட்டிற்கு கஞ்சா வருகிறது; அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறது. அதனைக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும்; தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தடுக்க தவறிவிட்டார்கள். கட்டப்பட்டுள்ள காவல்துறையின் கையை அவிழ்த்துவிட்டால்தான் தடுக்கமுடியும். இதைப்பற்றியெல்லாம் பாஜகவிற்கு எந்தக் கவலையும் இல்லை. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு வரவில்லை. அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? ஏன் வரவில்லை? முதல்வர் ரங்கசாமி  வரவில்லை. நிவாரணம் கொடுத்தால் போதுமா? இன்றைக்கு அந்தச் சிறுமி உயிரோடு இருந்திருந்தால் வருங்காலத்தில் ஒரு முதல்வராகவோ, ஆட்சியராகவோ ஆகியிருப்பார்.  

எல்லாம் செய்துவிட்டு நிவாரணம் கொடுத்துட்டா முடிஞ்சுடுமா? யாருக்குச் சார் உங்க பணம் வேணும். ஏழைகளுக்குச் சம்பாரிக்கும் திறமை இருக்கிறது. நீங்க என்ன எங்களுக்குப் பணம் தருவது. உங்கள் பணம் எங்களுக்கு வேண்டாம். எங்களைப் படிக்க விடுங்க. ஒருகாலத்தில் கல்வியில் பாண்டிச்சேரி எங்கையோ இருந்தது; ஆனால் இன்று இந்தியாவிலேயே பின் தங்கியுள்ளது. இவர்கள் கல்விக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது இல்லை.

ஒருபக்கம் முதல்வர் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணி, மறுபக்கம் வைத்தியலிங்கம் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி இப்படி இருவரும் பலமான கூட்டணி அமைத்ததால் அதிமுக தனித்து விடப்பட்டுள்ளதா?

ரங்கசாமி - பாஜக ஒரு பலமான கூட்டணி என்று கூறுவது தவறு. ரங்கசாமியை பாஜக சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  எங்கள் முதல்வர் ஒரு கூண்டு கிளிபோன்று உள்ளார். அவரை டார்ச்சர் பண்றாங்க பாஜக. கொரோனா சிகிச்சையின் போது முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் இருந்தபோது, பாஜக மூன்று எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுத்துவிட்டது. ரங்கசாமியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  அவரது கட்சி தொண்டர்களே அதிருப்தில் இருக்காங்க. புதுச்சேரியே ஒரே ஆர்.எஸ்.எஸ் மயமா மாறிவிட்டது. அதை மாற்றவேண்டும். இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து அதனை மாற்றிக்கொண்டிருக்கிறோம். 

வைத்திலிஙகம் இந்தியா கூட்டணி பலமான கூட்டணி கிடையாது. கடந்த தேர்தலில் வைத்திலிங்கம், ஜான்குமார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் இருந்தார்கள். அன்றைக்குக் காங்கிரஸ் பேரியக்கம் ஒன்றாக இருந்தது. அதிலிருந்து பிரிந்துவந்தவர்கள்தான் தறபோது பாஜகவில் இருக்கின்றனர். அப்படியிருக்கும் போது இந்தக் கூட்டணி எப்படி பலமான கூட்டணி என்று சொல்ல முடியும். இவர்கள்தான் பிரிந்துவந்துட்டார்களே என்று பார்த்தால் அதனால் பாஜகவிற்கு பலம் கிடையாது. 

மக்கள் மாறி மாறி கட்சி தாவுபவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நமச்சிவாயத்திற்கு 54 வயது இருக்கும்.அதற்குள் 7 கட்சி மாறிவிட்டார். எனக்கு 34 வயதாகிறது. நான் ஒரு கட்சி அதிமுகவில்தான் இருக்கிறேன். 

நமச்சிவாயம் ரங்கசாமியின் நாற்காலிக்கு ஆசைப்பட்டார் என்று கூறப்பட்டது, இதனால் இருவருக்கும் உள்ளே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ஆனால் தற்போது ரங்கசாமி நமச்சிவாயத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் முதலே கூறியதுபோல் எங்க முதல்வர் ரங்கசாமியைக் கூண்டுக் கிளியாக மாற்றிவிட்டனர். நமச்சிவாயம் நடுவில் நிற்கிறார். முதல்வர் ரங்கசாமி ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கிறார்.  பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் எங்களுடன் கூட்டணியிலிருந்த வரைக்கும் நல்ல கட்சி. அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி என்றாலே மக்களுக்குப் பிடிக்கும். இருகட்சிகளும் கூட்டணி என்று அறிவித்துவிட்டாலே அவர்கள்தான் ஆளும் கட்சியாக மாற்றிவிடுவார்கள். ஆனால் பாஜக உள்ளே வந்த பிறகு முதல்வர் ரங்கசாமிக்கு அதிகமான இழி பெயர்கள் வந்துள்ளது. அவரால் மக்களுக்கு எதுவும் நல்லது செய்யமுடியவில்லை, அப்படி இருக்கும் போது கூட்டணியில் இன்று தொடர்கின்றனர். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. உதாரணமாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்ததில் ஊழல் நடந்துள்ளது. இப்படிப் பல சம்பவங்கள் நடந்துள்ளது. இதனை எதிர்த்து அதிமுக மட்டுமே குரல்கொடுத்துள்ளது. மற்ற யாரும் கண்டுகொள்வதில்லை, கமிஷனுக்கு ஆசைப்படுகிறார்கள்.

Next Story

புதுச்சேரியை உலுக்கிய கொலை; சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Puducherry Incident; announcement of relief to the girl's family

புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் துப்பு துலக்கும் விதமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரை பிடித்து போலீசார் நேற்று மதியத்தில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியை தேடியதும் தெரியவந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த செய்திகள் பரவின. இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை பகுதியில் கருப்பு சட்டை அணிந்து ஒன்றுகூடிய இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் சிறுமியின் புகைப்படம் பொறித்த பதாகையை ஏந்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. முன்னதாக சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ள பாஜக அமைச்சர் நமச்சிவாயம், குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அதே நேரத்தில் சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.