Skip to main content

"வெறுப்பு, பயங்கரவாதத்தை சார்ந்த சக்திகள் இன்றும் உள்ளன" - பிரதமர் மோடி!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

narendra modi

 

புத்தமதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரின் பிறந்தநாளன இன்று, (26.05.2021) உலகமெங்கும் வாழும் புத்த மதத்தைச் சார்ந்தவர்களால் புத்த பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், கரோனாவால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இரங்கல்களையும் தெரிவித்தார்.

 

பிரதமர் மோடி பேசியது வருமாறு;-

 

ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காக, தன்னலமின்றி தங்கள் உயிரைப் பணயம் வைத்துக்கொண்டிருக்கும் நமது முன்கள சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை வணக்கம் செலுத்துகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும், தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா தொற்றுநோயைப் பற்றி இப்போது நமக்கு நல்ல புரிதல் உள்ளது. இது போராடுவதற்கான நமது யுக்தியைப் பலப்படுத்துகிறது. உயிரைக் காப்பாற்றுவதற்கும், தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் முக்கியமானதான தடுப்பூசி நம்மிடம் உள்ளது. கரோனா தடுப்பூசிகளில் பணியாற்றிய நமது விஞ்ஞானிகள் பற்றி இந்தியா பெருமிதம்கொள்கிறது.

 

கடந்த ஆண்டில், பல தனிநபர்களும் அமைப்புகளும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப முன்வந்து துயரத்தைக் குறைக்க, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததைப் பார்த்தோம். உலகெங்கிலும் உள்ள புத்த அமைப்புகள் மற்றும் புத்த தர்மத்தைப் பின்பற்றுபவர்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களில் பெருந்தன்மையான பங்களிப்பை வழங்கினார்கள்.

 

கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக அனைத்தையும் செய்யும்போது, மனிதகுலம் எதிர்கொள்ளும் மற்ற சவால்கள் மீதான பார்வையை இழக்கக்கூடாது. மனிதத்திற்கு எதிரான சவால்களில் ஒன்று காலநிலை மாற்றம். வானிலை முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பனிப்பாறைகள் உருகுகின்றன. ஆறுகளும் காடுகளும் ஆபத்தில் உள்ளன. நம் கிரகம் காயத்தோடு  இருக்க நாம் அனுமதிக்க முடியாது. பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை நிறைவேற்றும் பாதையில் உள்ள, வேறு சில பெரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. நிலையான வாழ்க்கை என்பது சரியான வார்த்தைகள் பற்றியது மட்டுமல்ல; சரியான செயல்களைப் பற்றியது.

 

புத்தரின் வாழ்க்கை அமைதி, நல்லிணக்கம் மற்றும் இணைந்து வாழ்வது பற்றியது. வெறுப்பு, பயங்கரவாதம் மற்றும் இரக்கமில்லா வன்முறை ஆகியவற்றை சார்ந்தே தனது இருப்பை கொண்டிருக்கும் சக்திகள் இன்றும் உள்ளன. இத்தகைய சக்திகள் தாராளமய ஜனநாயகக் கொள்கைகளை நம்பவில்லை. மனிதத்தை நம்புபவர்கள் ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.