Skip to main content

உள்துறை அமைச்சர் மீது சிபிஐ விசாரணை - உச்சநீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரி மனு!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021
PARAMBIR SINGH

 

 

இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் வீட்டினருகே வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், தினமும் தினமும் புது புது திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில், மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வேஸை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. 

 

இதன்பிறகு திடீரென மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். போலீஸார் செய்த மன்னிக்க முடியாத குற்றத்திற்காக அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்தநிலையில் பரம்பீர் சிங், மஹாராஷ்ட்ரா முதல்வருக்கு எட்டு பக்கம் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் சச்சின் வேஸ் மூலம் மாதம் 100 கோடி ரூபாய் மாமூல் வசூலித்து தருமாறு போலீஸாரை மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தார். 

 

இது மஹாராஷ்ட்ரா அரசியலில் புயலை கிளப்பியது.  அனில் தேஷ்முக் பதவி விலகவேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வலே, மஹாராஷ்ட்ராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதினார். மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவசேனாவின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், அனில் தேஷ்முக் போலீஸ் அதிகாரிகளை நேரில்  அழைத்து கட்டாயப்படுத்தியதாக பரம்பீர் கூறும் நாட்களில், அனில் தேஷ்முக் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்ததார். பரம்பீர் கூறுவது ஆதாரமற்ற குற்றசாட்டு. எனவே அனில் தேஷ்முக் பதவியிலிருந்து விலகுவது என்ற கேள்விக்கே இடமில்லை என தெரிவித்தார்.

 

இந்தநிலையில் பரம்பீர் சிங், அனில் தேஷ்முக் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்கு அவர் மீது சிபிஐ விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களினால் மஹாராஷ்ட்ரா அரசியல் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. 

 

வெடிபொருட்கள் நிரம்பிய கார் - அம்பானி வீட்டருகே அழைத்து வந்த போலீஸ் அதிகாரி!

 

 

 

சார்ந்த செய்திகள்