Skip to main content

சிபிஐ முன்னாள் இயக்குநர் மீது ஒழுங்கு நடவடிக்கை - மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

alok verma

 

சிபிஐயில் சிறப்பு இயக்குநராக இருந்துவந்தவர் ராகேஷ் அஸ்தானா. இவருக்கும் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு மோதல் வெடித்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் சிபிஐயிலிருந்து மாற்றப்பட்டனர்.

 

ராகேஷ் அஸ்தானா, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர் சில தினங்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் டெல்லி காவல்துறை ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதோடு ஒருவருட பதவிக்கால நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

 

அதுநேரத்தில் அலோக் வர்மா, சிபிஐயிலிருந்து குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு மாற்றப்பட்டார். அந்தப் பதவியை ஏற்காத அவர், 2017ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதியோடு தனக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால், தன்னை ஓய்வுபெற்றவராக கருதுமாறு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.

 

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், பதவியைத் தவறாக பயன்படுத்தியதற்காகவும், பணி விதிகளை மீறியதற்காகவும் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைக்குப் பரிந்துரை செய்துள்ளது. மத்தியப் பணியாளர் நலத்துறை அமைச்சகம் இந்தக் கடிதத்தை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. ஒருவேளை இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டால், அலோக் வர்மாவின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஃபேல் விவகாரம் குறித்து விரைவில் சிபிஐ விசாரிக்க இருப்பதால்தான், பிரதமர் பயந்துபோய் சிபிஐ இயக்குநரை நீக்கினார் என அலோக் வர்மா சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது ராகுல் காந்தி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்