Skip to main content

பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்; நடுரோட்டில் கதறி அழுத கேரளப் பெண்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Jain snatched from Kerala woman

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது நெய்யாற்றுக்கரை. இந்தப் பகுதியைச் சேந்தவர் லிஜி. 30 வயதுடைய இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். லிஜி தனக்கென்று இரு சக்கர வாகனம் ஒன்று வைத்திருப்பதால், அதில்தான் வெளியே செல்லும் போது சென்று வருவது வழக்கம்.

அதன்படி, வழக்கமாக தனது இரு சக்கர வாகனத்தில் லிஜி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்து புறப்பட்ட லிஜி நெய்யாற்றுக்கரையில் ஒரு சாலையில் சென்றிருக்கிறார். அந்த சாலையில் வலது புறமாக சென்றவர், ரோட்டை கிராஸ் செய்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் இண்டிகேட்டரை ஆன் செய்து மாறுவதற்கு தயாராகியுள்ளார். ஆனால், அப்போது அடுத்தடுத்து வாகனங்கள் வந்துள்ளது. ஆனாலும் அவசரப்படாத லிஜி, அந்த வாகனங்கள் சென்ற பிறகு மாறலாம் என அந்த இடத்திலேயே நின்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனம் ஒன்றிலிருந்து இரண்டு நபர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு வந்துள்ளனர். அந்த டூவீலர் லிஜி நிற்கும் வாகனத்திற்கு அருகே வந்துள்ளது. அப்போது, அந்த இரு சக்கர வாகனத்தின் பின் புறத்தில் அமர்ந்திருந்த ஒருவன், தனது வாகனத்தை திருப்புவதற்கு தயாராக நின்ற லிஜியின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியைப் சட்டென்று பிடித்து இழுத்துள்ளான்.

இதனை சட்றென்று சுதாரித்து கொண்ட லிஜி, உடனே அவனிடமிருந்து தங்க சங்கிலியைப் பாதுகாக்க முயன்றுள்ளார். அப்போது தனது வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு சங்கிலியை இறுகப் பிடித்துக்கொண்டார் லிஜி. ஆனால், அந்தத் திருடனோ தான் வந்திருந்த பைக்கில் இருந்து இறங்கி அந்தப் பெண்ணுடன் மல்லுக்கட்டி அவரை கீழே தள்ளி, தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த லிஜி, கீழே இருந்து எழுந்து, கத்தி கதறி கூச்சலிட்டுள்ளார். ஆனால், அதற்குள் அங்கு தயார் நிலையில் நின்ற பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பித்து சென்றுள்ளான் அந்தத் திருடன். இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப் பெண், செய்வதறியாமல் கதறி அழுதுள்ளார். பின்னர், அந்த வாகனம் சென்ற வழியிலேயே ஓடியுள்ளார். இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் பலரும் ஓடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அவரால் அந்த இழப்பை தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்தச் சங்கிலி திருடனோடு மல்லுக்கட்டியதில் அந்தப் பெண்ணுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அங்கிருந்த சிலர் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், தனது தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்த லிஜியிடம் திருடர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின்னர், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை பரிசோதித்துள்ளனர். அதில், தனது டூவீலரில் வந்த லிஜி ரோட் கிராஸ் செய்வதற்காக இண்டிகேட்டர் போட்டுக்கொண்டு காத்திருந்துள்ளார். அப்போது அடுத்தடுத்து வாகனங்கள் வந்துள்ளது. அதில் கடைசியாக வந்த வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்த ஒருவன், திடீரென லிஜியின் சங்கிலியை பறித்து செல்வதும், அதனால் லிஜி கதறி கூச்சலிட்டு கத்துவதும் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

இதனையடுத்து, அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அந்த டூவீலர் அடுத்தடுத்து சென்ற இடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை வழிமறித்து, திருடன் தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் இவ்வாறு வாகனத்தில் செல்லும் பெண்களின் நகைகளை பறிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும், இதன் காரணமாக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.