Skip to main content

உ.பி. அரசின் மதரஸா சட்டம்; உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு இடைக்கால தடை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
 Interim ban on the decision of the High Court on UP Govt Madrasa Act

அரபு, உருது, பாரசீகம், இஸ்லாமிய ஆய்வுகள், தத்துவங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான படிப்பு மதரஸா கல்வி ஆகும். அதில், உத்தர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய மாணவர்கள் படிக்கும் இந்த மதரஸா கல்வி முறையை ஒழுங்குபடுத்தும் வகையில், அம்மாநில அரசு, ‘மதரஸா கல்விச் சட்டம் 2004’ என்ற சட்டத்தை கொண்டு வந்தது. 

இந்த சட்டத்தின் மூலம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 25,000 மதரஸாக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 16,000 மதரஸாக்கள் அங்கீகாரம் பெற்றவை. இந்த மதரஸாக்களில் சுமார் 17 லட்சம் இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவற்றில் சுமார் 10,000 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மதரஸா கல்வி வாரியத்தால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டும், டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கப்பட்டும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதனிடையே, இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் மதரஸா கல்வி நிறுவனங்கள் மீது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அன்சுமன் சிங் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. 

இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த சட்டம் தொடர்பாக பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘தனது கடமைகளை ஆற்றும்போது, மதத்தின் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டக்கூடாது. மதம் சார்ந்த கல்விக்கு வாரியத்தை உருவாக்கவோ அல்லது பள்ளிக் கல்விக்கான வாரியத்தை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தத்துவத்திற்காக மட்டும் அமைக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசு அப்படி செய்தால், இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும். 

எனவே, உத்தரப்பிரதேச மாநில அரசின் மதரஸா கல்விச் சட்டம் 2004 என்பது அரசியல் சாசனத்துக்தே எதிரானது. இந்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஆகையால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை, மற்ற பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று கூறி இந்த சட்டத்தை ரத்து செய்தது. 

இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று (05-04-24) விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மதரஸாக்களை ஒழுங்குபடுத்தவே வழக்கு தொடரப்பட்டது. அதில், மதரஸாக்கள் மதச்சார்ப்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படவில்லை. மதரஸாக்களை ஒழுங்குபடுத்த உத்தரவு பிறப்பிக்கலாம். அதற்காக மதரஸாக்கள் சட்டத்தை ரத்து என்று தீர்ப்பளிக்க முடியாது. 

மேலும், வாரியத்தை அமைப்பது மதச்சார்பின்மையை மீறும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது சரியானது அல்ல. எனவே, மதரஸா சட்டம் செல்லாது எனவும், மதரஸா மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறி இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 2வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.