Skip to main content

வெற்றியுடன் முடிவுக்கு வந்தது 15 மாத போராட்டம் - எச்சரிக்கையுடன் அறிவிப்பை வெளியிட்ட விவசாயிகள்!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

farmers

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒரு வருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

 

இந்தச் சூழலில் மத்திய அரசு விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்து, போராட்டத்தை திரும்ப பெறுமாறு வலியறுத்தியது. இருப்பினும் போராட்டத்தை திரும்ப பெற்ற பிறகே வழக்குகள் திரும்ப பெறப்படும் என்பது போன்ற மத்திய அரசின் உத்தரவாதத்தில் இருந்த முன்மொழிவுகளை விவசாயிகள் ஏற்கவில்லை. இதனையடுத்து அந்த முன்மொழிவுகளில் சில மாற்றங்களை செய்து, அதனை மத்திய அரசுக்கு அனுப்பிய விவசாயிகள் திருத்தப்பட்ட முன்மொழிவுகளை ஏற்குமாறு வலியுறுத்தினர்.

 

இதனைதொடர்ந்து மத்திய அரசு தான் முதலில் அனுப்பிய முன்மொழிவுகளில் மாற்றம் செய்து மீண்டும் விவசாயிகளுக்கு அனுப்பியது. அதில் விவசாயிகளின் மேல் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற முடிவு செய்துள்ளதாகவும், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அரசுகளும் விவசாயிகள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்ப பெற ஒத்துக்கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியதாக தகவல்கள் வெளியாகின. அத்தகவல்களை உறுதி செய்த விவசாய சங்க தலைவர்கள், திருத்தப்பட்ட முன்மொழிவுகள் குறித்து அரசாங்கத்தின் லெட்டர்ஹெட்டில் கையொப்பத்தோடு கூடிய முறையான தகவல் தொடர்புக்காக காத்திருப்பதாகவும் அது கிடைத்தவுடன் போராட்டத்தை நிறைவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

 

இந்தநிலையில் மத்திய அரசு, விவசாயிகளுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் எனவும் அந்த குழுவில் விவசாயிகளும் இடம்பெறுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது. தொடர்ந்து அந்த கடிதத்தில், விவசாயிகள் மீதான வழக்குகள் உடனடியாக திரும்ப பெறப்படும் எனவும், பயிர் கழிவுகளை எரித்ததற்கான வழக்குகளும் திரும்ப பெறப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும் மின்சார மசோதா, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுடனான ஆலோசனைக்கு பிறகு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அந்த கடிதத்தில் கூறியிருந்த மத்திய அரசு, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், உத்தரப்பிரதேச ஹரியானா அரசுகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறியிருந்தது.

 

இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் கடிதம் குறித்து ஆலோசித்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு, போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க தலைவர்கள், "போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம். ஜனவரி 15 ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்துவோம். அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், மீண்டும் போராட்டத்தை தொடருவோம். விவசாயிகள் போராட்டத்தை களத்தை விட்டு டிசம்பர் 11 ஆம் தேதி வெளியேறுவார்கள்" என கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்