Skip to main content

காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம் என அமைச்சர் கூறியது தவறல்ல - கர்நாடக முதல்வர்!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

basavaraj bommai

 

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான போரட்டத்தின் போது, ஒரு அரசு கல்லூரியில் தேசிய கோடி ஏற்றப்பட்ட இடத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தநிலையில், அம்மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, காவிக்கொடி ஒருநாள் தேசியக் கொடியாக மாறலாம் எனத் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக அவர், “இன்று இந்துத்துவா மற்றும் இந்து சித்தாந்தம் பற்றி விவாதித்து வருகிறோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என சொன்னால் மக்கள் ஒரு கட்டத்தில் சிரிக்கத் தொடங்கினர். இப்போது நாங்கள் ராமர் கோயிலை கட்டவில்லையா? அதேபோல் எதிர்காலத்தில், 100 அல்லது 200 அல்லது 500 ஆண்டுகளுக்குப் பிறகு,  காவிக்கொடி தேசியக் கொடியாக மாறலாம். மூவர்ணக் கொடி இப்போது தேசியக் கொடியாக உள்ளது. அதை அனைவரும் மதிக்க வேண்டும்.  அரசியல் சாசனப்படி தற்போது மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த நாட்டில் உணவு உண்ணும் ஒவ்வொருவரும் தேசிய கொடிக்கு என்ன மரியாதை தர வேண்டுமோ அதை தர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இதுபெரும் சர்சையை கிளப்பிய நிலையில், நேற்று கர்நாடக மாநில காங்கிரஸார் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, அம்மாநில சட்டமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். மேலும் தேசிய கொடியை ஏந்தி ஈஸ்வரப்பா பதவி விலக வேண்டும் என போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

 

அப்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் கட்சியினர் மூவர்ணக் கொடியை ஏந்தி போரட்டத்தில் ஈடுபடுவது கொடி சட்டத்தை மீறும் செயல் என குற்றஞ்சாட்டினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியது சட்டப்படி தவறு அல்ல என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக  பசவராஜ் பொம்மை கூறியுள்ளதாவது; (இந்த விவகாரம் தொடர்பாக) ஈஸ்வரப்பா விளக்கம் அளித்துள்ளார். செங்கோட்டையில் காவிக்கொடி உடனே ஏற்றப்படும் என அவர் கூறவில்லை. இன்னும் 300 அல்லது 500 வருடங்களில் அது நடக்கலாம் அல்லது நடக்காலும் போகலாம் என்றுதான் அவர் தெரிவித்தார். நாங்கள் தேசிய கோடியை ஏற்றுக்கொண்டோம் எனவும், அதை யாரும் அவமதிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். ஈஸ்வரப்பாவின் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு காட்டி மாநிலத்திலும், சட்டசபையிலும் காங்கிரஸார் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். சட்டப்படி ஈஸ்வரப்பா எந்த தவறும் செய்யவில்லை, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்