Skip to main content

ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற பெட்டிகள் - பயணிகள் அதிர்ச்சி

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Coaches derailed from Kerala Ernakulam Express train

கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரயில் நேற்று(28.6.2024) காலை எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு சாலக்குடியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலில் 20 பெட்டிகள் உள்ள நிலையில் அதில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். காலை 10 மணியளவில் வள்ளத்தோடு பாலம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக ரயில் என்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்று தனியாகச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக செயல்பட்டு என்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினர். பாலத்தைக் கடக்க ரயிலின் வேகம் குறைக்கப்பட்டதால், கழன்று சென்ற ரயில்பெட்டிகள் சிறிது தூரம் சென்று தானாகவே நின்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சூர்,பாலக்காடு ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் கழன்ற சென்ற ரயில் பெட்டிகளை மற்றொரு ரயில் என்ஜின் உதவியோடு இழுத்து வந்து, சம்பந்தப்பட்ட ரயிலுடன் இணைத்தனர். இதையடுத்து 4 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது. 

இதுகுறித்து பேசிய ரயில்வே உயர் அதிகாரிகள், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து பெட்டிகள் கழன்று  சென்றது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கேரளாவிற்குச் சுற்றுலா சென்ற மாணவர் உயிரிழப்பு; துரை வைகோ எம்பி-யின் துரித நடவடிக்கை!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
tn student who passed away Kerala sent his hometown by action Durai Vaiko

பட்டயக் கணக்காளருக்கு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த 12 மாணவர்கள் நேற்று(20.6.2024) இரவு கேரளா மாநிலம் வர்காலாவுக்கு சுற்றுலாவாகச் சென்றுள்ளார்கள். 12 பேரில் 7 பேர் மாணவர்கள், 5 பேர் மாணவிகள். பட்டயக் கணக்காளர் படிப்புக்கான இடைநிலை தேர்வை முடித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இன்று(21.6.2024) காலை வர்காலாவில் உள்ள கடலுக்குச் சென்றுள்ளார்கள். கடலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ரகு என்ற மாணவனை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ரகுவின் உடல் கரை ஒதுங்கியிருக்கிறது.

ரகுவின் உடலைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ரகு உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த  ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, உடனடியாக திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு பேசினார். ரகுவின் நிலைமையை எடுத்துச் சொல்லி மற்ற மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளரையும் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று உதவிடுமாறு தெரிவித்து உள்ளார். அவரும் மாணவர்களை பத்திரமாக தமிழகம் அனுப்பும் பணியை ஒருங்கிணைத்து வருகின்றார். துரை வைகோவின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அப்பகுதி வட்டாட்சியரை நேரில் அனுப்பி உள்ளார்.

எதிர்பாராத விதமாக இறந்த ரகுவிற்கு பிரதப் பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை விரைந்து முடிக்கவும், மற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்கவும் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழக மாணவர்களைப் பத்திரமாக அனுப்பும் பணியில் துரிதமாக செயல்பட்ட திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளருக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள சசி தரூருக்கு துரை வைகோ தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Next Story

25 கி.மீ வரை வாலிபரின் உடலை இழுத்து வந்த ரயில்; காட்பாடியில் பரபரப்பு சம்பவம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
train dragged the boy body for 25 km

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம்(17.6.2024) நள்ளிரவு சுமார் 11:45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்பொழுது ரயில் இஞ்சின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் பிணம் ஒன்று சிக்கி இருந்தது. இதனைக் கண்டு பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனைக் கண்டு கீழே இறங்கிய இஞ்சின் டிரைவர் இரயிலில் வாலிபர் பிணம் சிக்கி இருந்ததைக் கண்டுபிடித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் இரயில் இஞ்சினில் சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர். அப்பொழுது வாலிபர் உடலில் இரண்டு கால்களும்  துண்டாகி இருந்தது மேலும் இரயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களும் தலையில் பலத்த காயம் பட்டிருந்தது.

இறந்த வாலிபர் சிவப்பு நிற டி-ஷர்ட், நீல நிற  பேண்ட் அணிந்திருந்தார். இறந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை மேலும் எந்த இடத்தில் சிக்கினார் என்பதும் தெரியவில்லை. போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். கால்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டதால், காட்பாடி இரயில்வே போலீசார் தண்டவாள பகுதியில் வாலிபரின் கால்களை தேடிச் சென்றனர் .

ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்த போது இஞ்சின் முன் பக்கத்தில் வாலிபரின் பிணம் இல்லை அதற்கு பிறகு வாலாஜா முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் தான் இஞ்சினில் வாலிபர் சிக்கி இருந்துள்ளார். சுமார் 25 கிலோமீட்டர் அங்கிருந்த வாலிபரின் பிணம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளது தெரியவந்தது. இறந்த வாலிபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .சுமார் 25 கிலோமீட்டர் இஞ்சினில் வாலிபர் உடல் இழுத்து வந்த சம்பவம்  காட்பாடி இரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.