Skip to main content

'எஞ்சிய அதிகாரிகள் தகுதியற்றவர்களா?' - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்  

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

 'Are the rest of the officers ineligible?'-Supreme Court condemns the central government

 

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ராவின் பதவியை நீட்டிப்பு செய்வது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இந்திய வருவாய்த்துறை அதிகாரியான எஸ்.கே. மிஸ்ராவை  2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி இரண்டு ஆண்டுகள் பணிக் காலம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குநராக மத்திய அரசு நியமித்து இருந்தது. அதன் பிறகு தற்போது வரை எஸ்.கே. மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். இவருக்கு 2021 மற்றும் 2022 என இரண்டு முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

 

இதற்கிடையில் அமலாக்கத்துறை இயக்குநர் ஒருவருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் பணி நீட்டிப்பு வழங்குவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் எனக் கூறி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இருப்பினும் கடந்த மார்ச் மாதம் பதவி நீட்டிப்பு மீண்டும் வழங்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விரிவாக நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ரா பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டித்தது சட்ட விரோதமாகும். மேலும் எஸ்.கே. மிஸ்ரா ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே தனது பதவியில் நீடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

 

nn

 

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ரா, வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் தனது பதவியில் இருந்து விலக வேண்டிய நிலையில், அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ரா பதவியை வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'எஸ்.கே மிஸ்ராவைத் தவிர எஞ்சிய அதிகாரிகள் தகுதியற்றவர்களா? எஸ்.கே. மிஸ்ரா என்ற ஒரு நபர் இல்லாமல் ஒட்டுமொத்த அமலாக்கத்துறையும் செயல்பட முடியாதா? எனக் காட்டமாகக் கண்டனங்களைத் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த மத்திய அரசு, 'சர்வதேச அளவிலான நிதி மோசடிகளைத் தடுப்பதற்கான அமைப்புக்கு இந்தியா சார்பில் அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்தியா சார்பில் அளிக்கப்பட வேண்டிய அந்த அறிக்கையை அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா தயாரித்து வருகிறார். எனவே அவரின் தற்போதைய பணி தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது' எனப் பதிலளித்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநராக மிஸ்ரா  நீடிக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்