Skip to main content

மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்க மறுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

covid 19 vaccine

 

கரோனா பரவலிலிருந்து தப்பிக்க தடுப்பூசிதான் ஒரே தீர்வு என கருதப்படும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளன. இந்தநிலையில் பஞ்சாப் அரசு, அமெரிக்க தடுப்பூசி நிறுவனமான மாடர்னா, தங்களுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க மறுப்பதாக கூறியது.

 

இதனைத்தொடர்ந்து தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பைசர், மாடர்னா நிறுவனங்கள் தங்களுக்குத் தடுப்பூசி வழங்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "நாங்கள் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி நிறுவனங்களிடம் பேசினோம். இருவரும் தடுப்பூசிகளை எங்களுக்கு நேரடியாக தர மறுத்துவிட்டன. நாங்கள் மத்திய அரசுடன் மட்டுமே தடுப்பூசி வர்த்தகம் மேற்கொள்வோம் என தெரிவித்துவிட்டன. தடுப்பூசிகளை இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்குமாறு நாங்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" என கூறியுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்கள் மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க மறுப்பது, தடுப்பூசியை இறக்குமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மாநிலங்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. 

 

இதற்கிடையே டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, வெளிநாட்டு நிறுவங்கள் மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க மறுப்பது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இவற்றில் எதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. மற்ற நாடுகள் அவற்றுக்கு ஒப்புதல் அளித்ததோடு மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்படுத்தியும்வருகின்றன. இந்தியாவில் என்ன கட்டாயம்? நாம் (தடுப்பூசிகளுக்காக) இரண்டு நிறுவனங்களைச் சார்ந்து இருக்கிறோம். அவையும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கின்றன. ரஷ்யா, 2020 ஆகஸ்டில் ஸ்பூட்னிக் V க்கு ஒப்புதல் அளித்தது. டிசம்பரில் மக்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டில் ஸ்புட்னிக்கிற்கு ஒப்புதல் அளிக்க நாம் மறுத்துவிட்டோம். இறுதியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒப்புதல் அளித்தோம்.  68 நாடுகள் ஸ்புட்னிக் v-க்கு ஒப்புதல் அளித்து பயன்படுத்துகின்றன. டிசம்பர் மாதத்தில் பைசருக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்தது. நாம் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறோம். 85 நாடுகள் பைசரைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன, 46 நாடுகளில் மாடர்னாவுக்கும், 41 நாடுகளில் ஜான்சன் அண்ட் ஜான்சனுக்கும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாம் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறோம். இது நகைச்சுவையா? நீங்கள் (மத்திய அரசு) உலகளவில் தடுப்பூசிகளை வாங்குமாறு கூறுகிறீர்கள். ஆனால் ஒப்புதல் இல்லை" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், "உலகெங்கிலும் நாடுகள் தடுப்பூசி வளர்ச்சியில் ஒரு கண் வைத்திருந்தன. அவர்கள் முன்கூட்டியே கொள்முதலுக்கான ஆர்டர்களைத் தந்தனர். நவம்பர் 2020க்குள், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் 70 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர்களைத் தந்தன. தங்கள் நாட்டு மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை அந்த நாடுகள் வைத்துள்ளன. ஜனவரி மாதத்திற்குள் இங்கிலாந்து அதன் மக்கள் தொகையில் 70% பேருக்கு போதுமான தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய ஆர்டர்கள் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சீரம் நிறுவனத்துக்குச் சென்றார். ஆனால் அவற்றில் முதலீடு செய்யவில்லை. ஆர்டர்களையும் வழங்கவில்லை. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகுதான் ஆர்டர் வழங்கப்பட்டது. 2020 மார்ச் மாதத்தில் அமெரிக்கா தடுப்பூசிகளில் முதலீடு செய்யத் தொடங்கியது. இந்திய அரசு தூங்கிக்கொண்டிருந்தது; இப்போதும் தூங்கிக்கொண்டிருக்கிறது" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.