Skip to main content

14 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு:இந்திய வரலாற்றில் 6வது முறை! மீண்டும் பிரதமராக பதவியேற்றார் நரேந்திரமோடி!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

 


நாட்டின் 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திரமோடி.

 

p

 

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜக மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றது.   புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக  நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன்பின்னர் ராம்நாத்கோவிந்த், மோடிக்கு ஆட்சி அமைக்க  அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.

 

p

 

ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7 மணிக்கு கோலாகலமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்திய வரலாற்றில் பிரதமர் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடைபெறுவது இது 6-வது முறை ஆகும்.    இந்த பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம் நபி ஆசாத், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கர்நாடகா முதல்வர் குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  கலந்து கொண்டனர். 

 

வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர்.   நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.


நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியுடன் அவரது புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவ சக்தி என்று பெயரிடுவதில் எந்த சர்ச்சையும் இல்லை” - இஸ்ரோ தலைவர் சோமநாத்

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

There is no controversy in naming Shiva Shakti ISRO chief Somanath

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. நிலவின் தென் பகுதியில் இறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை நிலவின் தென் துருவத்தில் தொடங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதற்கிடையில் நிலாவில் லேண்டர் தரையிறங்கிய போது, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அடுத்து கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியதும், டெல்லியிலிருந்து நேராக நேற்று பெங்களூருவில் வந்திறங்கினார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சந்திரயான் - 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளைச் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி, “சந்திரயான் - 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியையும் குறிக்கும். அதேபோன்று 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவில் தனது இடத்தைப் பதித்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயர் சூட்டப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கமளித்துள்ளார். அதில், “அறிவியலும், நம்பிக்கையும் இருவேறு பொருள்கள் கொண்டவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறு நாடுகள் நிலவில் தாங்கள் தரையிறங்கிய இடங்களுக்கு பெயர்கள் வைத்துள்ளன. பெயர் சூட்டிக்கொள்வதற்கு அந்தந்த நாடுகளுக்கு உரிமை உண்டு. அதே சமயம் சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயரிடுவதில் எந்த சர்ச்சையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

 

 

 

Next Story

பினராயி விஜயன், மோடிக்கு எதிராக நோட்டீஸ்; துப்பாக்கி ஏந்திய நபர்களால் பரபரப்பு 

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Notice against Pinarayi Vijayan, Modi

 

கேரள மாநிலம் கண்ணூர், வயநாடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்  நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னு அருகே உள்ள வாளத்தோடு டவுன் பகுதியில் திடீரென்று ஒரு பெண் உள்பட 5 மாவோயிஸ்டுகள் வந்தனர்.

 

மேலும், மாவோயிஸ்ட்கள் அனைவரின் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தன. இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வாளத்தோடு டவுனில் சுமார் அரை மணி நேரம் துப்பாக்கிகளுடன் அவர்கள் பேரணி நடத்தினார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஒரு நோட்டீஸையும் அவர்கள் கொடுத்தனர். அந்த நோட்டீஸில், உலக வங்கியின் உத்தரவின் பேரில் ரேஷன் பொருட்களை நிறுத்தும் பிரதமர் மோடி, கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதையடுத்து, இது தொடர்பான போஸ்டர்களையும் மாவோயிஸ்டுகள் அந்தப் பகுதியில் ஒட்டினார்கள். அரை மணி நேரத்திற்குப் பிறகு மாவோயிஸ்டுகள் அந்த இடத்தில் இருந்து சென்றனர். காட்டுப்பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில்தான் வாளத்தோடு டவுன் பகுதி உள்ளது. இது குறித்து அதிரடிப்படைக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து வாளத்தோடு அருகே உள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால், அவர்கள் நடத்திய அந்தத் தேடுதல்  வேட்டையில், மாவோயிஸ்டுகள் யாரும் சிக்கவில்லை. துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் பேரணி நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.