Skip to main content

தமிழகம் இரண்டாக உடைக்கப்படுகிறதா? -மாவட்ட பிரிப்பால் புதிய சர்ச்சை!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

பரமசிவம், மனோசௌந்தர், ராஜா

அ.தி.மு.க. அரசு கடந்த 8 மாதங்களில் மட்டும் 5 புதிய மாவட்டங்களை அறிவித்திருப்பது, ஒருபக்கம் மக்களுக்கான வளர்ச்சி என வரவேற்கப்பட்டாலும்... அது புதிய சர்ச்சையையும் எழுப்பியிருக்கிறது. நிர்வாக வசதிக்காகவும் பொதுமக்களின் கோரிக்கையின் படியும் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது. அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி என்ற புதிய மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 5 புதிய மாவட்டங்களும் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

tamilnadu



திருப்பத்தூரை மாவட்ட தலைமையிடமாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பல பல போராட்டங்களை பல்வேறு கட்சிகளும் நடத்தின. அதன்பின், வேலூர், திருப்பத்தூர், அரக்கோணம் என மூன்றாகப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. தேர்தலின்போது மட்டுமே வாக்குறுதி தருவார்கள். ஆனால், நிறைவேற்றமாட்டார்கள். அதற்குக் காரணம், அதிகாரம், வருமானம் போன்றவை தடைப்பட்டுவிடும் என பெரிய மாவட்டமான வேலூர் மாவட்ட பிரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. கடந்த மாதம் சட்டப்பேரவையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டை பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணையில் வேலூர் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக உள்ள அரக்கோணத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை காஞ்சிபுரம் மாவட்டத்தோடும் மற்றொரு பகுதியை செங்கல்பட்டு மாவட்டத்தோடும் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டது. அதனால், அரக்கோணம் தனி மாவட்டமில்லை என்று முடிவு செய்தார்கள் மக்கள். 

 

district



வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதும் "எதிர்காலத்தில் அ.தி.மு.க. ஜெயிக்க மாவட்டம் பிரிப்பது பயன்தரும்' என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஏற்கனவே மாவட்டப் பிரிப்பு கோரிக்கை ஃபைலை தூசு தட்டி எடுத்து ஏலகிரி (திருப்பத்தூர்), ராணிப்பேட்டை என இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்கி வேலூரை மூன்று மாவட்டமாகப் பிரித்து சுதந்திரதின விழாவில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல்தான், நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உதயமானதாக உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையின்போது அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அறிவிப்பு வெளியாகி நாட்கள் கடந்தும் அதில் எந்தெந்த சட்டமன்றங்கள் அடங்கியுள்ளன என்கிற நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்படவில்லை. ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் போன்ற 5 தொகுதிகள் புதிய தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்படும் என்கிற தகவல் பரவிய சூழலில்... "சங்கரன்கோயில் தொகுதியை ஒதுக்கக்கூடாது, அது நெல்லை மாவட்டத்துடனேயே இருக்கவேண்டும்' என்று விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இதையே வைகோவும் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறார்.

 

issues



நெல்லை ஆட்சியர் நடத்திய விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் படுகாரமாகப் பேசிய விவசாயிகள், "சங்கரன்கோயில் நெல்லையிலேயே தொடரவேண்டும்' என்று ஆட்சியர் ஷில்பாவிடம் மனுக்களை கொடுத்திருக்கிறார்கள். பல தரப்பிலும் எதிர்ப்பு வலுக்கிறது. இதுகுறித்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொறுப்பாளர் ரங்கப்பிரசாத் நம்மிடம், “ஒரு புதிய மாவட்டம் உருவாகும்போது புதிய செலவுகளும் மிகஅதிகமாக ஏற்படும். மாவட்ட நிர்வாகத்திற்கு 100 கோடி ரூபாய் செலவழித்து மக்கள் நலத்திட்டங்களுக்கு 20 கோடி ரூபாய்தான் செலவழிப்பார்கள்.

 

admk



90-களில் திருச்சி மாவட்டத்திலிருந்து கரூர் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக்கப்பட்டது. ஆட்சியர், எஸ்.பி., என மேலிட பதவிகள் நிரப்பப்பட்டதே தவிர கீழ்மட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் நிர்வாக முறை ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் அதிகரித்தன. இருக்கும் மாவட்டங்களில் புதிய தாலுகாக்களை உருவாக்கி தாசில்தார்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்துகொடுத்தாலே மாவட்ட ஆட்சியர்களுக்கான சுமை குறையும். மாவட்டங்களை பிரிப்பது பல சமயங்களில் அரசியல் ஆதாயத்துடன் முடிந்து விடுகிறது''’என்கிறார். 


"நிர்வாகம் எளிது, மக்களுக்கு அலைச்சல் இல்லை என்பது சரியானதே... ஆனால் "பாரதீய ஜனதா கட்சி காஷ்மீரை அங்கீகாரம் இல்லாத பிரதேசமாக மாற்றியதல்லவா? அதேபோல, ஒவ்வொரு மாநிலத்தையும் இரண்டாக, மூன்றாகப் பிரிக்க... பிரிக்க மாநிலங்களின் வலிமையை, அதிகாரத்தை துண்டாக்குவதுதான் இதன் நோக்கம்''’என்று உறுதியாகச் சொல்லும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு நம்மிடம், ""தமிழகத்தை இரண்டாக உடைப்பதுதான் பா.ஜ.க.வின் தந்திரம். அப்போது, தமிழகம் என்ற மாநிலம் வலிமையற்றுப் போய்விடும். தேசிய இனங்களின் வேகத்தைக் குறைத்து, பிரிந்த இரண்டு மாநிலங்களுக்குள் பிரச்சனையை உண்டாக்குவார்கள். உதாரணத்துக்கு பல வருட போராட்டங்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்து தெலங்கானா, சீமாந்திரா என ஆனது. இரண்டு மாநில மக்களுமே தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்கள்தான். ஆனாலும் அவர்களுக்குள்ளே பெரும் பகையாக மாறிவிட்டது. அதேபோல், ஸ்டெர்லைட், மீத்தேன், அணுமின் திட்டம், ஹைட்ரோகார்பன் என ஒருங்கிணைந்து போராடும் தமிழினத்தில் மிகப்பெரிய பகையை உண்டாக்கத்தான் மாநிலங்கள் பிரிப்பு. பா.ஜ.க.வின் தொலைநோக்கு திட்டத்தைத்தான் முதல்வர் எடப்பாடி மாவட்டப் பிரிப்பு என்கிற பெயரில் செயல்படுத்துகிறார். 

இது மக்களை பிரிப்பதற்கான சதித்திட்டம்தான். தமிழர்களாகத்தான் இருப்போம். ஆனால், பக்கத்திலுள்ள கடலூர் மாவட்டத்திற்குப் போகமுடியாத சூழல் ஏற்படலாம். காரணம், அது வேறு மாநிலமாக இருக்கும். மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபாடு உருவாகும். எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ அவர்களே அந்த மாநிலத்தை ஆளக்கூடிய அவலநிலை ஏற்படலாம். மாநிலக்கட்சிகளின் வலிமை குறையக் குறைய தேசியக்கட்சிகள் வலிமையாகும். இதன்மூலம் மாநிலங்களை பலவீனப்படுத்தி ஒரே நாடு ஒரே தலைவர் என்று ஒற்றைநாடாக உருவாக்கப் பார்க்கிறார்கள்''’என்கிறார் விரிவாக. 

"தமிழகமே கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, இன்னும் புதிய மாவட்டங்களை உருவாக்கி புதிய பணி நியமனங்களை செய்ய தமிழக அரசிடம் ஏது நிதி?' என்று கேள்வி எழுப்புகிற தி.மு.க. எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நம்மிடம், ""2003-லிருந்து 2014- வரை தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை சிறப்பித்துக்கொண்டே வந்தது. உதாரணத்திற்கு, ஒரு ரூபாய் வருமானத்தில் 19 பைசா வட்டி கட்டினோம். 2014-ஆம் ஆண்டில் 1 ரூபாய் வருமானத்தில் 11 பைசா வட்டிகட்டினால் போதும் என்ற நிலை வந்தது. ஆனால், 2014 ஜெயலலிதா அம்மையார் ஜெயிலுக்குப் போனபிறகு இன்றைய சூழலில் 1 ரூபாய் வருமானத்திற்கு மறுபடியும் 18 பைசா வட்டிகட்டவேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். ஐந்து வருடத்திலேயே இப்படியொரு நிலைமை. மாநிலத்தின் வருமானம், உற்பத்தியில் சராசரியாக 14 சதவீதம் வந்துகொண்டிருந்தது. இப்போது, வெறும் 10 சதவீதம்தான் வந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட உற்பத்தியில் இந்த மாநிலம் 4 சதவீதம் இழந்துவிட்டது. இதற்கு உண்மையான காரணம், வருமானம் வரக்கூடிய அத்தனை துறைகளிலும் ஊழல் நடப்பதுதான். ஊழல்களை களைந்தால் மட்டுமே மாவட்ட மக்களுக்கு நன்மைகளை செய்யமுடியும். 

13 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள வேலூரை மூன்றாகப் பிரிக்கும் அரசாங்கம் 20 தொகுதிகளைக் கொண்ட சென்னையை ஏன் பிரிக்கவில்லை? பதவியின் பலன்களை பகிர்ந்தளிக்கவே மாவட்டப் பிரிப்பு. மேலும், மோடியும் அமித்ஷாவும் எடுக்கும் முடிவில் யாருமே தலையிட முடியாது என்ற நிலையில் ஜம்மு காஷ்மீரைப் பிளந்து அதிகாரத்தை துண்டாக்கியதுபோல தமிழகத்தையும் மாநிலங்களாக பிரித்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.கவின் கொள்கைகளை நிலைநாட்டப் போகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது''’என்கிறார். மாநில அரசின் வருமானத்தில் 65 சதவீதம் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மற்றும் வாங்கிய கடனுக்கும் வட்டி என சென்றுகொண்டிருக்கும் சூழலில்... இன்னும் மாவட்டங்களைப் பிரித்து அரசு ஊழியர்களுக்கு நிதியை ஒதுக்கினால் தமிழக அரசின் கடன் சுமைதான் அதிகரிக்கும். ஆக, ஊழலற்ற நிர்வாகத்தை செய்து வருமானத்தை பெருக்கி நிதிமேலாண்மையை சரியாக கையாண்டால் மட்டுமே மாவட்ட பிரிப்பால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க முடியும்.

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.