Skip to main content

சிவகங்கையில் மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு!

Published on 03/04/2023 | Edited on 04/04/2023

 

mahaveer statue discovered in sivaganga district

 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறுகானூரில் மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு.

 

புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொடிக்குளம் பொறியியல் பட்டதாரி மாணவர் அபிமன்யு மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் டி.களத்தூர் பெரி.முத்துத்துரை ஆகியோர் அளித்த தகவலின்படி, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன், தலைவர் கரு. ராஜேந்திரன், துணைத் தலைவர் கஸ்தூரிங்கள், உறுப்பினர் மா. இளங்கோ ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மகாவீரர் சமண சிற்பம் மற்றும் முக்குடை நில தான கோட்டுருவ நடுகல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கண்டுபிடிப்பு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன் கூறியதாவது, "சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், சிறுகானூர் கிராமத்தின் குண்டடி காளி திடலில் சமண பள்ளிக்கு நில தானம் வழங்கிய முக்குடைக்கல்லும், மகாவீரர் சிற்பமும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்குடைக்கல்லின் மையத்தில் காணப்படும் முக்குடை அமைப்பு சமண சமயத்தின் முக்காலத்தையும் உணர்த்தும் சமணத்தின் புனித சின்னமாகும். இதன் இருபுறங்களிலும் குத்துவிளக்கு பொறிக்கப்பட்டிருக்கிறது. இடது புறம் மேற்பகுதியில் காணப்படும் மேழி (ஏர்) அமைப்பு, வேளாண் குடிகள் சமண பள்ளிக்கு நில தானம் வழங்கியதை குறிப்பதாகவும், வலது புறம் மேல் பகுதியில் வேலியிட்ட மர கோட்டுருவம், விவசாய நிலத்தை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட குறியீடாக கருதலாம். முக்குடைக்கு மேலாக மங்கள மேடு அமைப்பும் கோட்டுருவமாக  சிதைந்து காணப்படுகிறது. இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.

 

குண்டோடி காளி என்ற பெயரில் வழிபாட்டிலிருக்கும் மகாவீரர் சிற்பம், இரண்டேகால் அடி அகலத்துடனும், மூன்றரை அடி உயரத்துடனும் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன் சுருள் முடி தலையுடனும், திறந்த கண்கள், நுனியில் சிறிது சேதமடைந்த மூக்கு, நீண்ட துளையுடைய காதுகள், கீழ் உதடு சிதைந்தும், விரிந்த மார்புடன் அமைக்கப்பட்டுள்ளது. தலையின் பின்புறமாக பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம் எனும் முக்குடையும், அதன் இரு மருங்கிலும் குங்கிலிய மரமும், சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது, மூன்று சிங்க முத்திரை கொண்ட அரியாசனத்தில் மகாவீரர் அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

 

mahaveer statue discovered in sivaganga district

 

பாரம்பரியமாக வழிபட்டு வரும் ராஜேஸ்வரி குடும்பத்தினர் சைவ படையலிட்டு வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் உருவமைப்பு ஒப்பீட்டின் படி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக கருதலாம். ஆவுடையார் கோவில் கழுவேற்ற ஓவியம் சொல்லும் தகவல் உண்மையா?. ஆவுடையார் கோவிலின் மண்டபக் கூரையில் நூற்றாண்டுகள் பழமையான ஓவியங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவையாக சமணர்கள் கழுவேற்றிய காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்றாலும் ஆவுடையார் கோவில் பகுதியில் சமண தடயங்கள் ஏதும் கண்டறியப்படாமல் இருந்தது.

 

mahaveer statue discovered in sivaganga district

 

இந்நிலையில் திருப்புனவாசல் கோவில் கருவறை விமானத்தின் தென்புற பிரஸ்தர பகுதியில் சமண கழுவேற்றும் சிற்பமும் அருகே மன்னன் மற்றும் சைவத்துறவி ஒருவர் நிற்பதாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம் . பத்தாம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் 16 கிமீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது புதிய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும்" என்றார். தலைமை ஆசிரியர் கா. அய்யர், தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ம. திருக்குறள் அரசன், ம. லோகேஷ், சி.விஷ்ணுவர்தன், அ. கவினேஷ் , கோவில் பக்தர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

Next Story

224 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
224 year old inscription discovered

சிவகங்கையில் 1800 ஆம் ஆண்டு நிலதானக் கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

சிவகங்கையில் சிவன் கோயிலுக்கு பின்னால் கல்லெழுத்துடைய கல் ஒன்று கிடப்பதாக கிடைத்த  தகவலின் பெயரில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், ஓவியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், கொல்லங்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார் கொடுத்த தகவலின் படி சிவன் கோவில் பின்னால் உள்ள பழச்சாறு கடைக்கு அருகில்   ஆய்வு மேற்கொண்டோம், அக்கல்லை அங்கு கடை நடத்தி வரும் பரமசிவம் அவர்களின் அனுமதியோடு நகர்த்தி வாசித்துப் பார்த்ததில் அது 1800 ஆவது ஆண்டு கல்வெட்டு,224 ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வந்தது.

சிவகங்கையின் ஐந்தாவது மன்னர்

1729ல் தொடங்கிய சிவகங்கை மன்னராட்சியின் ஐந்தாவது மன்னரான வேங்கன் பெரிய உடையாத் தேவர் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் கொடுத்த நிலதானக் கல்வெட்டு என்பதை கண்டறிந்தோம்.

இதில் சாலிவாகன சகாப்தம், கலியுக சகாப்தம் குறிக்கப்பெற்றதோடு ரௌத்திரி வருடம் ஆடி மாதம் 26 ஆம் தேதி சுக்கிரபூரம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வழங்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு

கல்வெட்டு ஸ்ரீராமஜெயம் என்று தொடங்குகிறது. கல்வெட்டில் மூன்று பக்கங்களில் எழுத்துக்கள் உள்ளன. முதல் பக்கத்தில் 35 வரிகளும் மற்றொரு பக்கத்தில் 35 வரிகளும் இதற்கு இடைப்பட்ட குறுகலான பக்கத்தில் 15 வரிகளும் இடம்பெற்றுள்ளன.

35 வரிகள் இடம்பெற்றுள்ள பகுதியும் மற்றொரு பகுதியில் 35 வரிகள் இடம் பெற்றுள்ள பகுதியும் நிலத்தை தானம் கொடுத்த செய்தியை, சிவகங்கை மன்னர்  வீரப்பட்டனுக்கு நிதானம் கொடுத்த  செய்தி இடம் பெற்றுள்ளது. குறுகலான 15 வரிகளில் இதை எழுதியவர்  விஸ்வாமிதாசன் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

224 year old inscription discovered

கல்வெட்டுச்செய்தி

மோர்க்குளி எனும் கிராமத்தை நான்கு எல்லை பிரித்து அளவிட்டு சர்வ மானியமாக சடச்சியம்மனை பூசிக்கிற வீர பட்டனுக்கு பரம்பரையாக அனுபவித்துக் கொள்ள இந்த நிலதானம் வழங்கப்பட்டுள்ளது‌.எல்லை பிரிப்பில் முத்தூர் குடியிருப்பு, அரியநாச்சி புரம், மற்றும் பல கண்மாய்கள், கண்மாய் நீர் பிடிப்பகுதிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டு யாதொரு காரணத்தினாலோ  மோர்க்குளி கிராமத்திற்கு போகாமல் இங்கேயே கிடந்துள்ளது‌. மேலும் இது தொடர்பான செப்பேடு உரியவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.

கல்வெட்டுவரிகள் முதற்பக்கம்

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகாமண்டலாதிபன் பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியார் சிங்காசனதிபன் ரவி குலதிலகன் ராஜசிகாமணி சிங்கக் கொடியரதிபன் அஷ்டலட்சுமி விலாசம் பொருந்திய ஸ்ரீமது சிவகங்கைச்சீமை  ஆதி நகரத்தாராகிய ஸ்ரீ முத்து அரசு நிலையிட்ட முத்து விசைய ரகுநாத முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் அவர்கள் தர்மசாசனம் பண்ணிக் கொடுத்தபடி சாலிவாகன சகாப்தம் 1722 கலியுகாப்தம் 4902 யின் மேல்செல்லா' நின்ற ரௌத்திரி வருஷம் ஆடி மாதம் 26 ஆம் தேதி சுக்கிரபூரம் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதர்ணத்தில் மோர்க்குழி சடைச்சியம்மனை பூசிக்கிற வீர பட்டனுக்கு அரி(தெலுங்குச் சொல்) னு சாசனம் பண்ணிக் கொடுத்தபடி மோர்க்குளி கிராமத்துக்கு நான்கு எல்லைப்படி கீழ்பார்க் கெல்லை உலகாண்டான் அழகிச்சி பள்ளத்துக்கும் அரியநாச்சி கண்மாய் நீர்ப்பிடிப்புக்கும்

இரண்டாம் பக்கம்

மேற்கு தென்பாக்கெல்லை நம்பி செட்டிக் கண்மாய் நீர் பிடிப்புக்கும் கல்லுச்சேரி தர்மத்துக்கும் தென்கரைக்கும் வடக்கு மேல் பார்க் கெல்லை வீராணிக்கண்மாய் கரைக்கும் முத்தூர் குடியிருப்புக்கும் கிழக்கு குத்து  உசலாம்பாரைக்கும் கிழக்கு வடபார்கெல்லை சூலக்கான கண்மாய் பிறகரைக்கும் அய்யனார் குளத்து கண்மாய் தென் கோடி புகும் இதற்கு இந்நான்கெல்லைக்குள் உட்பட்ட மோர்க்குழி கிராமமாக சர்வ மானியமாக சாசனம் செய்து கொடுத்ததுனாலே இதைச் சேர்ந்த நஞ்சை புஞ்சை திட்டு திடல் குட்டங் குளம் நத்தம் செய் தலை பாசி படுகை மேல் நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு நிதி நிட்சேப செல தரு பாசன சித்த சாத்தியம் என்று சொல்ல செய்த அட்ட போகமும் சாசனம் செய்து கொடுத்ததனாலே  அச்சந்திரார்த்தமாக புத்திர பரம்பரையாக ஆண்டு அனுபவித்துக் கொள்வார்.

மூன்றாம் பக்கம்

இந்த சாசனத்தை எழுதியவன் உபய சம்பந்த நம் கோத்திரத்தைச் சார்ந்த திருவேங்கடம் ஆசாரியன் குமாரன் விஸ்வாமி தாசன்.

கல்வெட்டு வடிவமைப்பு

செப்பு பட்டயங்களில் இடம்பெறும் நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், பாசி, படுகை போன்ற சொற்கள்  இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.  மேலும்  பல இடங்களில்  கிரந்த எழுத்துடைய சமஸ்கிருத சொற்கள் விரவியதாகவும் ஓரிடத்தில் தெலுங்குச் சொல்லும் இடம்பெற்றுள்ளது‌. குறுகலான பக்கத்தில் இந்தச் சாசனத்தை எழுதியவன் உபய சம்பந்த நம் கோத்திரத்தைச் சார்ந்த திருவேங்கடம் ஆசாரியான் குமரன் விஸ்வாமிதாசன். என்று கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரந்த எழுத்துகள் இடம்பெற்றுள்ள வரிகள் தொல்லியல் துறை அலுவலர்களிடம் மேல ஆய்வு செய்யப்பட்டன, இக்கல்வெட்டு விரைவில் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.