Skip to main content

நல்லரசை நிறுவிய நாயகன்...

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

இன்று விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று. இன்றுவரை பலருக்கும் ஒரு தீவிரவாத அமைப்பாகவும், சிறிய குழுவாகவுமே சுருக்கிக் காட்டப்படுகிறது விடுதலை புலிகள் அமைப்பு. ஆனால் இந்த இயக்கம் நேர்த்தியும், ஒழுக்கமுமான ஒரு அரசை நடத்தியிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அந்த நல்லரசின் அங்கங்களாக செயல்பட்ட சில நிறுவனங்களைப் பற்றிப் பார்ப்போம்.

தமிழீழ வைப்பகம்

யாழ்ப்பாணத்தில் 1994ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த இந்த வைப்பகத்தில் கிட்டத்தட்ட 100 பேர் பணியாற்றினர். இது வங்கியாகவும், நிதி சேவை வழங்கும் இடமாகவும் செயல்பட்டு வந்தது.

தமிழீழ போக்குவரவுக்கழகம்

விடுதலை புலிகளால்  தமிழீழ மக்களின் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த தமிழீழ போக்கு வரவுக் கழகம்.

செஞ்சோலை இல்லம்

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த இல்லம். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக இல்லங்கள் இருந்தன.

தமிழீழ நீதிமன்றம்

தமிழீழ நீதிமன்றம், சட்ட ஆக்க கழகம், புலனாய்வு துறை என மூன்று இருந்தது. இதன் கீழ் நீதி விசாரணைகள் நடந்தன. தமிழீழ சட்டக்கல்லூரியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ காவல்துறை

1991ம்  ஆண்டுமுதல் 2009 வரை செயல்பட்டு வந்தது. இது பிரபாகரனின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கியது.

இது தவிர, தபால் நிலையம் மற்றும் அதுபோன்ற துறைகளும் இருந்தன. தமிழீழ பகுதியில் ஒரு முழு அரசின் செயல்பாடுகளை மேற்கொண்டனர் விடுதலை புலிகள்.

பாதுகாப்பில் மிக கவனமாக இருந்த இவர்கள் கிட்டத்தட்ட 18 தரைப்படை பிரிவுகள், ஏழு கடற்படை பிரிவுகள், இரண்டு வான்படை பிரிவுகளையும் கொண்டிருந்தனர்.  மருத்துவம், அரசியல், அறிவியல் என பல துறைகள் இருந்தன. இதுத்தவிர ரகசிய பிரிவுகளும் இருந்தன. எப்பொழுதும் வரலாறு என்பது யாரால் நிகழ்த்தப்படுகிறதோ அவர்களை விட, யாரால் எழுதப்படுகிறதோ, பரப்பப்படுகிறதோ அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது...