Skip to main content

 நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயமானதா ?

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

அரசியல் கட்சிகளிடம் நம்பிக்கையின்மையும் வெறுப்பும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் அதிகரிக்கும்போது அவர்களுக்கு "நோட்டா' மீதான மோகம் அதிகரிக்கிறது. ஆனால், "நோட்டாவுக்கு அளிக்கும் ஓட்டு பயனற்றதா?' என்கிற கேள்வி வாக்காளர்களிடமும், நேர்மையான தேர்தலுக்காகப் போராடும் சமூக அமைப்புகளிடமும் எதிரொலிக்கின்றன.

தேர்தல் நன்னடத்தை விதிகள் (1961) செக்ஷன் 49(ஓ)-வின்படி, எந்த ஒரு வேட்பாளருக்கும் "வாக்களிக்க விருப்பமில்லை' என தெரிவிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, படிவம் 17-ஏ மூலம் கையெழுத்திட்டு வாக்காளர்கள் தனது வாக்கைப் பதிவு செய்யலாம். ஆனால், இப்படியொரு நடைமுறை இருப்பது வெகுஜன மக்களுக்கு  நீண்டகாலம் தெரியாமல் இருக்கிறது. 

 

nota



இந்த நிலையில், 49(ஓ) பிரிவு குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், ""யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என நினைக்கும் வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா (சஞபஆ - சர்ய்  ஞச்  பட்ங் ஆக்ஷர்ஸ்ங் ) பதிவுக்கான பட்டனை இணைக்க வேண்டும்'' என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு 2013-ல் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனையடுத்து 2013-க்கு பிறகு நடந்த அத்தனை சட்டமன்றத் தேர்தல்களிலும், 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நோட்டாவை அறிமுகப்படுத்தியதுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதற்கான இடத்தையும் அளித்தது தேர்தல் ஆணையம். 

 

election commision



2013-க்கு பிறகு நாடுமுழுவதும் நடந்த தேர்தல்களை கணக்கிடும்போது சராசரியாக 1 சதவீத வாக்கு  நோட்டாவுக்கு விழுந்துள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டுமே பதிவான ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெரியளவிளான விவாதத்தை உருவாக்கியது. நோட்டா வாக்குகள் ஏற்படுத்திய அந்த தாக்கம், தற்கால அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் மீதான மக்களின் வெறுப்புணர்வை  பிரதிபலிப்பதாகவே இருந்தன.

 

nota

 

இந்தச் சூழலில், நோட்டா குறித்த பொதுநல வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் 2017-ல் நடந்தபோது, "35 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள்  நோட்டாவுக்கு பதிவானால், போட்டியிடும் வேட்பாளர்கள் எவர்மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக கருதவேண்டும். அதனால் அந்த தொகுதியின் முடிவுகளை செல்லாது என அறிவிப்பதுடன் மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும்'' என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம். இந்த நிலையில், நோட்டாவுக்கு விழும் வாக்குகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுக்கள் குவிந்தபடி இருக்கின்றன. இதற்கு காரணம், வெகுஜன மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் தேர்தல் ஆணையம், அதன் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால்தான். 

இதனால், "நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயமானதா?' என்கிற கேள்வி தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் பரவலாக எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. நோட்டா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும்’இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.செல்வராஜிடம் இது குறித்து விவாதித்தபோது, ""மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலுள்ள ஒவ்வொரு சின்னத்துக்கும் பின்னால் அரசியல் கட்சியைச் சார்ந்த ஒரு நபரோ அல்லது தனி நபரோ இருப்பர். நோட்டாவுக்குப் பின்னால் எந்தவொரு தனி நபரும் இல்லை என்பதால் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயம் என சொல்கிறார்கள். இது ஏற்புடையதல்ல.  தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற சின்னம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அப்படியானால் மற்ற சின்னங்கள் பெற்ற குறைந்த வாக்குகள் விரயமானவை என்றா சொல்லப்படுகிறது... இல்லையே! "வெற்றிபெற்ற சின்னத்தைத் தவிர மற்ற சின்னங்களுக்கு விழுந்த வாக்குகள் விரயம் என சொன்னால், நோட்டா வாக்குகளையும் விரயம் என சொல்லலாம். 

நோட்டாவுக்குப் பின்னால் தனி நபர் யாரும் இல்லை என்பதற்காக நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளை மதிப்பிழக்க செய்யக் கூடாது. ஏனெனில், வாக்களிப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தேர்தல் நடைமுறை விதிகளின் பிரிவு 49(ஓ)-ன் படியும்  வாக்கு எந்திரத்தில் நோட்டாவை ஒரு சின்னமாக உருவாக்கியது தேர்தல் ஆணையம். நோட்டா சின்னம் அதிக வாக்குகளைப் பெற்றால் அதனை வெற்றிபெற்றதாக அறிவிப்பதுதான் சட்டபூர்வமானது. 

இதிலுள்ள ஒரே சிக்கல், நோட்டாவுக்கு பின்னால் உரிமைக் கோரும் தனிநபர் யாரும் இல்லை என்பதுதான். தீர்வை வழங்கவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.  ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவர் மீதும் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை இழக்கும்போது அம்மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆளே இல்லாத நோட்டாவுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டால்தான், நேர்மையான வேட்பாளர்களை களமிறக்க அரசியல் கட்சிகள் முன்வரும். அதனால், நோட்டா உருவாவதற்கு காரணமாக இருந்த உச்சநீதிமன்றம், நோட்டாவுக்கு விழும் வாக்குகளுக்கு சட்ட அங்கீகாரத்தைத் தர முயற்சிக்க வேண்டும். அதற்கான தீர்வினைக் கண்டறிவதும் உச்சநீதிமன்றத்தின் கடமை.. ஆக, நோட்டாவுக்கு விழும் வாக்குகள் விரயமானதல்ல; மாற்றத்திற்கான ஒரு புரட்சி'' ’ என்கிறார் மிக அழுத்தமாக.
 

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே!'-மோடி அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே' என பாஜக அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு நிறுவனம்  தூர்தர்ஷன். சமீபத்தில் அதன் இலச்சினையின் நிறம் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் பொதிகை என்பதை சமீபத்தில் 'டிடி தமிழ்' என்று மாற்றிய தூர்தர்ஷன் நிறுவனம், அதனுடைய இலச்சினையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காவி நிறம் என்பது ஒரு கட்சியின் அடையாளமாக இருக்கும்போது, இந்த நிறம் மாற்றம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அந்தக் கட்சிக்காக அரசு தொலைக்காட்சி நிறுவனமே கட்டணம் இல்லாமல் பிரச்சாரம் செய்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

தூர்தர்ஷன் மேலதிகாரிகள் இந்த நிறமாற்றம் காவிநிறமல்ல, ஆரஞ்சு நிறம் என விளக்கம் அளித்துள்ளனர்.ஏன் இந்த நிறமாற்றம் தேர்தல் நடைபெறும் போது செய்தார்கள்? அதற்கான அவசரத் தேவை என்ன வந்தது இப்போது? இது அந்தக் கட்சிக்கான அரசியல் ஆதாயத்திற்கானது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

சமீபத்தில் ஏப்ரல் 5 அன்று இரவு 8 மணி மணிக்கு 'கேரள ஸ்டோரி' படத்தை அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒளிபரப்பியது மிகுந்த சர்ச்சையை உண்டு பண்ணியது. கேரள முதல்வர் வேண்டுகோளையும் மீறி இது ஒளிபரப்பப்பட்டது.

ஒரு மதப் பிரிவினரை, ஒரு மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது, எவ்வாறு ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தேர்தல் நேரத்தில் அதை ஒளிபரப்பு செய்யலாம்?

தேர்தல் நேரத்தில் மத மோதலை உண்டு பண்ண ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தூண்டியதாகவே கருத வேண்டியுள்ளது.

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் ஏன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது? தேர்தல் ஆணையம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எல்லாம் இந்திய மக்களின் மனங்களில் எழுந்துள்ளது.

எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் தூர்தர்ஷன் இலச்சினை கலர் மாற்றத்தை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.