Skip to main content

"அந்த இரவு வராமல் போய் இருந்தால்..." பணமதிப்பிழப்பும் இந்தியர்களின் மகிழ்ச்சியிழப்பும்!

Published on 08/11/2019 | Edited on 05/03/2020


நவம்பர் 8 ஆம் தேதி மூன்றாண்டுகளுக்கு முன்பு சரியாக மணி இரவு 8.45 இருக்கும். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பிரியாணிக்கு மிகவும் பிரபலமான பாவர்ச்சி என்ற ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருந்த அந்த தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞருக்கு தெரியவில்லை இன்னும் சில வினாடிகளில் கையறு நிலையில் நாம் நிற்கப் போகிறோம் என்று. உணவருந்திய அவர் 260 ரூபாய் பில்லுக்காக 500 ரூபாய் தாளை கொடுக்கிறார். சில வினாடிகளில் 500 ரூபாய் வேண்டாம் நூறு ரூபாய் தாள் இருந்தால் கொடுங்கள் என்று கல்லாவில் இருந்தவர் அவரிடம் கூறினார். என்ன! இவ்வளவு பெரிய ஹோட்டலில் சில்லரை இல்லையா? நாம பல முறை ஆயிரம் ரூபாயை தாளை கொடுத்தே மீதி சில்லரை வாங்கி இருக்கிறோமே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே பர்ஸில் பார்வையை செலுத்த, ஒரு சில பத்து ரூபாய் தாள்களும் சில 500 ரூபாய் தாள்களும் மட்டுமே இருந்தது. உடனடியாக என்னிடம் சில்லரை இல்லை பையா! 500 ரூபாய் தாள் மட்டும்தான் இருக்கு என்றான் அவன். செல்லாத நோட்டை வாங்கி நான் என்ற செய்வேன் என்று அவனுக்கு அருகில் இருந்த தொலைக்காட்சி பெட்டியை காட்டுகிறார் அவர். அதிர்ந்துதான் போனான் ஒரு நிமிடம் அவன். கையறு நிலையில் இருந்த அவன் தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து பணத்தை தந்த பிறகே அவர் ஹோட்டலில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

அந்த இளைஞன் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த பணமதிப்பிழப்பு சம்பவம் நடைபெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றது. " நாட்டில் கருப்பு பணம் அதிக அதிக அளவில் புழங்குவதாகவும், தீவிரவாதிகள் கைகளில் கணக்கற்ற கருப்பு பணம் இருப்பதால், அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்றும், அதில் ஏதேனும் சிரமம் 50 நாட்களை கடந்து இருந்தால், என்னை உயிருடன் கொளுத்தி விடுங்கள்" என்றும் பிரதமர் தொலைக்காட்சிகளில் அந்த இரவில் சபதம் எடுத்தார். இன்னும் சில  ஆண்டுகள் கழித்து வரும் இளம் தலைமுறையினர் பிரதமரின் உரையை யூடியூப் இணையதளத்தில் காணலாம். அப்போது அவரே கூட பிரதமராக இருக்கலாம். அல்லது அவர் முன்னாள் பிரதமராக இருக்கலாம். அப்போது அவர் நல்ல முறையில் இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம், அப்படி என்றால் பிரதமர் 50 நாட்களுக்குள் அந்த பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளாரே, ஆஹா.. என்ன ஒரு வேகமான, விவேகமான பிரதமர் என்று கூட அவர்கள் நினைக்கலாம். ஆனால் இந்தியமக்கள் வன்முறையை வெள்ளைக்காரன் காலத்தில் கூட அதிகம் கையில் எடுக்காத நிலையில், தான் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒரு பிரதமருக்கு எதிராக அந்த கடுமையான முடிவை எப்படி எடுப்பார்கள் என்று அந்த இளம் தலைமுறையினருக்கு யாராவது சொன்னால் மட்டுமே தெரியும்!

 

df


கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சம்பவத்தின் காரணமாக வங்கிகள் முன்பும், ஏடிஎம் மையங்களின் முன்பும் நின்று உயிரிழந்ததாக கூறப்பட்டது. 2000 ரூபாய் பெறுவதற்கு வங்கிகள் முன்பு ஏழை எளிய மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடந்தார்கள். சிலர் வரிசையில் தொடர்ச்சியாக பல மணி நேரம் நிற்க முடியாமலும், சிறுநீர் கழிக்க வெளியே சென்று வந்தால் கூட மறுபடியும் அதே வரிசையில் நுழைய விடமாட்டார்களே? என்று பலமணி நேரங்கள் காத்து கிடந்தார்கள். இது ஒருபுறம் என்றால், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் வெளிவந்த அதே தினத்தில் சேகர் ரெட்டி போன்றோர் வீடுகளில் வங்கிகளில் இருக்கும் நோட்டுக்களை விட அதிகமாக புதிய 2000 ரூபாய் தாள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 10 கோடிக்கும் அதிகமான பணம் அவர் ஒருவரிடம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு எப்படி புதிய ரூபாய் நோட்டுக்கள் வந்தது. யார் கொடுத்தது? தொழிலதிபர்கள் பலர் வீடுகளில் செய்யப்பட்ட சோதனையில் பலபேர் வீடுகளில் இருந்து கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட முதல் ஒரு வாரத்தில். ஆனால், ஒரே ஒரு 2000 ஆயிரம் ரூபாய் தாளுக்காக மணிக்கணக்கில் வங்கிகளில் முன் பொதுமக்கள் நின்ற சம்பவங்களும் நம்கண் முன்னால் வந்து போகாமல் இல்லை.

இவ்வளவு பொதுமக்களுக்கு எல்லையில்லா கஷ்டத்தை கொடுத்து செய்யப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நிர்வாக ரீதியாக வெற்றிபெற்றதா என்றால் அதுவும் இல்லை என்றுதான் ஆர்பிஐ சொன்ன கணக்கு சொல்கிறது. நவம்பர் 8க்கு பிறகு தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி. இதில் 97 சதவீதம் பணம் மீண்டும் வங்கிகளுக்கு திரும்பியுள்ளது என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த கசப்பு மருத்தை மக்களுக்கு அளிக்கிறோம் என்றுகூறிய அரசாங்கத்திடமே 97 சதவீத பணம் திரும்ப வருகிறது என்றால் இந்த திட்டம் வெற்றியா? தோல்வியா? என்று இதற்கு மேலும் ஆராய தேவையில்லை. ஆயிரக்கணக்கான சிறு வணிக நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களை இந்த நடவடிக்கையின் காரணமாக முழுவதும் மூடினார்கள். ஏராளமானவர்கள் தங்களின் வேலையை இழந்து வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் சிரமப்பட்டார்கள். புதிய இந்தியா பிறந்தது என்று கொண்டாடியவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் கப்சிப் ஆனார்கள். ஆனால் காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் என்ற சீன பழமொழி மட்டும் மறக்காமல் இந்திய தேர்தல் அரசியலுக்கு பொருந்துகிறது. ஆனால், எக்காரணத்தை கொண்டும் மீண்டும் புதிய இந்தியா பிறந்துவிட கூடாது என்ற ஏக்கம் மட்டும் பலரை தற்போது வரையிலும் வாட்டி வதைக்கிறது!

 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

2000 ரூபாய் நோட்டு: கள ஆய்வில் நக்கீரன் - வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

 Shocking information on the 2000 rupee note issue

 

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு, ‘நாளை முதல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என அறிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. வங்கி வாசலிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் கோடிக்கணக்கான மக்கள் நின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். செல்லாது என அறிவிக்கப்பட்ட தாள்களுக்கு மாற்றாக 2 ஆயிரம் ரூபாய் தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

2023 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறது என அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. மே 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தினமும் 10 நோட்டுகள் வரை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதனைக் கேட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

 

பெட்ரோல் பங்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கிக்கொள்ளப்படும் என அறிவித்தது தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம். அதேபோல் போக்குவரத்துக் கழகங்களிலும் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவித்தாலும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்குவதில்லை என்பதை நமது நேரடி கள ஆய்வு தெரிவித்தது.

 

நாம் சில பெட்ரோல் பங்குக்கு செய்தியாளர் என்கிற அடையாளம் இல்லாமல் சென்று 2000 ரூபாய் தாள் தந்து 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னபோது, 2000 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்க. 500, 1000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் சில்லறை தரக்கூடாதுன்னு முதலாளி சொல்லியிருக்காரு என்றார். மற்றொரு பங்கில் 2000 வாங்காதிங்கன்னு முதலாளி சொல்லியிருக்காருங்க. அதனால் வாங்கமாட்டேன் என்றார். இப்படியே எல்லா பங்குகளும் கூறினர்.

 

இது பற்றி ஒரு பெட்ரோல் பங்க் ஊழியர் நம்மிடம், “தினமும் 30 பேராவது 2000 ரூபாய் நோட்டு எடுத்துக்கிட்டு வந்து 100 ரூபாய்க்கோ, 200 ரூபாய்க்கோ பெட்ரோல் போடுங்கன்னு சொல்றாங்க. அவங்க பேங்குக்கு போகத் தயங்கிக்கிட்டு இப்படி நோட்டு மாத்த முயற்சிக்கறாங்க. அதனால் தான் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கறதில்லை. 2000 ரூபாய்க்கு பெட்ரோலோ, டீசலோ போட்டால் வங்கிக்கறோம்” என்றார்.

 

இவர்கள் சொல்வதில் கொஞ்சம் மட்டுமே உண்மை. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தருகிறேன். ஒரு நோட்டுக்கு 100 ரூபாய் கமிஷன் எனச் சொல்லி ஊருக்கு ஊர் பெரும் கும்பலே சுற்றுகிறது. அவர்கள் சிலர் பெட்ரோல் பங்குகளிலும் உள்ளார்கள். 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படுகிறது என்கிற அறிவிப்பு வந்த அன்றைய இரவே தங்கநகை, டைமண்ட், பிளாட்டினம் விற்பனையகமான ஜுவல்லரிகளில் பெரும் அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட்காரர்கள், பைனான்ஸியர்கள், அரசு அதிகாரிகள் குவிந்தார்கள். ஜி.எஸ்.டி பில் இல்லாமல் நகைகளாக வாங்கினார்கள். திருவண்ணாமலையில் நகைக்கடைக்காரர்கள் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தனியாக கமிஷன் வாங்கினார்கள். அரசியல்வாதிகளிடம் உள்ள பணமெல்லாம் நகைக்கடை, பெட்ரோல் பங்க் வழியாக மாற்றப்படுகின்றன. இதனால் பொதுமக்களிடம் உள்ள 2000 ரூபாய் பணத்தை வாங்க மறுக்கிறார்கள் என்கிறார்கள்.