Skip to main content

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா? நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! 

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

ஊரடங்கு நேரத்தில் வாகனத்தை நிறுத்தும் போலீஸ் கூட ஹெல்மெட் இருக்கிறதா? லைசென்ஸ் இருக்கிறதா? என்று கேட்காமல் முகத்தில் "மாஸ்க்' இருக்கிறதா? என்று கேட்டுத்தான் விரட்டியடிக்கிறார்கள். அந்தளவுக்கு, பொதுமக்களே "மாஸ்க்' மாட்டிக்கொண்டு உலாவும் சூழலில், கோரோனா கொடிய நோய்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ச-95 மாஸ்க் கிடைக்கவில்லை.

2020 மார்ச் முதல் வாரத்திலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச, மருத்துவச்சங்க பிரதிநிதிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் செயலாளர் பீலா ஐ.ஏ.எஸ் ஸையும் சந்திக்க முயற்சித்தார்கள். ஆனால், அமைச்சரும் செயலாளரும் இரண்டுபேருமே டாக்டர்களாக இருந்தும் நேரம் ஒதுக்கப்படவில்லை. முன்பிருந்த சுகாதாரச் செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். யாருடைய கருத்தாக இருந்தாலும் காதுகொடுத்து கேட்பார். அவை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பயன்படுத்திக்கொள்வார். ஆனால், பீலா ஐ.ஏ.எஸ். வந்தபிறகு யாருடைய கருத்துப் பரிமாற்றமும் இல்லாமல் போய்விட்டது. செயலாளர் பீலாவிடம் துறைரீதியாக பிரச்சனைகளைக் கொண்டு செல்லவேண்டிய டி.எம்.எஸ்., டி.பி.ஹெச்., டி.எம்.இ., ஆகிய மூன்று சுகாதார இயக்குனர்களுமே பேச முடியாமல் திணறிவருகிறார்கள்.

 

admk



இந்தச்சூழலில்தான், கொரோனா தமிழகத்திலும் பரவ ஆரம்பித்தது. நிலைமை மோசமாக ஆரம்பித்த நிலையில்தான் சுகாதாரத் துறை முன்னாள் செயலாளரும் பேரிடர் மேலாண்மைக்குழுச் செயலாளருமான இராதாகிருஷணன் சுகாதாரத்துறைக்கு கூடுதல் செயலளாராக ஈடுபடுத்தப்படுகிறார். அதற்குப்பிறகுதான், மருத்துவ உபகரணங்கள் என்னென்ன இருக்கிறது என்று பட்டியல் எடுக்கும் போதுதான் மிக முக்கிய பி.பி.இ. எனப்படும் புரஃபஷனல் புரடெக்ஷன் எக்யூப்மெண்ட்களான டிஸ்போஸபிள் தொப்பி, டிரிபிள் லேயர் மாஸ்க், என் -95 மாஸ்க், ஹேண்ட் சானிடஸைர், கவுன், பாலித்தின் கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்கள்கூட இல்லை என்பது தெரியவருகிறது.


அதற்குப்பிறகு, டி.என். எம்.சி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷனிடம் ஆர்டர் கொடுக்கிறது தமிழக சுகாதாரத்துறை. ஆனால், தனியார் துறையினர் ஏற்கனவே வாங்கி விற்பனை செய்து வருவதாலும் பொதுமக்களும் அதிகம் வாங்கிக்கொண்டதாலும் அரசாங்கத்தின் டி.என்.எம்.எஸ்.சி யால் பர்ச்சேஸ் செய்யமுடிய வில்லை.


இந்தநிலையில்தான், மருத்துவக்கல்லூரி டீன்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்களே மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை வெளியில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று செயலாளர் பீலா ஆணை பிறப்பித்தார். அதன், விளைவுதான் சென்னை எழும்பூர் தாய்-சேய்நல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சம்பத் குமாரி, "வெளியில் மாஸ்க் வாங்கிக்கொள்ளுங்கள்' என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்ட ஆணை பரவி "சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா?' என்று பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

dmk

மேலும், 10 ரூபாய் விற்ற சாதாரண மாஸ்க் 30 ரூபாய்க்கும் 90 ரூபாய் விலையுள்ள என் -95 மாஸ்க் 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வெளியிலும் மாஸ்க் வாங்க முடியாமலேயே நோயாளிகளுடன் ஆபத்தை சந்திக்க ஆரம்பித்தார்கள் அரசு டாக்டர்கள். அவுட் போஸ்ட்டுகளிலும் மாவட்ட பார்டர்களிலும் 5 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அதில் பரிசோதனைகளில் ஈடுபடுகிறவர்களுக்கும் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் நம்மிடம், பொதுமக்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் அவர் சிகிச்சை அளிக்கும் அத்தனை நோயாளிகளுக்கு எளிதில் தொற்றிவிடும் பேரபாயம் உள்ளது. அப்படியிருக்க, என் -95 மாஸ்க் உள்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு உடனே வழங்கவேண்டும். ஒட்டுமொத்த உடலையும் மறைக்கும் கவசமும் வழங்கவேண்டும். ஏற்கனவே, வெண்டிலேட்டர் கருவிகள் குறைவாக உள்ளன. அந்தக்கருவிகள் மற்ற ஹார்ட், கோமா உள்ளிட்ட நோயாளிகளுக்கும் பயன்பட்டுவருவதால் இன்னும் கூடுதலாக வெண்டி லேட்டர்களை வாங்கவேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவேண்டும் என்கிறார் கோரிக்கையாக.

சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் அமைப்புச்செயலாளர் த.நடராஜனிடம் நாம் பேசியபோது, சென்னையில் சுமார் 300 மொத்த விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். இதில், ஊரடங்கு சூழலில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 20 சதவீதம்பேர் மருந்துகள் அனுப்பமுடியாமல் இருக்கிறார்கள். அனைத்து, மருந்துக்கடைகளிலும் தற்போது இலவச டோர் டெலிவரி மூலம் அத்தியாவசிய மருந்துகளை அனுப்புகிறோம். அதாவது, உங்கள் அருகிலுள்ள மருந்துக் கடைக்கு ஃபோன் செய்து வாட்ஸ்-அப்பு களில் டாக்டரின் மருந் துச்கீட்டை அனுப்பினால் வீட்டிற்கே வந்து மருந்துகளைக் கொடுத்து விட்டுப்போவார்கள். 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்ட மாஸ்க்கின் விலை கட்டுப்படி ஆக வில்லை என்ற காரணத்தினால் தட்டுப்பாடு இருந்தது. மத்திய அரசின் விலை நிர்ணயப்படி இனிமேல் அதிகபட்ச விலையாக 16 ரூபாய்க்கு விற்கப்படும். அதேபோல், 100 எம்.எல். ஹேண்ட் சானிட்டைஸர் 50 ரூபாய்க்குமேல் விற்கமாட்டார்கள் என்றார்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கச்செயவதோடு மக்கள் இடைவெளி விட்டு வாங்குமளவுக்கு நடவடிக்கை எடுத்து கோரானா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டும்.
 


 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.