Skip to main content

பா.ஜ.க. ஆட்சியில் மோடியின் பெயரால் நடக்கும் மோசடி 

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

BJP Fraud in the name of Modi in power

 

உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்டவர்கள் நாங்கள் எனப் பெருமை கொள்கிறது பாரதிய ஜனதா கட்சி. தொண்டர்களிடம் நன்கொடை வசூலிக்கும் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி தொடங்கி வைத்தார்.

 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் மற்றும் தீனதயாள் உபாத்யாயாவின் நினைவு நாளையொட்டி 2022 பிப்ரவரி மாதம் 11-ம் தேதி வரை நன்கொடை வசூலிக்கும் பிரச்சாரத்தை 1000 ரூபாய் செலுத்தி பிரதமர் மோடியே முதல் ஆளாக துவக்கியும் வைத்தார்.

 

Narendramodi.in என்ற இணையப் பக்கம் வழியாகவும், NAMO App மூலமாகவும் மக்கள் நன்கொடை செலுத்த முடியும். அதற்கான Link-யும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரதமரே கொடுத்திருந்தார். பிரதமரே நிதி செலுத்தி நன்கொடை கேட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உடனடியாக நன்கொடை செலுத்தத் தொடங்கினர்.

 

பிரதமருடைய ட்விட்டர் பதிவின் கமெண்ட் பகுதியில் அஜய் சர்மா என்பவர் பி.ஜே.பி.க்கும், Swachh Bharat திட்டத்திற்கும் தலா 500 ரூபாய் செலுத்தி அதற்கான ரசீதை பதிவிட்டிருந்தார். நன்கொடைக்கான ரசீதை பி.ஜே.பி. கொடுத்திருந்தது. ஆனால் Swachh Bharat திட்டம் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்த அரசாங்கத்தின் திட்டம். அதற்கு எப்படி பி.ஜே.பி. என்கிற கட்சி நன்கொடை வசூலிக்க முடியும் என்ற பொறி நமக்கு தட்டியது. அதனையடுத்து விரிவான விசாரணையில் இறங்கினோம். ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் நேரடியாக அந்த செயலியைப் பயன்படுத்திய "அனுபவத்தை' விளக்கினார்.

 

BJP Fraud in the name of Modi in power

 

"பிரதமர் மோடி, நன்கொடை செலுத்துங்கள் என கொடுத்திருந்த அதே லிங்கிற்குள் சென்று பார்த்தால் மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. 2015-ம் ஆண்டு ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட மத்திய அரசின் beti bachao beti padhao என்ற திட்டத்திற்கும் கட்சி மூலம் நன்கொடை வழங்கலாம். அதேபோல விவசாயிகளுக்காக kisan seva என்ற திட்டத்திற்கும் நன்கொடை வழங்க முடியும் என தெரியவந்தது. உடனடியாக, Swachh Bharat, beti bachao beti padhao, kisan seva, party fund ஆகிய நான்கு விஷயங்களுக்காக தலா 100 ரூபாய் நன்கொடை செலுத்த முடிவெடுத்தோம். பெயர், செல்போன் எண், ஈமெயில் முகவரி கொடுத்த பின் தனித்தனியாக நன்கொடை வழங்கினோம்.

 

உடனடியாக, அதற்கான ரசீது நம்முடைய ஈமெயில் முகவரிக்கு வந்துவிட்டது. டெல்லியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அலுவலகத்தின் பெயரில் பில் வழங்கப்பட்டிருந்தது. Swachh Bharat, beti bachao beti padhao ஆகியவை அரசாங்கத்தின் திட்டங்கள் என்பதால், அந்த திட்டங்களுக்காக நன்கொடை வசூலிக்க அனுமதி இருக்கிறதா எனக்கேட்டு சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சகத்துக்கும் RTI மூலம் கேள்விகளை முன்வைத்தோம்.


Swachh Bharat திட்டத்தின் பேரில் நிதி வசூலிக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று Ministry of Jal Shakti / Department of Drinking Water & Sanitation பதில் கொடுத்தது. அதேபோல beti bachao beti padhao திட்டத்தின் பெயரிலும் யாரும் நிதி வசூலிக்க அனுமதியில்லை. குறிப்பாக NAMO App மூலம் நிதி வசூலிக்க சிறப்பு அனுமதி வழங்க எந்த விதிகளும் இல்லை என்று மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை The Ministry of Women and Child Development பதில் வழங்கியது.

 

BJP Fraud in the name of Modi in power

 

அந்த பதில்கள் நமக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தன. இந்தியாவின் பிரதமரே மத்திய அரசின் திட்டங்களின் பெயரில் பி.ஜே.பி.க்காக நன்கொடை வசூலிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஒருவேளை NAMO App-க்கும் இந்தியாவின் பிரதமர் அலுவலகத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று அறிவதற்காக தகவல் தொழில்நுட்பத் துறையின் Ministry of Electronics & Information Technology அலுவலகத்திற்கு RTI சட்டத்தின் மூலம் விண்ணப்பம் செய்தோம்.


நம்முடைய விண்ணப்பம் Information Technology அமைச்சகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பிரதமர் அலுவலகத்தோடு NAMO Appக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆவணங்களும் இல்லை என்று பிரதமர் அலுவலகமே பதில் கொடுத்துவிட்டது.


kisan seva என்ற தலைப்பிலும் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசிடம் அப்படியொரு திட்டமே கிடையாது. ஆனால் அதன் பெயரிலும் பி.ஜே.பி. நன்கொடை வசூலித்து வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள மூன்று திட்டங்களுக்கும் நன்கொடை செலுத்தினால் பி.ஜே.பி. கொடுக்கும் ரசீதில் வருமான வரி கணக்கு எண் PAN -AAABB0157F என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


நாம் செலுத்திய நன்கொடைக்கு பி.ஜே.பி. வழங்கிய ரசீது உண்மையா என்பதை உறுதிப்படுத்த ஆன்லைன் மூலமாக பி.ஜே.பி.யில் உறுப்பினர் ஆவதற்கான கட்டணமாக 5 ரூபாயும், பங்களிப்பு நிதியாக 150 ரூபாயும் செலுத்தினோம். டெல்லியில் இருக்கும் மத்திய அலுவலகம் 24 மணி நேரத்திற்கு பிறகு நம்முடைய முகவரி உள்ளிட்ட அடையாளங்களை சரிபார்த்த பிறகு பி.ஜே.பி. உறுப்பினராக நம்மை உறுதிப்படுத்தியது. உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவை ஈமெயில் மூலமாக நமக்கு அனுப்பப்பட்டது. நன்கொடை வழங்கியதற்கு கொடுத்த ரசீதில் இருப்பதும் உறுப்பினர் ஆனதை உறுதிப்படுத்தி அனுப்பிய ரசீதில் இருப்பதும் ஒரே AAA B B0157F என்ற ஒரே PAN நம்பர்தான். ஆக, அரசுத்திட்டங்களின் பெயரில் மட்டுமில்லாது விவசாயிகளின் பெயரிலும் பி.ஜே.பி. அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து வருகிறது.


இந்தியாவில் இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் நன்கொடை வசூலித்து வருகிறது. ஆனால் எந்த கட்சியும் அரசாங்கத்தின் திட்டங்களின் பெயரில் நிதி வசூலித்தது கிடையாது. அரசுத் திட்டங்களின் பெயரில் வசூலிக்கப்படும் நிதியை பி.ஜே.பி. என்ன செய்கிறது? பாவப்பட்ட விவசாயிகளின் பெயரில் இல்லாத KISAN SEVA திட்டத்தின் பெயரில் வசூலிக்கப்படும் நிதி யாருக்காக செலவழிக்கப்படுகிறது என்ற கேள்விகளுக்கான விடை யாரிடம் கிடைக்குமென்று தெரியவில்லை.

ஒன்றிய அரசின் திட்டங்களின் பெயரில் பணம் வசூலிப்பதுடன் 'Party Fund' என நேரடியாகவே கட்சி நிதி வசூலிக்கிறார்கள். இதுபோக 'others' என்ற வகையிலும் நிதி செலுத்த முடியும். அதில் எதற்கான நிதி என்று குறிப்பிட வேண்டும். ராகுல்காந்தி எம்.பி. என்று குறிப்பிட்டபோதும் பணத்தை ஏற்றுக்கொண்டது பா.ஜ.க.வின் ஆப். அதுபோல ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டு 100 ரூபாய் செலுத்தியதற்கும் ஏற்றுக்கொண்டு ரசீது கொடுத்துள்ளனர். இப்படி எதன் பெயரில் வேண்டுமானாலும் யாரிடமும் நிதி வசூல் செய்யும் வகையில் இந்த செயலி உள்ளது.


பி.ஜே.பி.க்கு நன்கொடை வழங்குவோருக்கு referral code ஒன்று கொடுக்கப்படுகிறது. அந்த referral code-ஐ பயன்படுத்தி நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் நிதி செலுத்தினால் நம்மை உற்சாகப்படுத்த வெகுமதியும் கொடுக்கப்படும் என்கிறார்கள். கருப்புப்பணத்தை வெள்ளையாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பி.ஜே.பி. அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் நுட்பமாக நிதி வசூலித்து வருகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது'' என்கிறார்.


பிரதமரே நேரடியாக சம்பந்தப்படுவதால் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் பி.ஜே.பி. நடத்தி வரும் நன்கொடை வசூல் குறித்து பாரபட்சமில்லாத விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் உண்மை கொஞ்சமாவது வெளிச்சத்திற்கு வரும் என்கிறார்கள் களச் செயற்பாட்டாளர்கள்.