Skip to main content

இந்த வாரம் வந்த படங்களில் இதுதான் டார்க் ஹார்ஸ்! வெள்ளைப் பூக்கள் - விமர்சனம்

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

கொலைகாரர்கள் மனஓட்டத்தில் இருந்து கொலைகளை அணுகி, அவர்களை பிடிக்கும் புலனாய்வு அதிகாரி ருத்ரன். காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றபின், மூன்று வருடங்கள் தான் பேசாமல் இருக்கும் தன் மகனைக் காண அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரத்திற்குச் செல்கிறார். மருமகள் அமெரிக்கப் பெண். அன்பாய் பழக வரும் அவளிடமிருந்து ஒதுங்கியே இருக்கிறார்  ருத்ரன். அவர்கள் வசிக்கும் பகுதியில் மர்மமான முறையில் சிலர் காணாமல் போக, மீண்டும் ருத்ரனுக்குள் இருந்த காவல்துறை அதிகாரி கண்விழிக்கிறார். அந்த வழக்கை தனியே துப்பறியத் துவங்குகிறார் ருத்ரன். ஆனால் அந்த வழக்கிற்கு சம்பந்தமானவர்கள் அடுத்தடுத்து காணாமல்  போக, புதிர் முற்றுகிறது. என்ன நடக்கிறது என்பதை ருத்ரன் ஓரளவு கண்டுபிடிக்கத் துவங்கும்போது வழக்கில் மிகப்பெரிய முடிச்சு விழுகிறது. இடையே ஒரு சிறு பெண்ணையும் அவள் தாயையும் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்துகொண்டிருக்கிறான் ஒருவன். குழந்தைகளை கடத்தி மற்றவர்களுக்கு விற்கவும் செய்கிறான். ருத்ரன் துப்பறியும் முடிச்சு இந்த கொடூரனில் வந்து நிற்கிறது. இரண்டு கதைகளும் இணையும் தருணத்தில், அந்த  முடிச்சுகளை ருத்ரன் அவிழ்த்தாரா என்பதே வெள்ளைப்பூக்கள். 
 

vellai pookal

 

 

இத்தனை வருடங்கள் நகைச்சுவை பாத்திரங்களில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட விவேக்கை ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் பார்ப்பதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் வழக்கமான சண்டை அடிதடி என்று இறங்காமல், புத்தியை உபயோகப்படுத்தி வழக்கை முடிக்கும் அதிகாரியாக அந்தப் பாத்திரத்தை வடிவமைத்ததும், கிட்டத்தட்ட முழு படத்திலுமே கூட விவேக்கிற்கு போலீஸ் உடை அணிவிக்காமல் இயல்பான உடையில் உலவவிட்டதும் அந்த பாத்திரத்தில் விவேக்கை நெருக்கமாக பொருத்திப் பார்க்க உதவுகிறது. ஆனால் நடிப்பைப் பொறுத்தவரை, எந்தவித சின்ன குறையும் இல்லாமல் முழுமையாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் விவேக். அவருக்கேயுரிய  இயல்பான நகைச்சுவைகளாகட்டும், போலீஸ் மூளையுடன்  தன் மனதிற்குள் ஒரு செட் போட்டு சம்பந்தபட்டவர்களை விசாரிப்பதாகட்டும், பாசமுள்ள தந்தையாக உடைந்து அழுவதாகட்டும் விவேக் அனைத்து பரிமாணங்களிலும் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். விவேக்கின் மகன், வெளிநாட்டு மருமகள், சார்லி, போலீஸ் அதிகாரிகள் என மற்ற கதாப்பாத்திரங்களில் விவேக்கின் மகனுக்கும் மருமகளுக்கும் மட்டும்தான் வெவ்வேறுபட்ட நடிப்பை வழங்கும் வாய்ப்பு.  அதை சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். 
 

வெள்ளைப்பூக்கள் எனும் பெயர் வெவ்வேறு பரிமாணங்களில் இப்படத்திற்கு பொருந்துகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை குறிக்கும் பொருட்டு, அது எல்லாம் நீங்கி அமைதி வேண்டும் எனும் பொருட்டு, படத்தில் வரும் கடத்தல்களின் முக்கியத் தடமாகவும் இந்த வெள்ளைப்பூக்களே (Dandelions) இருக்கின்றன. குற்றவாளிகளின் மனதிற்குள் சென்று, குற்றவாளியாக மாறி விவேக் துப்பறியும் முறையும், தன் மனதிற்குள்ளேயே ஒரு விசாரணை அறை அமைத்து இறந்துபோனவர்களையும் அதில் கொண்டுவந்து தனக்குள் விசாரணை நடத்துவதும் மிக சுவாரசியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தின் முக்கியமான முடிச்சுகளுமே கூட அந்த விசாரணையில் அவிழ்வது இன்னும் சுவாரசியத்தை கூட்டுகிறது. 
 

ஆரம்பத்தில் இருந்து சந்தேகத்தை கிளப்பும் வகையில் அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவரை காண்பிப்பதும், சந்தேகத்தை கூட்டுவதுபோல் அவரைச்சுற்றி சில சம்பவங்கள் நடப்பதும் விறுவிறுப்பான பக்கங்கள். ஆனால் அந்த கிளைக்கதை முடியும் விதம் அபாரம். அப்படியொரு மனிதத்துடன், நெகிழ்ச்சியுடன் முடிகிறது அந்த அத்தியாயம். வெளிநாட்டை மையப்பட்டுத்திய ஒரு புலனாய்வுப் படத்தில், வெளிநாடுகளின் முக்கியமான அரசியல் பிரச்சினையும் அழகாகக் காண்பிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க ஒன்று. அதுவும் ஒருவரை பார்த்தவுடனேயே அவரது நிறம், உடை, மொழியை வைத்து அவரை சந்தேகப்படும் பொதுப்புத்தியையும் பலமாக சாடுகிறது இந்த அத்தியாயம். படத்தின் முத்தாய்ப்பான அத்தியாயமாக இதைச் சொல்லலாம். 
 

vellai pookal

 

 

அதேபோல் படத்தின் கிளைக்கதையாக வரும் அத்தியாயம். ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஒருவன். இன்னொரு பக்கம் தொடர்ச்சியாய் கடத்தப்படும் இளைஞர்கள். ஏதோ ஒரு இடத்தில் இது இணையப்போகிறது என்று பார்வையாளர்களுக்குத் தெரிகிறது. அதேபோல் விறுவிறுப்பான முறையில் அந்த இரண்டு கதைகளும் ஓரிடத்தில் இணைகிறது.  ஆனால் அந்த இடத்தில் வரும் எதிர்பார்க்க முடியாத அந்த ட்விஸ்ட்டும், அது காட்சிப்படுத்தப்பட்ட முறையும் அட்டகாசம். விறுவிறுவென்று செல்லும் புலனாய்வு காட்சிகள் சீட் நுனிக்கு நம்மை கொண்டு வருகிறதென்றால், இந்த ட்விஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. முடிச்சுகள் இணையும் இடத்தில் இப்படியொரு ட்விஸ்ட்டை வைத்ததும், அதைவைத்தே படத்தின் அடிப்படையான பின்கதையை, படம் சொல்லவரும் கருத்தை சொன்னதும் நல்ல உத்தி. 
 

சுவாரசியமான இந்தத் திரைக்கதையில் சில முரண்கள் இல்லாமலும் இல்லை. ஆங்காங்கே திரைக்கதையிலும் இயக்கத்திலும் தென்படும் சிறிய போதாமைகள், சில இடங்களில் எடுபட்டு சில இடங்களில் எடுபடாமல் கடக்கும் விவேக், சார்லி கூட்டணியின் நகைச்சுவை, விவேக்கின் ஆரம்பகட்ட புலனாய்வு முறைகளும், அந்த காட்சிகளும் கொஞ்சம் அமெச்சூரான முறையில் இருப்பதும் குறைகள். இறுதிக்கட்டங்களில் வரும் புலனாய்வு விறுவிறுப்பை கொடுத்தாலும், அந்த பின்கதையை விவேக் எப்படி கண்டுபிடித்தார், எப்போது கண்டுபிடித்தார், அந்த இறுதிக்கட்ட சம்பவங்களையுமே கூட விவேக் எப்படி ஏற்கனவே தெரிந்தது போல் சொல்கிறார் என்பதிலும் ஏகப்பட்ட லாஜிக் முரண்கள். அதேபோல் அந்த முழு அத்தியாயமும் விவேக்கின் குரலிலேயே விரிவதும் கொஞ்சம் முரணாக இருக்கிறது. 
 

இப்படியான சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும், பதட்டத்தை அதிகரிக்கச் செய்யும் இசை, சியாட்டில் நகரத்தை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவு, சுவாரசியமான திரைக்கதை, நல்ல உள்ளடக்கம் ஆகியன இணைந்து ஒரு நிறைவான உணர்வையே தருகிறது வெள்ளைப்பூக்கள். ஆங்கிலத்தில் Dark Horse என்பார்கள். அந்த குறிப்பிட்ட போட்டியாளரைப் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்காது. ஆனால் போட்டியில் அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தி வெல்வார் அவர். அப்படி, இந்த வார படங்களின் Dark Horse இந்த வெள்ளைப்பூக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!