சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (26.06.2023) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் ஓர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு போதைப்பொருளை ஒழிக்க விளையாட்டில் கவனம் செலுத்துமாறும் அரசு விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து சென்னை ஷெனாய் நகரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, நடிகைகள் பிரியா பவானி ஷங்கர், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, "இப்போதெல்லாம் நிறைய ஸ்கூல்ல 8வது அல்லது 9வது படிக்கிற பசங்க, நண்பர்கள் மூலமாகவோ சாக்லேட் மூலமாகவோ பல்வேறு வழிகளில் பயன்படுத்துறாங்க. என்னால நம்ப முடியல... நேரிலும் பார்த்ததில்லை.
சும்மா ஜாலிக்காக பண்ணுகிறோம் என விளையாட்டாக ஆரம்பிச்சு, ஒரு கட்டத்துல சுயநினைவை இழக்குற அளவுக்கு போயிடுறாங்க. எனக்கு தெரிஞ்ச ஃபேமிலி ஃபிரண்ட் ஒருத்தர் கூட இருக்கிறவர் அப்படி ஆயிட்டாப்ல. அதனால் நாம் எல்லாரும் சேர்ந்து போதைப்பொருள் ஒழிப்புக்கு ஆதரவு தர வேண்டும்" என்றார்.