Skip to main content

“மனம் ஏற்க மறுக்கிறது” - கண் கலங்கிய வெற்றிமாறன்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
vetrimaaran about vetri duraisamy

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் விதார்த்தை வைத்து ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 40க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தார். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. இந்த விபத்தில் வெற்றி துரைசாமி மாயமானதை தொடர்ந்து 8 நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பிறகு கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) அவரது உடல் மீட்கப்பட்டது. பின்பு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்பு தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வெற்றி துரைசாமி செயலாளராக இருந்த ஐஐஎஃப்சி (பன்னாட்டு திரை - பண்பாட்டு ஆய்வகம்) சார்பில் நினைவு அஞ்சலி செய்யப்பட்டது. இதில் ஐஐஎஃப்சி-யின் தலைவர் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்பு பேசிய அவர், “வெற்றி துரைசாமி எங்கு அவரை அறிமுகப்படுத்திக் கொண்டாலும் வெற்றிமாறனின் மாணவர் தான் என்று சொல்வார். எங்கிட்ட தான் சினிமா கத்துக்கிட்டதாகவும் சொல்லுவார். உண்மையிலே நான் தான் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். எங்க இரண்டு பேருக்கும் பறைவைகள், விலங்குகள் என நிறைய விஷயங்களில் ஆர்வம் என்பது பொதுவாக இருக்கும். அந்த ஆர்வங்களை பத்தி நிறைய தெரிஞ்சி வச்சிக்கிறது மட்டுமில்லாமல், அதற்காக ஒரு தேடல் இருக்குற மனிதர். நல்ல ஒயிட்லைஃப் போட்டோகிராஃபரும் கூட அவர். போன வருஷம் ஆப்ரிகா போயிட்டு கொரில்லா குடும்பத்தை போட்டோ எடுத்திருக்கிறார். அதனுடைய தொடர்ச்சி தான் இந்த பயணமும்.

கடந்த 11 வருஷமா நான் என்ன செய்தாலும் அவருடைய பங்களிப்பு ஏதோ ஒரு விதத்தில் இருக்கும். அதனுடைய உச்சம்தான் ஐஐஎஃப்சி. அதை ஆரம்பிக்க முடிவு செய்தபோது, எந்த தயக்கமும் இல்லாமல் ஆரம்பிக்கலாம் என சொல்லி இடம் கொடுத்தார். எல்லாருக்குமே உதவி செய்து, அந்த பழக்கத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் இதை செய்ய முடியும். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனம் ஏற்க மறுக்குது. வெற்றி துரைசாமியின் நினைவாக ஐஐஎஃப்சி சார்பில்,  தமிழில் முதல் திரைப்படம் எடுப்பவர்களுக்கு ஒரு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒயிட்லைஃப் போட்டோகிராப் சம்பந்தமாகவும் ஒரு விருது வழங்க முடிவு செய்துள்ளோம்” என்று கண் கலங்கியபடி உருக்கமுடன் பேசினார்.

சார்ந்த செய்திகள்