Skip to main content

அற்புதம் அம்மாளுக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

udhayanidhi thanks arputhammaal

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. 

 

இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பாராட்டினர். அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றி பேசியிருக்கும் இப்படம் பல நிஜ சம்பவங்களை நினைவுபடுத்துவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. 

 

மேலும், படத்தின் வெற்றியின் காரணமாக மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தது ரெட் ஜெயண்ட் நிறுவனம். இதையடுத்து படத்தின் வெற்றியை முன்னிட்டு ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், வடிவேலு ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி கூறினார் உதயநிதி. அண்மையில் சிறு வயது உதயநிதி கதாபாத்திரத்தில் (அதிவீரன்) நடித்த சூர்யாவை சந்தித்து அவரது கல்விக்கு உதவும் வகையில் லேப்டாப் ஒன்றைப் பரிசாக வழங்கினார். 

 

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பின் ட்ரைலரை மகேஷ் பாபு மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிட்டனர். இந்நிலையில் மாமன்னன் படத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரும் அற்புதம் அம்மாளும் பார்த்து பாராட்டியதாக உதயநிதி தெரிவித்துள்ளார். 

 

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து தங்களுடைய பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஐயா ஆர். நல்லக்கண்ணுவுக்கும், தமிழ்நாடு சிபிஐஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி. ராமகிருஷ்ணனுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் சி. மகேந்திரனுக்கும், அன்பிற்குரிய அற்புதம் அம்மாளுக்கும் எங்கள் அன்பும், நன்றியும்" எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்