Skip to main content

பல்வேறு சர்வதேச விருதுகளை அள்ளிக்கொண்டிருக்கும் ‘டூ லெட்’..!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
Tolet

 

‘டூ லெட்’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிர செய்துள்ளார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன். தேசிய விருது பெற்ற ‘டூ லெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநர் அஸ்கர் பர்காதி எப்படி இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் உங்களால் ஒரு படத்தை உருவாக்க முயன்றது எனக் கூறி இயக்குநர் செழியனை வானளாவப் புகழ்ந்துள்ளார். கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களை கடந்து வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 2007 முதல் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது, நடுத்தர மக்கள் எவ்வாறு இதில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இந்தப் படத்தில் யதாரத்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் செழியன். இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது எப்படி என்பது குறித்து இயக்குனர் செழியன் பேசியபோது....

 

 

 

"கடந்த சில வருடங்களுக்கு முன் விகடன்ல ‘உலக சினிமா’ங்கிற பேர்ல சர்வதேச அளவுல கவனம் ஈர்த்த படங்களை பற்றி எழுதிட்டு வந்தேன். நான் அப்படி ஒரு படம் பண்ண நினைச்சபோது, வாழ்க்கைல அடிக்கடி நாம் பார்க்கிற இந்த வீடு மாறும் பிரச்சனை தான் என் கவனத்துக்கு வந்தது. அதனால்தான் முதல் படத்திலேயே இப்படி ஒரு பிரச்சனையை கையில் எடுத்தேன். இதே வெளிநாடுகளில் நடந்திருந்தால் எப்படி படமாக எடுத்திருப்பார்கள் என்கிற கண்ணோட்டத்தில் இந்தப்படத்தை இயக்கினேன். இரண்டுமுறை ஆஸ்கர் விருது பெற்ற ஈரானிய இயக்குநர் அஸ்கர் பர்காதி இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எனக்கு படம் பார்த்த உணர்வே இல்லை, ஒருவரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக கூடவே இருந்து பார்த்தது போன்று இருந்தது எனப் பாராட்டினார். ஈரானிய படங்களை பார்த்துவிட்டு நாம் ஆஹா ஓஹோவென புகழ்கிறோம். ஆனால் எப்போது ஈரான் நாட்டுக்காரன் நம் தமிழ்ப்படத்தை பார்த்து வாய்பிளக்கப் போகிறான் என்கிற ஆதங்கம் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு நிறையவே உண்டு. இப்போது அவர் இருந்திருந்தால் இதைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்திருப்பார். சர்வதேச விழாக்களில் படத்தைப் பார்த்த பல நாட்டு இயக்குநர்கள், தமிழில் இப்படி ஒரு கலாச்சாராம் இருக்கிறதா, வீடு மாறுவது என்பது இவ்வளவு கஷ்டமானதா என ஆச்சர்யப்பட்டார்கள்.

 

Tolet

 

இன்னும் ஒரு சில நாடுகளில் இந்த வீடு மாறும் பிரச்சனை இருந்தாலும் அது வேறு வடிவத்தில் இருக்கிறது. ஐஸ்லாந்து இயக்குநர் ஒருவர் கூறும்போது, அவரது ஊரில் சுற்றுலாவை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, வீடுகளை எல்லாம் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளாக மாற்றி வருவதால் வீடு மாறவேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகக் கூறினார். அர்மேனியாவில் இதே பிரச்சனை வேறு வடிவத்தில் இருக்கிறதாகச் சொன்னார்கள். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிட்டபோது, அங்கே பாதுகாப்பிற்காக வந்திருந்த துப்பாக்கி ஏந்திய இளம் பெண் போலீஸ் ஒருவர் படம் முடிந்ததும் அழுதுகொண்டே போனது இப்போதும் என் கண் முன்னால் நிற்கிறது. வீடு மாறும் பிரச்சனை வேறு வடிவத்தில் இருந்தாலும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனை, குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றுவது என்பது எல்லா ஊர்களிலும் உள்ளவர்களும் பொதுவாக சந்திக்கக் கூடியது தானே? அதனால் தான் ’டூ லெட்’ பல நாடுகளில் உள்ளவர்களையும் கவர்ந்துவிட்டது எனச் சொல்லலாம். கடந்த வருடம் நவம்பர் 17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாகக் கலந்துகொண்டது ‘டூ லெட்’ படம். அந்த விழா தான் இந்தப்படம் இன்னும் பல விழாக்களில் கலந்துகொள்வதற்கான வாசலை அகலமாக திறந்துவிட்டது. ஒவ்வொரு விழாக்களிலும் படத்தைப் பார்த்த மற்ற நாட்டவர்கள் தங்கள் நாட்டு திரைப்பட விழாக்களிலும் இப்படம் கலந்துகொண்டால் அது தங்களுக்குப் பெருமை எனக் கூறி அவர்களே அழைப்பிதழ் அனுப்பி வரவேற்றனர்.

 

 

 

இதோ தற்போது நடைபெற்று வரும் கோவா திரைப்பட விழாவில் மூன்று போட்டிப் பிரிவுகளில் டூ லெட் கலந்துகொண்டது. இந்தியப் படங்களுக்கான போட்டி பிரிவு, அறிமுக இயக்குநர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சர்வதேச அளவிலான போட்டி பிரிவு, அனைத்துப் படங்களுக்கான சர்வதேச போட்டி பிரிவு ஆகியவற்றில் கலந்துகொள்கிறது. கடந்த 49 வருட கோவா திரைப்பட விழா வரலாற்றிலேயே முதன்முறையாக சர்வதேசப் போட்டி பிரிவில் கலந்துகொள்ளும் முதல் தமிழ்ப் படம் 'டூ லெட்' தான். இத்திரையிடல் நேரம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதனால் மறுபடியும் 27 ந்தேதி திரையிட உள்ளார்கள். விருது பெறும் விபரங்கள் 28 ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது. 'டூ லெட்’ படம் நூறு விழாக்களுக்கு மேல் கலந்துகொள்ளும் என நானே எதிர்பார்க்கவில்லை. என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் படத்தைப் பார்த்துவிட்டு இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுன்னு பாராட்டினார். சர்வதேச விழாக்களில் படத்தை திரையிட்டு வரும் காரணத்தால் இங்கே இன்னும் பிரிமியர் ஷோவாக திரையிட்டுக் காட்டவில்லை. வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிட இருக்கிறோம். சர்வதேச விழாக்களில் பாராட்டுக்களை குவிக்கும் இதுபோன்ற படங்களை தியேட்டர்களில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் சத்யம் தியேட்டர் எங்களுக்கு பக்கபலமாக இருப்பதாகக் கூறியுள்ளார்கள். நிச்சயம் வணிக ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்" என்று கூறினார் செழியன். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த ஹீரோவுக்கு இத்தனை முகங்களா?

Published on 28/04/2020 | Edited on 28/04/2020


 

vattara valaku



தமிழில் ஒரு உலக சினிமாவான 'டுலெட்' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்பே உலகின் பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்று தமிழ் திரையுலகுக்குப் பெருமை சேர்த்தது. 'டுலெட்' படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் செழியன். இவர் 'பரதேசி', 'ஜோக்கர்' உள்ளிட்ட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். 'டுலெட்' படத்தின் கதைநாயகனாக நடித்தவர் சந்தோஷ் நம்பிராஜன்.


செழியனை போலவே சந்தோஷ் நம்பிராஜனும் அடிப்படையில் ஒரு ஒளிப்பதிவாளர்தான். 'பரதேசி' படத்தில் செழியனின் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். 'கருப்பம்பட்டி', 'கத்துக்குட்டி' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். 'டுலெட்' படத்தில் இவர் நடித்ததற்கு செழியன்தான் காரணமென்றாலும் அதன் பிறகு தன் ஆர்வத்தை நடிப்பின் பக்கம் வளர்த்துக்கொண்ட சந்தோஷ், அடுத்ததாக 'வட்டார வழக்கு' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மதுரை வட்டாரத்தில் மண்ணின் வேர்களோடு படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

  agandan



ஒளிப்பதிவாளர், நடிகர் என்பதை தாண்டி இன்னும் சில முகங்களும் இவருக்கு இருக்கிறது. யூ-ட்யூபில், 'சந்தோஷ் நம்பிராஜன்' என்ற தனது சேனலில், நடிப்புப் பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சினிமா தொடர்பான பிற அறிவுரைகளையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து சினிமா முயற்சியில் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்படுகிறார். இது மட்டுமல்லாமல் 'நம்பிராஜன் இன்டர்நேஷ்னல் சினிமாஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'சிங்கப்பூர் தீபாவளி', 'சிங்கப்பூர் பொங்கல்' ஆகிய தனியிசை பாடல்களை தயாரித்து வெளியிட்டார். அந்தப் பாடல்கள் இணைய தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பகிரப்பட்டன. நம்பிராஜன் என்பது இவரது தந்தை கவிஞர் விக்ரமாதித்யனின் இயற்பெயர்.


தற்போது தனது அடுத்த முயற்சியாக, நம்பிராஜன் இன்டர்நேஷ்னல் சினிமாஸ் நிறுவனத்தின் மூலம் முழுக்க முழுக்க மொபைல் ஃபோனிலேயே 'அகண்டன்’ என்ற ஒரு முழுநீள திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ஐ-ஃபோன்-11ப்ரோவில் படமாக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கும் அவர், தனது இந்த ஐடியாவுக்கு வழி காட்டியதாக 'கான்டேஜியன்' பட புகழ் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பர்க்குக்கு நன்றி கூறுகிறார்.           

 

 

Next Story

"என்னை கெட்ட வார்த்தையில் திட்டிய ஒளிப்பதிவாளர்" - ஹீரோ பகிர்ந்த ஷாக் நினைவு  

Published on 03/03/2019 | Edited on 03/03/2019

உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கொண்டாடப்பட்ட 'டுலெட்' திரைப்படம் சென்றவாரம் தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின்  விமர்சனக் கூட்டம் 'கூகை' அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'டுலெட்' நாயகன் சந்தோஷ் ஸ்ரீராம், தான் செழியனிடம் உதவியாளராக சேர்ந்த கதையை கலகலப்பாக பகிர்ந்துகொண்டார். சந்தோஷ். அடிப்படையில் ஒளிப்பதிவாளர் ஆவார். 'கருப்பம்பட்டி', 'கத்துக்குட்டி' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். 'டுலெட்' படத்தின் இயக்குனர் செழியன், 'கல்லூரி', 'பரதேசி' உள்ளிட்ட பல சிறந்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்தான் சந்தோஷ். அவர் பேசியது...

 

tolet santhosh sriram



"நான் ஆரம்பத்தில் சிலரிடம் பணியாற்றினேன். ஆனால், எதுவும் சரியாக அமையலை. தமிழ் சினிமாவில் பொதுவாகவே பெரும்பாலானோர் தங்கள் உதவியாளராக புதிதாக சேர்பவர்களுக்கு எதுவும் கத்துக்கொடுக்க மாட்டாங்க. எல்லா விஷயங்களையும் கொஞ்சம் அடைச்சே வைப்பாங்க. ஒரு சீனை எப்படி எடுக்கணும் என்பதையோ, என்ன மாதிரி புக்ஸ் படிக்கணும் என்பதையோ கூட சொல்ல மாட்டாங்க. அப்படித்தான் ஒருத்தர்கிட்ட நான் வேல பாத்தேன். கூடுதலா அவர் என்னை பயங்கர டார்ச்சர் பண்ணார். சரியென்று அவர்கிட்ட இருந்து விலகி செழியன் சார்கிட்ட சேர முயற்சி பண்ணினப்போ, செழியன் சார். 'நீதான் இப்போ அங்க வேலை பாக்குறியே, ஏன் விலகுற?'னு கேட்டார். நான் சொன்னேன், 'அவர் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறார் சார்'னு. "அப்படி என்ன டார்ச்சர் பண்ணுறார்?" என்று கேட்டார். "என்னை கெட்ட வார்த்தையில் திட்டுறார் சார்"னு சொன்னேன். உடனே அண்ணன் சொன்னார், "அப்போ நீ முதல்ல அந்த ஆளை அடிச்சிட்டு வா, நான் உன்ன சேத்துக்குறேன்" என்று. "என்னது அடிக்கிறதா? அதெல்லாம் ரொம்ப கஷ்டம்"னு சொன்னேன். "அப்படின்னா அட்லீஸ்ட் போன் பண்ணி அவரை திட்டிட்டு வா. நீ ஒரு மனிதன், ஒரு சக மனிதன் உன்னை எப்படி கெட்ட வார்த்தையில் திட்டலாம்?"னு சொல்லி சுயமரியாதை கற்றுக்கொடுத்து, பின்னர் என்னை வேலைக்கு சேர்த்து அங்கீகாரமும் கொடுத்தார். பாத்துக்கங்க, செழியன் சார் கேட்ட குவாலிஃபிகேஷனை. ஆனா, நான் அந்த ஒளிப்பதிவாளர அடிக்கலை. சார் போன் பண்ணப்ப எடுக்கவேயில்லை".

 

director chezhian



இவ்வாறு தன் அனுபவத்தை கலகலப்பாகப் பகிர்ந்துகொண்ட சந்தோஷ், தான் ஒவ்வொரு முறை வேலையில்லாமல் இருந்த போதும் செழியன் திடீரென அழைத்து ஒரு வேலை கொடுத்ததாகவும், அப்படித்தான் 'பரதேசி' படத்தின் மேக்கிங் வீடியோ, பின்னர் இந்த டுலெட் நடிப்பு வாய்ப்பு ஆகியவை கிடைத்ததாகவும் தெரிவித்தார். "சினிமாவில் பொதுவாக, மாலை ஆறு மணி ஆனால் வேறு மனிதர்களாகி விடுவார்கள். ஆனால், எங்க சார் 'கல்லூரி' ஷூட்டிங் தினமும் ஏழு மணிக்கு முடிஞ்சபின்னாடி லேப்டாப் எடுத்து வச்சு எங்களுக்கு ஒளிப்பதிவு குறித்து கற்றுக்கொடுப்பார்" என்று கூறி நெகிழ்ந்தார்.