Skip to main content

அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்துக்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு..! 

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

ஆன்லைன் மூலம் டிக்கெட் கட்டணங்களை வெளிப்படையாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்த நிலையில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது இதற்கு செவி சாய்த்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறியபோது...
 

theaters


"தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஒரு நாளில் எத்தனை காட்சிகளில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளன என்பதை கண்காணிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முதலில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை நடைமுறைக்கு வரும்” என்றார். இந்நிலையில் இதற்கு தியேட்டர் அதிபர்கள் இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசும்போது....
 

zombi


"தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 15 முதல் 20 சதவீதம் டிக்கெட்டுகள்தான் ஆன்லைனில் விற்பனையாகிறது. மீதி 80 சதவீத டிக்கெட்டுகளை நேரில் வந்துதான் வாங்குகிறார்கள். அரசு கொண்டு வந்துள்ள நடைமுறையை ஆதரிக்கிறோம். அதே நேரம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்க வேண்டும் என்பது சிரமமான காரியம். ஆன்லைன் என்றால் வங்கிக்கும். ஆன்லைன் கம்பெனிக்கும் ஒரு தொகையை மக்கள் கட்ட வேண்டி உள்ளது. பெரிய நகரங்களுக்கு இது சாத்தியம். நேரடியாக வாங்கும் டிக்கெட்டுகளுக்கு அரசே ஒரு சர்வர் ஏற்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் கண்காணிக்க முடியும்.

 

 

ஆன்லைன் டிக்கெட் விற்பனை சிரமங்களை அமைச்சரிடம் நேரில் சந்தித்து எடுத்துச் சொல்வோம். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு நகராட்சி வரி 8 சதவீதம் விதிக்கப்பட்டு இருப்பதால் எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. அதை நீக்க வேண்டும். 4 ஆயிரமாக இருந்த தியேட்டர்கள் எண்ணிக்கை 834 ஆக குறைந்து விட்டது. ஒரு தியேட்டரை 3 அல்லது 4 தியேட்டராக மாற்ற அனுமதி கேட்டு மனுகொடுத்து உள்ளோம். அதை ஏற்றால் 4 ஆயிரம் தியேட்டர்களாக மாறும். அரசுக்கும் வருமானம் கிடைக்கும்'' என்றார். மேலும் இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் பேசும்போது.... "ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு குறிப்பிட்ட கம்பெனியோடு ஏற்கனவே ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருப்பதால் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அமைச்சரை நேரில் சந்தித்து இதை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்