Skip to main content

"எந்த வார்த்தையை பயன்படுத்தி நன்றி தெரிவித்தாலும் பத்தாது" -உதவியவர்களை பாராட்டிய சூர்யா

Published on 02/11/2020 | Edited on 02/11/2020
suriya

 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சூர்யா. ஒரு நடிகர் என்பதை தாண்டி பல்வேறு சமூகநலப் பணிகளையும் செய்து வருகிறார். அகரம் என்ற அறக்கட்டளையை நிறுவி, வறுமையால்  கல்வியை  தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு, கல்வியை தொடர உதவி செய்து வருகிறார். கடந்த பத்து வருடங்களில் அகரம் அமைப்பு, மூவாயிரம் மாணவர்களை படிக்கவைத்துள்ளது.

 

இந்தநிலையில், சூர்யாவே நடித்து தயாரித்த படமான சூரரைப் போற்று படம்,  கரோனா பாதிப்பால்  திரையரங்கில் வெளியாகவிருந்த நிலையில் கரோனா பாதிப்பால் ஓ.டி.டி. தளமான அமேசான் ப்ரைமிற்கு விற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அப்படம் விற்பனையான  தொகையிலிருந்து ஐந்து கோடியை, கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட திரைத்துறையினருக்கும், கரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பணியாற்றுபவர்களுக்கும் பகிர்ந்தளிக்கபோவதாக சூர்யா அறிவித்திருந்தார். திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு இரண்டரை கோடியும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், மயான தொழிலாளர்கள் என கரோனா தடுப்பில் களத்தில் நின்று பணியாற்றியவர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகையாக இரண்டரை கோடியும் தரப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இக்கல்வி உதவித்தொகை அகரம் மூலம் தரப்படும் என குறிப்பிட்டிருந்த சூர்யா, அதற்கான விண்ணப்ப படிவத்தையும் வெளியிட்டருந்தார்.

 

அதைத்தொடர்ந்து, இக்கல்வி உதவித்தொகையை கோரி, அகரம் அறக்கட்டளைக்கு 22,000 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. இதைத்  தொடர்ந்து  அகரம் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள், விண்ணப்பித்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்று தகுதியான மாணவர்களை தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 3,240 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்தநிலையில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க பாலமாக விளங்கிய தன்னார்வலர்களை, நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள சூர்யா, "அன்புக்குரிய அகரம் தன்னார்வலர்களே, நீங்கள் தேவதைகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. இந்த கரோனா தொற்றுக்  காலத்தில், வெவ்வேறு  இடங்களுக்கு பயணித்து 3,240 குடும்பங்களுக்கு உதவியிருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்தி நன்றி தெரிவித்தாலும் பத்தாது" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Suriya  Jyothika to act together in movie after 18 years

சூர்யா - ஜோதிகா, கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள், இதுவரை 'பூவெல்லாம் கேட்டுப்பார்', உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

2006ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே  பாண்டிராஜ் இயக்கத்தில் 2015ல் வெளியான பசங்க 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. அப்போது 36 வயதினிலே படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா - ஜோதிகாவே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஜோதிகா,  இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story

மகனின் திறமையைக் கண்டு ரசித்த சூர்யா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
suriya son dev got black belt in karate

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை தவிர்த்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சூர்யாவின் மகன் தேவ், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். சென்னை அஷோக் நகரில், கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகில இந்திய ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் சான்றிதழ் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சூர்யாவின் மகன் தேவ் பங்கேற்று பிளாக் பெல்ட் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 61 மாணவர்களுக்கு பிளால் பெல்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

suriya son dev got black belt in karate

அப்போது தேவ் போட்டியில் கலந்து கொண்டு சண்டையிட்டதை சூர்யா ஆர்வமுடன் கண்டு ரசித்தார். மேலும் தனது போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் மகன் தேவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.