Skip to main content

“இப்படிப்பட்டவர்கள் வளரட்டும்...” -சிம்பு படத் தயாரிப்பாளர் வாழ்த்து!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

suresh kamatchi


ஊரடங்கு நிலை ஐம்பது நாளைக் கடந்து விட்ட நிலையில், திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்னும் ஒரு தெளிவு பிறக்காத சூழலில், இந்தத் தொழிலே மாபெரும் நஷ்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது. அடுத்து என்ன என்ற ஊகிக்க முடியாத நிலையில், தயாரிப்பாளர்களின் நலன் கருதி நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண், ஆர்த்தி, உதயா, இட்ஸ் பிரஷாந்த் மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் தன் ஊதியத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்வதாகச் சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில் தற்போது நடிகர் மஹத் ராகவேந்திராவும் தன் சம்பளத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...


“இன்றைக்கு சமூகமும் சினிமாவும் இருக்கும் சூழலில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நானும் கடந்த பத்து வருடங்களாக இந்தத் திரையுலகில் இருந்து வருகிறேன். சில படங்களில் நடித்துள்ளேன். இன்னும் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என ஆசைப்படுகிறேன். இப்போதுதான் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கரோனா தாக்கம் காரணமாக நிலவி வரும் இந்த ஊரடங்கு சூழலில் சினிமா தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது நம்மை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள்தான். திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கூட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மூன்று தரப்பினரும் சேர்ந்து முடிவெடுத்து, எங்களுக்கு இவ்வளவுதான் தான் கட்டுப்படியாகும், உங்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் கொடுக்க முடியும் என அறிக்கை வெளியிட்டார்கள் என்றால் அதற்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன்..

10% அல்லது 20% குறைத்தாலும் பத்தாது. ஏனெனில் திரையரங்குகளுக்கு மக்கள் வர நாட்களாகும். பாதிக்கும் மேலான சுமை, தயாரிப்பாளர்களுக்கு இருக்கு. போட்ட பணத்தை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்பதே பெருங்கேள்வியாக உள்ளது. இந்தச் சமயத்தில் சக கலைஞர்கள் பாதியளவாவது விட்டுக் கொடுக்க முன்வந்தால் நல்லது. என்னைப் பொருத்தவரையில் அது எத்தனை சதவீதமாக இருந்தாலும் குறைத்துக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என்னைப்போல வளர்ந்துவரும் நிறைய நடிகர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன். என்றுமே ஒரு நடிகனுக்குச் சம்பளத்தையும்தாண்டி நிறைய படங்கள் பண்ணனும், நிறைய கேரக்டர்களில் நடிக்கணும் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்கணும் என்பது தான் ஆசையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

 

 


இந்நிலையில் மஹத்தின் இந்த அறிவிப்பை வாழ்த்தி 'மாநாடு' படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்பின் மஹத்திற்கு மகத்தான மனசு, பாதிக்கு மேலேகூட சம்பளத்தைக் குறைக்கத் தயார் எனச் சொல்லியிருக்கும் மகத் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கட்டும். இப்படிப்பட்டவர்கள் வளரட்டும். வாழ்த்துகள் சகோதரா” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்