Skip to main content

"என்னோடு தான் விஜய் கூட்டணி வைக்க வேண்டும்" - வாக்குவாதமான செய்தியாளர்கள் சந்திப்பு

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

sarathkumar press meet heated conversation

 

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளியான படம் 'போர் தொழில்'. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய இப்படத்தை அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருந்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெற்றி பெற்றது தொடர்பாக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 

 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமாரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், "சூர்யவம்சம் பார்ட் 2வின் கதையை விரைவில் என்னிடம் சொல்வதாக தயாரிப்பாளர் சவுத்ரி சார் சொன்னார். அவர் சொன்ன பிறகு அடுத்த அப்டேட்டை வெளியிடுவேன்" என்றார். பின்பு அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் அப்படி வந்தால் அவருடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, "என்னோடு தான் அவர் கூட்டணி வைக்க வேண்டும். முதலில் அவர் அரசியல் களத்திற்கு வரவேண்டும்" என்றவர், “ஏன் திருப்பித் திருப்பி அதையே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்... உங்களுக்கு பரபரப்பான செய்தி வேண்டும், நீங்கள் எந்த பத்திரிகை” என சற்று கோபமாக கேட்டார். செய்தியாளரும் பதில் சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

அப்போது பேசிய சரத்குமார், "போர் தொழில் பட வெற்றிக்கு செய்தியாளர்கள் தான் காரணம் என நான் சொல்கிறேன். விஜய் அரசியல் வருகை குறித்து உங்கள் பார்வையை சொல்லுங்கள். அதன் பிறகு நான் சொல்கிறேன்" என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்